Skip to main content

அடிமனம் | புதிய கொள்கைக்கு விதை | பெ. தூரன்

படம் - ஹிஸ்டிரியா பற்றி கற்பிக்கும் ஷார்க்கோ
பிராய்டு இதைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவருடைய மனமும் இதில் ஈடுபட்டது. இந்த முறையைக் கையாண்டு பார்க்க அவருக்கும் ஆசையுண்டாயிற்று. பிராயரும் பிராய்டுமாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது இந்த மாதிரியான நோயாளிகளை மனவசிய நிலையிலிருக்கச்செய்து அந்த கோய் தொடங்குவதற்கு முதற் காரணமாக இருந்த சம்பவத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயலுமாறு செய்தனர். அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிட்டால் அதுவே அந்த நோய் நீங்குவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
இந்த சமயத்தில் ஜீன் மார்ட்டின் ஷார்க்கோ (charcot) என்பவர் பாரிஸில் புகழ்பெற்ற வைத்தியராக இருந்தார். மனவசிய முறையைக் கொண்டு மனநோய்களைக் குணப்படுத்த முதன் முதலாக முயன்ற வைத்தியர்களில் இவரும் ஒருவர். இவரிடத்தில் மனவசிய முறையை மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளுவதற்காக பிராய்டு 1855-ல் பாரிஸுக்குச் தூய்மைசென்றார்.
பாரிஸிலிருந்து வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு பிராய்டு மனவசிய முறையைக் கையாண்டு அது அவ்வளவு திருப்தியான பலனையளிப்பதில்லை என்று கண்டார். அந்தக் காலத்தில் மனவசியத்தை சிகிச்சை முறையிற் கையாண்டவர்கள் மனவசியத் தாக்கத்திலிருக்கிற நோயாளிகளைப் பார்த்துச் சில கட்டளைகளையிடுவார்கள். ஒருவனுக்குக் கைவராமலிருந்தால் அவனே மனவசியத் தாக்கத்தில் இருக்கச்செய்து அவனுடைய கையை நீட்டவும் அசைக்கவும் உத்திரவிடுவார்கள். நோயாளி அவ்வாறே செய்வான். மனவசிய உறக்கம் கலைந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்வான். ஆனால் இந்த சக்தி நீடித்திருப்பதில்லை. மறுபடியும் பழைய நிலைமை சில நாட்களிலோ சில மாதங்களிலோ ஏற்படத் தொடங்கியது; அல்லது அதே கோளாறு ஏற்படாவிட்டாலும் புதிதாக வேறு ஏதாவது ஒரு கோளாறு தோன்றத் தொடங்கியது. மேலும் எல்லோரையும் மனவசியத் தாக்கத்தில் இருக்கும்படி செய்யவும் முடியவில்லை.
பிராய்டுக்கு பிராயர் ஒரு சமயம் கூறிய சம்பவமே உள்ளத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. தற்செயலாகக் கண்டுபிடித்த அந்த முறையிலே அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது.
மனவசியத் தாக்கத்திலே இருக்கும்போது நோயாளியை அவனுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி கூறி அதன் வழியாக அந்த மனநோய் ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். அவ்வாறு நோய்க்குக் காரணமான சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்ததும் நோய் குணமாவதை அவர் மேலும் பல சோதனைகளின் மூலம் கண்டறிந்தார்.
சாதாரணமாக ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுவதினலேயே அந்த துக்கம் சற்றுத் தணிகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். யாராவது ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மரணத்திற்காக துக்கம் விசாரிக்கச் செல்லுவதிலும் இந்த உண்மை அடிப்படையாக இருக்கிறது. பலபேர் சென்று துக்கம் விசாரிப்பதால் துக்கப்படுபவர்களின் மனத்திலுள்ள பாரம் குறைகிறது.
கோபம் வந்தவன் மற்றவர்களைத் திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படித் திட்டுவதால் அவன் கோபம் தணிகிறது. இவ்வாறேதான் மனத்தில் அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அநுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கல்களினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கி விடுகின்றன.
இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு மனத்திலுள்ள எண்ணங்களைத் தாராளமாக வெளியில் சொல்லி அதன் மூலம் ஆறுதல் பெறும் முறையை பிராய்டு மேலும் சோதனை செய்ய விரும்பினார்.
பிராய்டும் பிராயரும் சில காலம் சேர்ந்து தொழில் செய்தார்கள். அவர்களுடைய புதிய முறை நல்ல வெற்றியளித்தது. இந்த முறைக்கு அவர்கள் தூய்மையுறும் முறை (Catharsis) என்று பெயரிட்டனர். நோயாளி தன் மனத்திற்கு வரும் எண்ணங்களையெல்லாம் வெளியிலே கூறி ஆறுதல் பெறுவதால் மனத்தின் பாரம் நீங்கித் தூய்மையுறுகிறான்; அவனுடைய மனச் சிக்கல்கள் நீங்குகின்றன.
இந்த முறையின் தோற்றத்திற்கு பிராயர் முதற் காரணமாக இருந்தாலும் அவர் இதைத் தொடர்ந்து கைக்கொள்ளவில்லை; மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் இல்லை. ஆனால் பிராய்டு தொடர்ந்து இதை ஆராய்ந்தார். அதன் பயனாகப் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து மனத்தைப் பற்றிய அறிவிலேயே ஒரு புரட்சியை உண்டாக்கி விட்டார்.
நோயாளி தன் மனத்திலே புதைந்து கிடக்கும் பழைய அதிர்ச்சிகளையும், அநுபவங்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதற்கு மனவசியத் தூக்கமும் அவசியமில்லை என்பதையும், அதை வேறு வகையிலே செய்யலாம் என்பதையும் பிராய்டு தம் அநுபவத்தின் மூலமாகக் கண்டார்.
மங்கலான வெளிச்சம் உள்ள ஒரு அறையிலே நோயாளியைத் தனியாகப் படுக்க வைக்க வேண்டும். யாதொரு விதமான இரைச்சலுமில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்ய வேண்டும். நோயாளியைத் தன் கைகால்களைத் தளர்த்திவிட்டு நல்ல ஒய்வு நிலையில் இருக்கச் செய்யவும் வேண்டும், அந்தச் சமயத்தில் ஏதாவது ஒரு கேள்வி அல்லது குறிப்பின் மூலம் நோயாளியின் மனத்தில் எழுகின்ற எண்ணங்களையெல்லாம் கொஞ்சம்கூட ஒளிக்காமல் அவை தோன்றியவுடனே சொல்லிக்கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும். இப்படித் தாராளமாக எண்ணங்களைச் சொல்லும்போது பழைய அநுபவங்கள், ஆசைகள் எல்லாம் தாமாகவே வெளியாகின்றன. அவற்றின் மூலம், ஒருவனுடைய குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகள், துன்ப அநுபவங்கள் எல்லாமும் வெளியாயின. நோயாளி அவற்றைக் கூறும்போது அவற்றை மறுபடியும் அநுபவிப்பது போல் உணர்ந்து வெளியிட்டான். இவ்வாறு செய்வதன் மூலம் மனத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி மனக் கோளாறும் மறைந்தது.
இதிலிருந்து பிராய்டுக்கு ஒரு முக்கியமான உண்மை வெளிப்பட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகளும், முக்கியமான அநுபவங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும், எண்ணங்களும் முற்றிலும் மறைந்து போய்விடுவதில்லை. அவை மனத்திற்குள் எங்கேயோ அழுந்திக் கிடக்கின்றன. மனத்தின் அந்தப் பகுதி சுலபமாக வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. இம்மாதிரியாக மனத்தில் ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று பிராய்டு கண்டார்; இந்தப் பகுதிக்கு அடி மனம் அல்லது நனவிலி மனம் என்று பெயர் கொடுத்தார். மனத்தின் ஆழ்ந்த பகுதி என்றும், நனவுக்கு எளிதில் வராத இச்சைகள் முதலியவை அழுந்திக் கிடக்கும் பகுதியென்றும் இதை விளக்கலாம்.
நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள் முதலியவைகள் பெரும்பாலும் காமம், சினம், கோபம், அச்சம் முதலான வலிமை மிகுந்த உள்ளக் கிளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவைகளெல்லாம் ஏதாவதொரு காரணத்தால் முதலில் அடக்கப்பட்டிருக்கலாம். சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அடக்கப்பட்டிருக்கலாம். வேறு எத்தனையோ காரணங்களாலும் இவை அடக்கப்படுகின்றன.
இவ்வாறு அடக்கப்படுவதால் உள்ளத்திலே கோளாறுகள் ஏற்படுகின்றன; கவலை தோன்றுகிறது. இவற்றின் வேகம் மிகுந்து விட்டால் மனநோயும் உண்டாகிறது.
மனநோயுடையவர்களை அவர்கள் நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள், அநுபவங்கள் முதலியவற்றை நனவுக்குக் கொண்டுவருமாறு செய்து அவற்றை மீண்டும் மனத்திலேயே அநுபவிக்கும்படி செய்து விட்டால் மனநோய் நீங்குகிறது. மனம் தூய்மையுறுகிறது.
இவ்வாறு மனத்திற்குக் கொண்டுவதற்கு பிராய்டு கண்டுபிடித்த முறையை மேலே கண்டோம். அதற்கு அவர் “தடையிலாத் தொடர் முறை” என்று பெயர் கொடுத்தார்.
ஒரு பெரிய அதிர்ச்சியானது ஹிஸ்டிரியா முதலிய மனநோயை உண்டாக்குகிறதென்று முன்னரே கண்டோமல்லவா? முன்பெல்லாம் ஹிஸ்டிரியா பெண்களுக்குத்தான் உண்டாகும் நோயென்று நினைத்தார்கள். ஆனால் அது ஆண்களுக்கும் வருவதுண்டு என்பதை முதல் உலக யுத்தத்தின் போது தெளிவாகக் கண்டார்கள்.
பயங்கரமான சப்தத்துடன் ஒரு வெடிகுண்டு எதிரிலேயே வெடிக்கும். அது போர்வீரர்களின் மனத்தில் பெரிய பீதியை விளைவிக்குமல்லவா? உள்ளக் கிளர்ச்சி மிகுந்த வீரர்களை இது பாதிக்கிறது. வெடிகுண்டு நேரடியாக ஒரு தீமையும் செய்யாவிட்டாலும் சிலருக்குத் திடீரென்று கண் தெரியாது போய்விடும்; அல்லது காது கேளாது போய்விடும். இது அந்தக் குண்டு வெடித்ததால் மனத்தில் உண்டான அதிர்ச்சியின் காரணத்தாலேயாகும்.
குண்டு வெடித்த அந்தப் பயங்கர அநுபவத்தை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரும்படி செய்துவிட்டால் இந்த நோய் நீங்கிவிடுகிறது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியே சிலருக்கு இந்த வெடிகுண்டு அதிர்ச்சி நோயைக் குணப்படுத்தியிருக்கிறது.
ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதற்கு மனவசிய முறையில் தொடங்கிய சிக்மண்டு பிராய்டு முடிவில் மனப்பகுப்பியல் என்ற மனத்தைப் பற்றிய புதியதோர் உண்மையைக் கூறும் சாஸ்திரத்திற்கு அடிகோலலானார். நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சோதனை செய்து பொறுமையோடு அவர் செய்த ஆராய்ச்சிகளே அவருக்கு உதவியாக கின்றன.
அவர் தமது கருத்துக்களை முதலில் வெளியிட்டபோது எத்தனையோ எதிர்ப்புகள் தோன்றின; எத்தனையோ பேர் அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அவர் தோற்றுவித்த மனப் பகுப்பியல் பொதுப்படையாக எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது; மனத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வதற்கு வழிகாட்டியவர்களில் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு சிறந்த ஸ்தானமும் கிடைத்திருக்கிறது.
பிராய்டு கூறிய விஷயங்கள் எல்லாம் அப்படியே உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது மெய்தான். மனத்தைப் பற்றிப் புதிதாக ஒரு கருத்தை வெளியிடும்போது முதலில் கூறிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அதன் அடிப்படை மட்டும் உண்மையாக இருக்கிறதா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பிராய்டே பிற்காலத்தில் தமது கருத்தின் அம்சங்கள் சிலவற்றை மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவி செய்த பெருமை எவ்வகையிலும் குறைந்து போகாது. உளவியல் என்பதே தத்துவ சாஸ்திரத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சாஸ்திரமாக வளர்ந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. அது குழந்தைப் பருவத்திலிருக்கும் ஒரு சாஸ்திரம். அதிலே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மனத்தின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தவர் சிக்மண்ட் பிராய்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...