Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர்.
குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன.
கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள்.
இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையாகுமா?
வேகம் வேகமாக ஒருவன் ரெயில் வண்டிக்குள்ளே நுழைகிறான். செருப்புக் காலால் உனது கால் விரலை நன்றாக மிதித்துவிடுகிறான். வலி பொறுக்க முடியாமல் உனக்குக் கோபம் பொங்கி வருகிறது. வந்தவன் கன்னத்திலே அறையலாம் என்றுகூடத் தோன்றுகிறது. உடனே அடித்துவிடலாமா? அல்லது வாயில் வந்தபடியெல்லாம் அவனைப் பேசத்தான் செய்யலாமா?
ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறது. அதற்காக உடனே போர் தொடுத்துவிடலாமா?
காமம் குரோதம் பொறாமை இப்படி எத்தனையோ உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் சமூக வாழ்க்கையே நிலைகுலைந்து போகும்.
மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விலங்குகளைப்போல நடக்க முடியாது. சில விலங்குகள்கூட ஓரளவு தமது உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகின்றன என்று தோன்றுகிறது. மனிதன் அவற்றைவிடத் தாழ்வாக நடக்க முடியாது. அவனுடைய நாகரிகம், அவனுடைய பண்பாடு அவற்றின் பெருமையெல்லாம் அழியாதிருக்க வேண்டுமானால், சமூக வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் மனிதன் தனது இழிந்த கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
இயல்பூக்கங்களை அடக்கி அழித்துவிட முடியாது என்று கண்டோம். இயல்பூக்கங்களுடன் சேர்ந்து பல உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆகவே, உள்ளக் கிளர்ச்சிகளையும் அடியோடு அழித்துவிட முடியாது. அப்படி முயலும்போதுதான் மறைமனக் கோளாறுகள் பல உண்டாகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால், இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளையும் இயல் பூக்கங்களையும் வேறு நல்ல வகையில் திருப்பிவிட்டு உயர்மடைமாற்றம் செய்யலாம். காம இச்சையை மாற்ற முயலும் ஒருவன் அவன் பக்தனாக இருந்தால் அதைக் கடவுளிடத்தே உயர்ந்த பக்தியாக மாறச் செய்கிறான்; அல்லது பிராணிகளிடத்தே அளவு கடந்த அன்பாக மாற்றி அவற்றின் சேவையிலே ஈடுபடுகிறான். அவன் கலைஞனாக இருந்தால் அழகிய கலைப்படைப்பின் மூலம் அதை மாற்றுகிறான்.
இச்சைகள் நிறைவேறாத காலத்தில் இப்படிப்பட்ட மடைமாற்றமும் இல்லாவிட்டால்தான் மனக் கோளாறுகள் ஏற்பட அவை காரணமாகின்றன.
மறிவினையாக மனிதன் சில செயல்களைப் புரிகிறான். மறிவினை (Reflex action) என்பது ஒரு புதிய சொல். ஆனால் அதைப் புரிந்துகொள்வது எளிது. ரெயிலில் பயணம் செய்யும்போது கரித்தூளொன்று கண்ணிலே விழுகிறது. கண் உடனே மூடிக்கொள்கிறது; கண்ணிர் மளமளவென்று வருகிறது; அப்படி வந்து கண்ணுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவைத் தவிர்க்க முயல்கிறது. கண் மூடுவதும், கண்ணீர் பெருகுவதும் நாம் நினைத்துப் பார்த்துச் செய்த செயல்கள் அல்ல. அவை தாமாகவே நிகழ்கின்றன. அப்படிப்பட்ட செயல்களுக்குத்தான் மறிவினைகள் என்று பெயர். தும்முதல், குறட்டை விடுதல் போன்ற செயல்களெல்லாம் மறிவினைகளே.
இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும் மனிதன் பல செயல்களில் ஈடுபடுகின்றான். அறிவைக்கொண்டு எண்ணித் துணிந்து பல செயல்கள் புரிகின்றான். பழக்கத்தின் வலிமையால் சில செயல்களைச் சிந்தனையின் துண்டுதலில்லாது இயல்பாகவே செய்யவும் கற்றுக்கொள்ளுகிறான். "காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை செய்யும் பல செயல்கள் பழக்கத்தின் பயனாக இயல்பாகவே நடைபெறுகின்றன. உண்பது, ஆடை அணிவது, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது எல்லாம் பல நாட்களில் ஏற்பட்ட பழக்கத்தினால் மனத்தின் தூண்டுதலில்லாமல் ஒழுங்காக அமைகின்றன” என்று வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.
பழக்கத்தினால் செய்யும் வினைக்கும் மறிவினைக்கும் வேறுபாடு உண்டு. பழக்கத்தினால் செய்யும் வினையை முதலில் தொடங்கும்போது மனத்தின் தூண்டுதலால் அதன் துணிவுப்படி செய்தோம். பிறகு பல தடவை அவ்வாறே எண்ணிச் செய்ததால் அது இயல்பான பழக்கமாக நாளடைவில் ஆகிவிடுகிறது. அந்த நிலையில் மனத்தின் தூண்டுதல் தேவையில்லையென்றே கூறலாம். இவ்வாறு பல எளிய செயல்களைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடுவதால் மனத்திற்கு வேறு உயர்ந்த செயல்களைப் பற்றி எண்ணித் துணிய ஒழிவும் ஆற்றலும் கிடைக்கும்.
பழக்கத்தின் வலிமையாலே இயல்பாகவே பல செயல்களைச் செய்துவிடலாம் என்பதனால் பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நல்ல பழக்கங்களைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் நமது பழக்கங்களே நமக்குத் தீமையாக முடிந்துவிடும். ஆகவே, மனிதன் இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும், பழக்கத்தாலும், எண்ணித் துணிவதாலும் மிகப் பல செயல்களைப் புரிகிறான் என்று ஏற்படுகிறது. மறிவினையாகவும் சிலவற்றைச் செய்கிறான். சில செயல்கள் பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே அமைந்துவிடுகின்றன. ஓடும்போது கால் இடறி ஒருவன் கீழே விழுகிறான். அவனுடைய மார்புக்கூடோ, தலையோ தரையில் மோதாதபடி கை முதலில் தரையில் ஊன்றித் தடுத்துக்கொள்ளுகிறது. கையைத் தரையில் ஊன்றி மற்ற உறுப்புக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கையை நாம் ஊன்றுவதில்லை. இளம் வயதிலிருந்து ஏற்பட்ட பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே இது நடைபெறுகிறது. இதை ‘அரை மறிவினை’ என்று சிலர் சொல்வார்கள்.
மேலே கூறியவற்றிலிருந்து மனிதனுடைய செயல்களுக்கு அவனுடைய மனம், எந்த அளவுக்குக் காரணமாக இருக்கிறதென்று தெரிகிறது. மறிவினைச் செயல்களைக்கூட மனத்தின் சிந்தனை வலிமையால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். மனத்தின் வலிமையால் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இயல்பூக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்மடைமாற்றம் பெற்றுச் சிறப்பாக அமையுமாறு செய்யலாம். அவ்வாறு செய்வதால் மனிதனுடைய வாழ்க்கை உயர்வடைகின்றது.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத