Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கற்றுக் கொடுத்தது யார்? | பெ. தூரன்


ப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெதுவாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?
வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளிவருகிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்?
குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடுகிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனால் உயிரோடு கிடக்கும்படி செய்கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரிதாகும்போது அவைகளும் இதே போன்று செய்கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க்குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன?
இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல்களைச் செய்யும்படி தூண்டும் பிறவி ஆற்றல் ஒன்றிருக்கிறது. அதற்குத்தான் இயல்பூக்கம் (lnstinct) என்று பெயர் வழங்குகின்றது. உணவு தேடூக்கம், கூடி வாழூக்கம், இடம் பெயரூக்கம், கலவியூக்கம் என்றிப்படிப் பல இயல்பூக்கங்கள் இருப்பதாக மெக்டுகல் போன்ற உளவியலறிஞர்கள் குறிப்பிடுகிருர்கள். ஒவ்வொரு இயல்பூக்கத்திற்கும் ஏற்றவாறு உள்ளக் கிளர்ச்சிகளும் உண்டு என்று கூறுவர்.
இயல்பூக்கத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களுண்டு. இயல்பூக்கம் என்பதே இல்லை என்பாரும் உளர். இயல்பூக்கம் இருந்தாலும் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றிடம் அதன் ஆதிக்கத்தைக் காணலாம்; மனிதனிடத்தில் அதற்கு ஆதிக்கமில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இயல்பூக்கமே இல்லையென்று மறுக்கிறவர்கள் தமது ஆராய்ச்சிகளினால் இயல்பூக்கச் செயலாக எண்ணிவந்த சில செயல்களின் காரணத்தைக் கண்டுபிடித்து அச்செயல்கள் சாதாரணமான அனுபவத்தால் அல்லது அறிவினால் ஏற்பட்ட நடத்தை என்று கூறுகிறார்கள்.
கும்மென்று இருண்டு கிடக்கும் குகையினுள்ளே வெளவால் தாராளமாகப் பறந்து வட்டமிடுகிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கற்களின் மேலே அது மோதிக்கொள்வதே இல்லை. ஒருவேளை இருட்டிலே அதற்குக் கண் நன்றாகத் தெரியுமோ என்று சந்தேகித்து அதன் கண்களே மூடிக் கட்டிப் பறக்கவிட்டார்கள். அப்பொழுதும் அது எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் இருண்ட குகைக்குள்ளே தாராளமாக வட்டமிட்டது! இதை இயல்பூக்கச் செயல் என்று முதலில் நம்பிக்கொண்டிருந்தார்கள். 1940-ஆம் ஆண்டிலே டொனல்டு கிரிப்பின், ராபர்ட் கலம்பாஸ் என்ற இரண்டு உயிரியலறிஞர்கள் இந்த அற்புதச் செயலின் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். கண்களை மூடிவிட்டாலும் இருட்டிறையிலே வெளவால் எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் பறக்கிறது. ஆனால் அதன் காதுகளே முடிவிட்டால் கண்கள் திறந்திருந்தாலும் அது இருட்டில் பறக்கும்போது பல இடங்களில் மோதிக்கொள்கிறது! இந்த ஆராய்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரியவந்தது. வெளவாலுக்கு நுட்பமான ஒலியைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால் அது பறக்கும்போது உண்டாகும் நுட்ப ஒலிகள் எதிரிலுள்ள தடைகளின் மேல் பட்டுத் திரும்பிப் பிரதிபலித்து வரும்போது அவற்றைச் சற்றுத் தொலைவிலேயே உணர்ந்து தடைகளே விட்டு விலகித் தப்பிச் செல்கின்றது. இங்கே இயல்பூக்கச் செயல் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கண்டார்கள்.
ஆனல் எல்லா இயல்பூக்கங்களையும் இவ்வாறு ஆராய்ந்து அவற்றிற்குக் காரணங் கூறுவது கடினம். அத்தனை பெரிய ஆராய்ச்சியிலே நாம் ஈடுபட வேண்டியதுமில்லை. இயல்பூக்கங்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்வதோடு அவை மனிதனுடைய செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டால் போதும்.
இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும். கன்று பாலூட்ட முன்பே கற்றுக்கொள்ளவில்லை. இயல்பூக்கமாகக் கன்று அதைச் செய்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமல் குளவி கூடு கட்டி அதில் புழுவை வைத்து முட்டையிடுகின்றது. இவ்வாறு ஒரு பிராணியின் நலத்திற்கும், அதன் இனத்தை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும் இயல்பூக்கச் செயல் உதவுகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாப் பிராணிகளும் ஒரே வகையான இயல்பூக்கச் செயல்களைக் கொண்டிருக்கின்றன. தூக்கணங்குருவிகளில் ஒன்று கூடு கட்டுவது போலவே மற்றத் தூக்கணங்குருவிகளும் கூடு கட்டுகின்றன. இயல்பூக்கத்தின் மற்றொரு தன்மை என்னவென்றால் அனுபவத்தால் பழக்கத்திற்கு வரும் செயல்களுக்கு அது முதலில் தூண்டுகோலாக இருக்கிறது.
விலங்குகள் இயல்பூக்க நிலையிலே பல செயல்களைச் செய்கின்றன. மனிதனும் குழந்தைப் பருவத்தில் அவ்வாறே செய்கிறான். ஆனால் அவன் முதிர்ச்சியடைய அடைய அறிவாலும் அனுபவத்தாலும் இயல்பூக்கச் செயல்கள் மாறுதலடைகின்றன. மனிதனுடைய சிந்தனையால் மாறுதலடையாத இயல்பூக்கச் செயல்களும் குறைந்துவிடும்.
கலவியூக்கம் மிக வலிமையுடையதுதான். ஆனால் மனிதன் விலங்கு போல நடந்துகொள்ளலாமா? அந்த இயல்பூக்கம் பண்புள்ள மனிதனிடத்தே தொழிற்படும் போது அதிலே ஒரு கட்டுப்பாடு வளர்ந்துள்ளது. அதை அவன் மீறினல் சமூகம் அவனைப் போற்றாது.
இயல்பூக்கங்களை ஒடுக்கி அழிக்க முயல்வது வெற்றி பெறாது. ஆனால் விரும்பத்தகாத இயல்பூக்கங்களை வேறு நல்ல துறைகளில் செல்லும்படியாக மாற்றி விடலாம்.
எப்படி மாற்றுவது? அது முடியுமா? முடியும். போரிடும் இயல்பூக்கம் மனித இனத்துக்கு உண்டு என்பார்கள். அந்த இயல்பூக்கத்தால் மிகுதியாக உந்தப்பட்டு ஒருவன் தனது தோழர்களுடனேயே சண்டையிடலாம். அதை மாற்றி அவன் தன் நாட்டிற்காகப் போரிடும்படி செய்யலாம். அல்லது மனித இனத்தைப் பீடிக்கும் கொசு போன்றவற்றை ஒழிக்க அவன் முன்வரலாம்.
இவ்வாறு இயல்பூக்கத்தை மாற்றிவிடுவதற்கு உயர்மடைமாற்றம் (Sublimation) என்று பெயர்.
இயல்பூக்கத்தோடு தொடர்புடைய உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிக்கும் போது இந்த உயர் மடைமாற்றத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு