Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | பகற் கனவு | பெ. தூரன்

றங்கும்போது காண்பது கனவு. விழித்திருக்கின்ற நிலையிலும் கனவு காண்பதுண்டு. அது பகற் கனவு. பகற் கனவு என்றவுடன் பகலிலே உறங்கும் போது காணும் கனவு என்று கருதிவிடக் கூடாது. நன்றாக விழித்திருக்கும்போதே எழுகின்ற மனக் கோட்டைக்குத்தான் அப்பெயர் வழங்குகிறது. காலம் பகலாகவும் இருக்கலாம். இரவாகவும் இருக்கலாம். உறக்கநிலையிலே தோன்றுவது கனவு; விழிப்பு நிலையிலே தோன்றுவது பகற் கனவு.
கனவு காணாதவர்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். பகற் கனவு காணாதவர்களும் வெகு அருமை. மக்கள் கூட்டத்தையே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பகற் கனவு காண்பவர் ஒரு பிரிவு, செயலிலே ஈடுபடுகின்றவர் மற்றொரு பிரிவு. ஆனால், பகற் கனவு காண்பவன் செயலிலேயே இறங்கமாட்டான் என்பதில்லை. அதுபோலவே செயல் புரிகின்றவன் பகற் கனவு, காணமாட்டான் என்பதில்லை. பகற் கனவில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் ஒரு பகுதி; செயல் புரிவதில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் மற்றொரு பகுதி.
பகற் கனவு வேறு; சிந்தனை வேறு. பகற் கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்ளுகிருன். ஆனால் சிந்தனை செய்பவன் அப்படியில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றியோ ஒரு சூழ்நிலையில் எவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியோ அவன் தன் மனத்தை ஊன்றிச் செலுத்தி எண்ணமிடுகிறான். மனம் போன போக்கிலே அவன் செல்லுவதில்லை. அவன் மனத்தை எண்ண உலகில் உறுதியாக நடக்கும்படி அறிவைக்கொண்டு தூண்டுகிறான். பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்ற வேண்டுமானால் சேனைத் தலைவன் அதற்காக எத்தனை ஆழ்ந்து சிந்தித்துத் திட்டம் போடவேண்டும்! எவ்வாறு தாக்கினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்றும், அதற்கு எத்தனை பெரிய படை பலம் வேண்டுமென்றும், அவன் நன்கு எண்ணிப்பார்த்து முடிவுகட்ட வேண்டும். பல ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அவன் தயங்காமல் இருக்கவேண்டும். இங்ஙணம் எண்ணிப்பார்த்து வேண்டுவனவற்றையெல்லாம் முன்னேற்பாடாகச் செய்துகொண்டு போர் தொடங்கினால்தான் அவன் வெற்றி காணமுடியும். அவ்வாறில்லாமல் தான் எளிதிலே பகைவர்களை வென்று கோட்டைக்குள் நுழைந்துவிட்டதாகவும், புகழ்மாலை பெற்றுவிட்டதாகவும் அவன் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தால் வெற்றி கிட்டிவிடாது.
செயலிலேயே நாட்டமுள்ளவனும் பகற் கனவு காண்பதுண்டு. ஆனால், அவன் அத்துடன் நின்றுவிடுவதில்லை. அவன் அக்கனவை நனவாக்க முனைகிறான். உறுதியோடு செயலில் ஈடுபடுகிறான். வான வெளியிலே சிறகை விரித்து வெள்ளைக் கொக்கு ஒயிலாகப் பறக்கின்றது. அதைப் பார்த்து மனிதன் தானும் பறப்பதுபோலப் பகற் கனவு காண்கிறான். ஆயிரக்கணக்கானவர்கள் அத்துடன் மன நிறைவு அடைந்துவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர்கள் அதை வைத்துக் கற்பனைக் கவிதைகள் வரைகிறார்கள். ஒருவன் உண்மையாகவே பறக்க முயலுகிறான், பகற் கனவிலே அவன் அமைத்துக்கொண்ட விமானத்தை உண்மையாகவே உருவாக்கத் தனது அறிவைப் பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கிறான். பறப்பதற்கு வேண்டிய விஞ்ஞான உண்மைகளைக் காண முயல்கிறான். பல சோதனைகள் செய்கிறான். அவற்றின் விளைவாக விமானம் நமக்குக் கிடைக்கின்றது.
கனவிற்கும் பகற் கனவிற்கும் பொதுவானவை பல இருக்கின்றன. அவை இரண்டும் கனவு காண்பவனையே நடுநிலையாகக் கொண்டிருப்பவை. வாழ்க்கையில் நிறைவேறாது மனத்தில் மறைந்து கிடக்கும் ஆசைகள் நிறைவேறுவதையே முக்கியமாக இரண்டிலும் காண்கிறோம். சில ஆசைகளும் எண்ணங்களும் இழிந்தவைகளாக இருக்கலாம். அவற்றை மனிதன் அறிவினால் அடக்க முயலுகிறான். அதனால் அவை மறை மனத்தில் அழுந்துகின்றன. உறங்குகின்றபோது அறிவின் ஆதிக்கம் சற்றுத் தளர்கின்றது. அந்த வேளையிலே அவைகள் கனவாக வெளியாகின்றன. அதுபோலவே பகற் கனவிலும் அவ்வாசைகள் தோன்றி ஒரு வகையான மன நிறைவை அளிக்கின்றன.
பகற் கனவைப் பற்றி ஜீ. எச். கிரீன் என்பவர் பின் வருமாறு எழுதியுள்ளார்:
1. நமக்குத் தெரியாமல் மனத்திலே அழுந்தி மறைந்து கிடக்கும் ஆசைகளைப் பகற் கனவு நிறைவேற்றுகின்றது.
2. ஒருவன் தன்னைப் பற்றியே உயர்வாகக் கருதுவதை அது குறிக்கின்றது.
3. உலகத்தைப் பற்றி அவன் வெளிப்படையாகக் கொண்டுள்ள நினைப்பைத் தவிர வேறொரு நினைப்பிருப்பதையும் அது குறிப்பாகக் காட்டுகிறது.
4. செயலில் வேண்டுமென எழுகின்ற எண்ணத்திற்கும், செயலில் இறங்குவதற்கும் இடையே உண்டாகும் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
5. மிக நல்ல முயற்சியோடு திடமாகச் செயலில் ஈடுபட்டிருக்கும் வேளையிலல்லாது மற்ற வேளைகளில் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.
பகற் கனவும் சிறு வயது முதற்கொண்டே உண்டாகிறது. சிறு குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு குழந்தை தன்னைத் தாயாகவும், ஏதாவதொரு பொருளைக் குழந்தையாகவும் கற்பனை செய்துகொள்ளுகிறது. தனது தாய் தன்னிடம் எவ்விதம் நடந்துகொள்ளுகிருளோ அதுபோலவே கற்பனைக் குழந்தையிடம் அது நடக்கின்றது. தாயைப் போலவே பேசுகிறது, கடுஞ்சொல் கூறுகிறது. தண்டனை கொடுக்கிறது. அந்தக் கற்பனைக் குழந்தையிடம் தன்னிடமுள்ள குறும்புகள் எல்லாவற்றையும் இது காண்கிறது. இவ்விதமாகத் தன்னை உயர்த்தியும், தன்னிடமுள்ள குறைகள் அக் கற்பனைக் குழந்தையிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டும் அது விளையாடி மன நிறைவு பெறுகிறது.
மூன்று வயதாக இருக்கும்போது சுந்தரி அடிக்கடி தனக்கே தனியாக ஒரு சொந்த வீடிருப்பதாகப் பேசுவாள். “என் வீட்டிலே நிறைய மிட்டாய் இருக்கிறது. பெரிய பெட்டி இருக்கிறது" என்று என்ன என்னவோ பெருமையாகச் சொல்லிக்கொள்ளுவாள். ஒருநாள் அவள் தன் வீட்டிலே பெரிய விருந்து நடக்கிறதென்றும், வடை, பாயசம் எல்லாம் ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கின்றனவென்றும் கூறிவிட்டு எங்களுடன் உணவு கொள்ள மறுத்துவிட்டாள். அது அவளுடைய பகற் கனவைக் குறிக்கின்றது.
“குழந்தைகள்தான் மிகுதியாகப் பகற் கனவு காண்பவர்கள்; அவர்களுடைய பகற் கனவுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் வாழ்க்கையில் அடையப்பெறாத ஆசைகளை நிறைவேற்றுவனவாக இருக்கும்” என்று மெக்டுகல் எழுதுகிறார்.
பொதுவாகக் கூறினால், பத்தாவது வயதில் துணிகரச் செயல்களைப் பற்றிய பகற் கனவுகள் உண்டாகின்றன. பலருடன் கூடி வீரச் செயல்கள் செய்வது போலவும், அவற்றிலெல்லாம் தானே முக்கியமாக இருப்பது போலவும், தனது தோழர்களுக்குத் தானே தலைவனாக விளங்குவது போலவும் காட்சிகள் தோன்றுகின்றன. காளைப் பருவத்திலே பிறக்கும் பகற் கனவுகள் பலதிறத்தனவாகும். அப்பொழுது அதில் காதலுணர்ச்சியும் இயல்பாகவே கலந்திருக்கும்.
இவ்வாறாக ஒவ்வொரு பருவத்திலும் அதற்கேற்றவாறு பகற் கனவுகள் உண்டாகின்றன. சிறுவர்களின் பகற் கனவுகள் பொதுவாகக் குற்றமற்றவைகளாக இருக்கும். ஏனெனில் அந்தப் பருவத்தில் அடக்கியொடுக்க வேண்டிய இழிந்த எண்ணங்கள் உண்டாகக் காரணமில்லை.
கனவுகளை ஆராய்வது போலவே பகற் கனவுகளையும் ஆராய்ந்தால் ஒருவனுடைய மன நிலைமையை அறிந்துகொள்ள முடியும். பகற் கனவிலே அவனுடைய ஆசைகளும் எண்ணங்களும் பொதுவாக நேரிடையாகவே வெளிப்படுகின்றன. அந்த வகையில் அவனுடைய மன நிலையைக் காண இது கனவைவிடச் சிறப்பாகப் பயன்படும். ஆனால் பகற் கனவை வெளிப்படையாகக் கூறும்படி செய்வதுதான் பெரும்பாலும் இயலாது. அது இழிந்ததாக இருக்குமானால் வெளியில் கூற பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள்.
கனவின் பொருளை அறிந்துகொள்ள விருப்பக் கருத்தியைபு முறையைக் கையாளுவதைப் பற்றி முன்பே தெரிந்துகொண்டோம். அந்த ஆராய்ச்சியோடு ஒருவன் காணும் பகற் கனவையும் சேர்த்து நோக்கினல் அவனுடைய மன நிலைமையை நன்றாக உணர முடியும்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத