Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கற்றுக் கொடுத்தது யார்? | பெ. தூரன்


ப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெதுவாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?
வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளிவருகிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்?
குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடுகிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனால் உயிரோடு கிடக்கும்படி செய்கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரிதாகும்போது அவைகளும் இதே போன்று செய்கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க்குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன?
இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல்களைச் செய்யும்படி தூண்டும் பிறவி ஆற்றல் ஒன்றிருக்கிறது. அதற்குத்தான் இயல்பூக்கம் (lnstinct) என்று பெயர் வழங்குகின்றது. உணவு தேடூக்கம், கூடி வாழூக்கம், இடம் பெயரூக்கம், கலவியூக்கம் என்றிப்படிப் பல இயல்பூக்கங்கள் இருப்பதாக மெக்டுகல் போன்ற உளவியலறிஞர்கள் குறிப்பிடுகிருர்கள். ஒவ்வொரு இயல்பூக்கத்திற்கும் ஏற்றவாறு உள்ளக் கிளர்ச்சிகளும் உண்டு என்று கூறுவர்.
இயல்பூக்கத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களுண்டு. இயல்பூக்கம் என்பதே இல்லை என்பாரும் உளர். இயல்பூக்கம் இருந்தாலும் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றிடம் அதன் ஆதிக்கத்தைக் காணலாம்; மனிதனிடத்தில் அதற்கு ஆதிக்கமில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இயல்பூக்கமே இல்லையென்று மறுக்கிறவர்கள் தமது ஆராய்ச்சிகளினால் இயல்பூக்கச் செயலாக எண்ணிவந்த சில செயல்களின் காரணத்தைக் கண்டுபிடித்து அச்செயல்கள் சாதாரணமான அனுபவத்தால் அல்லது அறிவினால் ஏற்பட்ட நடத்தை என்று கூறுகிறார்கள்.
கும்மென்று இருண்டு கிடக்கும் குகையினுள்ளே வெளவால் தாராளமாகப் பறந்து வட்டமிடுகிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கற்களின் மேலே அது மோதிக்கொள்வதே இல்லை. ஒருவேளை இருட்டிலே அதற்குக் கண் நன்றாகத் தெரியுமோ என்று சந்தேகித்து அதன் கண்களே மூடிக் கட்டிப் பறக்கவிட்டார்கள். அப்பொழுதும் அது எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் இருண்ட குகைக்குள்ளே தாராளமாக வட்டமிட்டது! இதை இயல்பூக்கச் செயல் என்று முதலில் நம்பிக்கொண்டிருந்தார்கள். 1940-ஆம் ஆண்டிலே டொனல்டு கிரிப்பின், ராபர்ட் கலம்பாஸ் என்ற இரண்டு உயிரியலறிஞர்கள் இந்த அற்புதச் செயலின் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். கண்களை மூடிவிட்டாலும் இருட்டிறையிலே வெளவால் எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் பறக்கிறது. ஆனால் அதன் காதுகளே முடிவிட்டால் கண்கள் திறந்திருந்தாலும் அது இருட்டில் பறக்கும்போது பல இடங்களில் மோதிக்கொள்கிறது! இந்த ஆராய்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரியவந்தது. வெளவாலுக்கு நுட்பமான ஒலியைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால் அது பறக்கும்போது உண்டாகும் நுட்ப ஒலிகள் எதிரிலுள்ள தடைகளின் மேல் பட்டுத் திரும்பிப் பிரதிபலித்து வரும்போது அவற்றைச் சற்றுத் தொலைவிலேயே உணர்ந்து தடைகளே விட்டு விலகித் தப்பிச் செல்கின்றது. இங்கே இயல்பூக்கச் செயல் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கண்டார்கள்.
ஆனல் எல்லா இயல்பூக்கங்களையும் இவ்வாறு ஆராய்ந்து அவற்றிற்குக் காரணங் கூறுவது கடினம். அத்தனை பெரிய ஆராய்ச்சியிலே நாம் ஈடுபட வேண்டியதுமில்லை. இயல்பூக்கங்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்வதோடு அவை மனிதனுடைய செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டால் போதும்.
இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும். கன்று பாலூட்ட முன்பே கற்றுக்கொள்ளவில்லை. இயல்பூக்கமாகக் கன்று அதைச் செய்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமல் குளவி கூடு கட்டி அதில் புழுவை வைத்து முட்டையிடுகின்றது. இவ்வாறு ஒரு பிராணியின் நலத்திற்கும், அதன் இனத்தை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும் இயல்பூக்கச் செயல் உதவுகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாப் பிராணிகளும் ஒரே வகையான இயல்பூக்கச் செயல்களைக் கொண்டிருக்கின்றன. தூக்கணங்குருவிகளில் ஒன்று கூடு கட்டுவது போலவே மற்றத் தூக்கணங்குருவிகளும் கூடு கட்டுகின்றன. இயல்பூக்கத்தின் மற்றொரு தன்மை என்னவென்றால் அனுபவத்தால் பழக்கத்திற்கு வரும் செயல்களுக்கு அது முதலில் தூண்டுகோலாக இருக்கிறது.
விலங்குகள் இயல்பூக்க நிலையிலே பல செயல்களைச் செய்கின்றன. மனிதனும் குழந்தைப் பருவத்தில் அவ்வாறே செய்கிறான். ஆனால் அவன் முதிர்ச்சியடைய அடைய அறிவாலும் அனுபவத்தாலும் இயல்பூக்கச் செயல்கள் மாறுதலடைகின்றன. மனிதனுடைய சிந்தனையால் மாறுதலடையாத இயல்பூக்கச் செயல்களும் குறைந்துவிடும்.
கலவியூக்கம் மிக வலிமையுடையதுதான். ஆனால் மனிதன் விலங்கு போல நடந்துகொள்ளலாமா? அந்த இயல்பூக்கம் பண்புள்ள மனிதனிடத்தே தொழிற்படும் போது அதிலே ஒரு கட்டுப்பாடு வளர்ந்துள்ளது. அதை அவன் மீறினல் சமூகம் அவனைப் போற்றாது.
இயல்பூக்கங்களை ஒடுக்கி அழிக்க முயல்வது வெற்றி பெறாது. ஆனால் விரும்பத்தகாத இயல்பூக்கங்களை வேறு நல்ல துறைகளில் செல்லும்படியாக மாற்றி விடலாம்.
எப்படி மாற்றுவது? அது முடியுமா? முடியும். போரிடும் இயல்பூக்கம் மனித இனத்துக்கு உண்டு என்பார்கள். அந்த இயல்பூக்கத்தால் மிகுதியாக உந்தப்பட்டு ஒருவன் தனது தோழர்களுடனேயே சண்டையிடலாம். அதை மாற்றி அவன் தன் நாட்டிற்காகப் போரிடும்படி செய்யலாம். அல்லது மனித இனத்தைப் பீடிக்கும் கொசு போன்றவற்றை ஒழிக்க அவன் முன்வரலாம்.
இவ்வாறு இயல்பூக்கத்தை மாற்றிவிடுவதற்கு உயர்மடைமாற்றம் (Sublimation) என்று பெயர்.
இயல்பூக்கத்தோடு தொடர்புடைய உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிக்கும் போது இந்த உயர் மடைமாற்றத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்...

பல ரூபங்களில் காந்தி: நூற்பவர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி முதலில் பழகியது துணி நெசவுதான். கைத்தறியில் நெய்வதற்கு அவர் மில் நூலையே பயன்படுத்தினார். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம் , அதை சுயதேவைப் பூர்த்தி என்று சொல்ல முடியாது. அவர் துணி தயாரிக்கும் தொழிலில் முதல் படியில் தொடங்கி முற்றிலுமாக நிபுணத்துவம் பெற விரும்பினார். முதலில் பருத்தி பயிரிட வேண்டும். பருத்தியிலிருந்து பஞ்சுக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து , பட்டை தயார் செய்து , நூல் நூற்று நெசவும் செய்ய வேண்டும். நூல் நூற்பதற்கான சர்க்கா அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. அதனால் பயன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால் கிராம மக்கள் சர்க்காக்களை எப்போதோ தூக்கி எறிந்துவிட்டிருந்தனர். பல கிராமங்களில் தேடிய பின்பு ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணி இன்னமும் ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்பில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மூலமாக ஆசிரமவாசிகளுக்கு சர்க்காவில் எப்படி நூற்க வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. ஒரு முறை அவர் நோயிலிருந்து மீண்டுகொண்டிருந்த தருணத்தில் ராட்டைகளின் ஒலி அவருக்கு சங்கீதம் போல் கேட்டது. அவரும் விரைவில் ராட்டையில் நூல் நூற்கப் பழகிவிட்டார். தி...