Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கனவு | பெ. தூரன்

"நான் கனவு கண்டால் கண்டது கண்டபடியே நடக்கும்" என்று சிலர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். “கனவில் காண்பதற்கு நேர்மாறாகத்தான் வாழ்க்கை யில் நடக்கும்; பொருளை இழப்பதுபோலக் கனவு கண்டால் பொருள் வருவாய் கிடைக்கும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
“கனவிற்கு ஒரு பொருளும் கிடையாது; அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை" என்று கூறுபவர்களும் உண்டு.
"கவலையே இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிறவன் கனவு காணமாட்டான்; கவலை நிறைந்தவன்தான் கனவு காண்கிறான்” என்றும் பலர் பேசக் கேட்டிருக்கிறோம்.
உறங்கும்போது கனவு காண்பதென்பது குழந்தைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லாருக்கும் பல சமயங்களில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்ச்சி. அக்கனவிற்கு ஏதாவது காரணம் உண்டா, பொருளுண்டா அதனால் ஏதாவது பயன் உண்டா என்பனவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
"ஒரு மனிதனுடைய தன்மையை அறிந்துகொள்வதற்கு அவன் காணும் கனவுகள் பெரிதும் துணை புரிகின்றன” என்று மறை மனத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பிராய்டு, ஆட்லர், யுங் என்ற மூவரும் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். மன நிலையை அறிந்துகொள்வதற்குக் கனவு ஒரு வழியென்பதை மற்ற உளவியல் அறிஞர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
மனக் கோளாறுகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று பிராய்டு முதலில் கண்டார். அதன் பயனகவே மனத்தில் மறை மனம் என்ற ஒரு பகுதியிருக்கிறதென்றும் அவர் உணர்ந்தார். மன நோய்களைப் போக்குவதற்கு மறை மனத்தில் அழுந்திக் கிடக்கும் எண்ணங்களையும் ஆசைகளையும் அறிய வேண்டும். அதற்குப் பிராய்டு முதலில் மனவசிய (Hypnotism) முறையைக் கையாண்டார். அதில் பல குறைபாடுகள் இருப்பதை அனுபவத்தில் தெரிந்து அவர் வேறு முறையொன்றைப் பின்னால் கையாளலானார். தம்மிடம் சிகிச்சைக்கு வருபவர்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தோன்றியவாறே ஒளிவு மறைவின்றி சொல்லும்படி கேட்டார். அவர்கள் காணும் கனவுகளைப் பற்றியும் வெளிப்படையாகச் சொல்லச் சொன்னார். மனத்தில் எழுகின்ற இழிந்த எண்ணங்களை எல்லாரும் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். மனவசியத்தாலும் அவற்றை அறிந்து கொள்ளுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கனவுகளின் மூலம் அவற்றை மறை முகமாகக் கண்டுகொள்ளலாம் என்று பிராய்டுக்குப் புலப்பட்டது. அவர்தாம் முதன் முதலில் கனவுகளைப் பாகுபடுத்தி அவற்றைக்கொண்டு மனநிலையைக் காண முயன்றவர்.
தூங்கி எழுந்தவுடன் பல கனவுகள் மறந்துபோய் விடுகின்றன. சிலவற்றை நாம் நினைவுக்குக் கொண்டுவர முடியுமானலும் அவை தொடர்பில்லாத விந்தைச் செயல்கள் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் கனவுக்குப் பொருளில்லையெனப் பலர் கருதுகிறார்கள். கனவில் நிகழ்வனவற்றை நிகழ்ந்தவாறே உண்மையென எடுத்துக்கொள்ளக் கூடாது. பல கனவு நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட வேறு பொருள்கள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டால்தான் கனவுகளைக் கொண்டு ஒருவனுடைய மன நிலையை நன்கு அறிந்துகொள்ள முடியும்.
கனவுக்குப் பொருளிருப்பதாக நினைப்பது குருட்டு நம்பிக்கை என்று சிலர் கூறலாம். அறிவு வளர்ச்சி பெறாத மக்கள்தான் கனவை நம்புவார்களென்றும் அவர்கள் பேசலாம். ஆனால் பாமரர்கள் கனவை நோக்கும் விதம் வேறு; உளவியலறிஞன் அதை நோக்கும் விதம் வேறு. "விஞ்ஞானப் பார்வையோடு மற்றப் பொருள்களை ஆராய்வதைப் போலவே கனவையும் ஆராயலாம். கனவு என்பது ஒரு அனுபவ உண்மை. இரசாயனத்திலும், உடலியலிலும் உண்மைகளை ஆராய்வதுபோல அதையும் சரிவர ஆராயலாம்” என்று ஜீ.எச்.கிரீன் எழுதுகிறார். ஆதலால் கனவைப் பற்றி உளவியல் முறையில் சோதனை செய்வது அறிவுக்குப் பொருந்தியதொன்றே. அவ்வாறு சோதனை செய்து பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் பல மன நோய்களைப் போக்கியிருக்கிறார்கள்.
மனத்தில் உள்ள எண்ணங்களையெல்லாம் மறைக்காமல் கூறுவதைச் சாதாரணமாக மக்கள் உடைத்துச் சொல்லுவதென்று கூறுவார்கள். நான் உடைத்துப் பேசுகிறேனென்றால் எதையும் ஒளிக்காமல் சொல்லுவதாகப் பொருள். ஏதாவது ஒரு வேளையிலே எழுகின்ற எண்ணங்களையெல்லாம் உடைத்துக் கூறினால் அவற்றின் மூலம் கனவுகளின் உண்மைப் பொருளையும் கனவு காண்பவனின் மன நிலைமையையும் அறிந்துகொள்ள முடியும். எல்லாராலும் அவ்வாறு அறிந்துகொள்ள முடியும் என்று நான் கூறவில்லை. அதற்கு உளவியல் அறிவு நிறைய வேண்டும்; அனுபவமும் வேண்டும். எந்த நிலைமையை உண்டாக்கினால், அதன் விளைவாக எழும் எண்ணங்களைக் கொண்டு மன நிலையைக் காண முடியும் என்பது அனுபவம் வாய்ந்த ஒருவனுக்குத் தெரியும். வெளிப்படையாக எதையும் ஒளிக்காமல் பேசுவதும் கனவும் ஒன்றுக்கொன்று உதவியாக நின்று ஒருவனுடைய மன நிலையை வெளிப்படுத்துகின்றன. சொல்லுவதில் சிலவற்றை மறைத்திருந்தாலும் கனவு அதைக் குறிப்பாகக் காட்டிவிடும்.
சிக்கலில்லாத எளிய பல கனவுகள் இருக்கின்றன. அவற்றின் குறிப்பைக் கண்டுகொள்ள அனைவராலும் பெரும்பாலும் முடியும்.
நனவில் நிறைவேறாத பல ஆசைகள் கனவிலே நிறைவேறுவதுண்டு. காதல் வயப்பட்ட இளைஞன் தன் காதலியோடு கூடியிருப்பதாகக் கனவு காண்கிறான். வறுமையால் வாடியிருப்பவன் கனவிலே குபேரனைப்போல வாழ்கிறான். அழகான பொம்மை வேண்டுமென விரும்பிய குழந்தை அதைப் பெற்று மகிழ்வதாகக் கனவு காண்கிறது.
வீட்டிலே குற்றேவல் புரிவதற்காக ஒன்பது வயதுப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள் இரவில் எழுந்து உட்கார்ந்துகொண்டு, “என் அக்காள் வந்து வெளியே நிற்கிறாள்; கதவைத் திறந்துவிடுங்கள்” என்று கூறினாள். ஆனால் உண்மையில் யாரும் வரவில்லை. அவள் கண்டது கனவு. தன் அக்காளைப் பிரிந்து வந்து பல நாட்களாகிவிட்டபடியால் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையே இவ்வாறு கனவில் நிறைவேறியிருக்கிறது.
பொதுவாகக் கனவு காணும்போது அதில் நடக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையாக வாழ்வில் நடப்பது போலவே உணர்கின்றோம். கனவு காண்பவன் அக்கனவில் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கேற்றவாறு வாய்விட்டுச் சிரிப்பதும் அழுவதுமுண்டு. குழந்தைகளிடம் இதை அதிகமாகக் காணலாம்.
கண்ணம்மாளுக்கு வயது நான்கு. அவள் ஒரிரவு தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதே விம்மிவிம்மி அழத் தொடங்கிவிட்டாள். “ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டபோது, அவள் எழுந்து நின்று “அக்கா என் புதுப்பொம்மையை எடுத்துக்கொண்டாள்” என்று முறையிட்டாள். உண்மையில் யாரும் அவளுடைய பொம்மையை எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். தன் பொம்மையை அக்காள் எடுப்பது போல அவள் கனவு கண்டிருக்கிறாள். முதல் நாளில் நடந்த செயலே அவள் கனவில் பிரதிபலித்திருக்கிறது.
எல்லாக் கனவுகளும் ஆசை நிறைவேற்றத்திற்காக உண்டாவதில்லை. இப்படிக் கூறுவதில்தான் பிராய்டுக்கும் மற்றவர்களுக்கும் கனவைப் பொறுத்தவரையில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. எல்லாக் கனவுகளும் ஆசை நிறைவேற்றங்களே என்று பிராய்டு சாதிக்கிறார், மற்றவர்கள் அவ்வாறு கருதுவதில்லை. மேலே கூறிய குழந்தையின் கனவு ஆசை நிறைவேற்றமல்ல. அதன் உள்ளத்திலிருந்த அச்சத்தின் தோற்றமே அது.
முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் பல தடவைகளில் கனவில் தோன்றுகின்றன. ஒரு நாள் நான் ஒரு சிறந்த நூலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பதினெட்டு வயது இளைஞன் ஒருவனுக்குப் புத்தகத்திலே மிகுந்த பற்றுண்டு. அவன் அந்நூலை ஒரு கடையில் காண்பதுபோலவும் அதை வாங்குவது போலவும் அன்றிரவே கனவு கண்டதாக என்னிடம் மறுநாள் கூறினான். “பெரும்பான்மையான கனவுகள் அண்மையில் உண்டான மனப் போராட்டங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன” என்று ரிவர்ஸ் (W. H. R. Revers) என்பார் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளையொட்டி வரும் சில கனவுகளும் உண்டு. எனக்கு எட்டு வயதிருக்கும். என்னை விட ஒரு வயது இளையவனான என் தோழன் ஒருவனுடன் வீதியிலே விளையாடிக்கொண்டிருந்தேன். இரண்டு மாடுகள் ஒன்றையொன்று எதிர்த்துச் சீறிக்கொண்டு ஒடி வந்தன. நாங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் அவற்றைக் கவனிக்கவில்லை. ஒரு மாடு மற்றொன்றின் மேல் திடீரென்று பாயவே அது சமாளிக்க முடியாமல் பின்னடைந்தது. இரு மாடுகளும் வந்த வேகத்தில் என் தோழனை அவை காலால் மிதித்துக்கொண்டு சென்றுவிட்டன. அவன் படுகாயமுற்று நினைவிழந்து கிடந்தான். அருகிலே யாருமில்லை. நான் அஞ்சி நடுங்கி அசைவற்று நின்றுவிட்டேன். அது முதற்கொண்டு அடிக்கடி மாடு கொம்புகளால் குத்த வருவது போலவும் தப்பித்துக்கொண்டு ஓட கால் வராது நான் தடுமாறுவது போலவும் கனவு காண்கிறேன். இன்றைக்கும் மாட்டைக் கண்டால் எனக்குப் பெரிதும் அச்சம். இதுபோன்று திரும்பித் திரும்பி வரும் கனவுகளுக்குக்கூட அவற்றிற்குக் காரணமாக ஏதாவது நிகழ்ச்சிகள் அண்மையில் நடந்திருக்கக் கூடும். வழியிலே ஒரு மாட்டை நான் பார்த்திருக்கலாம். அது பழைய உணர்ச்சிகளை மனத்திலே மேலுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட கனவுகளில் சிக்கல் ஒன்றும் இல்லையாதலால் அவற்றை எளிதாக விளக்கிவிடலாம். ஆனால் பொதுவாகப் பல கனவுகள் அவ்வாறிருப்பதில்லை. அவை நம்மைத் திகைக்க வைக்கும் படியாக இருக்கின்றன. நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதில்லை. விந்தையான காட்சிகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன. நடக்க முடியாத நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் பொருள் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏன் அவ்வாறு விந்தைக் கனவுகள் ஏற்படுகின்றனவென்பதையும் அவற்றின் குறிப்பு என்னவென்பதையும் அவற்றால் மன நிலையை எவ்வாறு அறிந்துகொள்ள இயலும் என்பதையும் அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ