Skip to main content

அடிமை வாழ்வு - மயிலை சீனி. வேங்கடசாமி


அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது, மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப் படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால், ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீப காலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள் அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலை பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது, அரசியல் விடுதலை பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப் பற்றியும் அல்ல, பொருளாதார அடிமைத்தனத்தைப் பற்றியும், அல்ல. தனிமனிதன் தனிமனிதனுக்கு ஆட்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப் பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது.

எகிப்து, கிரேக்கம், உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக்காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப்பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ்நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரத தேசத்தில் ஆதிகாலம் முதல் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் இருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள்கூட, இந்தியாவில் பண்டைக் காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை.

பண்டைக் காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர், அடிமைகளை யுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடம் மிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்குப் புதுமையாக இருக்கும், சிலர் நம்பவும் மாட்டார் கள். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தார் களா? 'இது என்ன புதுமை!' என்று வாசகர்கள் வியப்படை வார்கள்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினார்கள். அடிமைகள் வேண்டாத போது அவர்களைக் காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத்தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலத்தில் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இந்தியச் சரித்திரத்திலும் தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்படவில்லை. இந்நாட்டில், மக்கள் சமூகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்தியச் சரித்திரத்திலும், தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஏன் இடம்பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாவடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது.

ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர் நாட்டு கலைச்செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோவிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன் பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது. இச்செய்தி மேலப் பெரம்பலூர் தக்ஷிணபுரீஸ்வரர் கோவில் சாசனத்தில் காணப்படுகிறது.

திருச்செங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன் - 2 உடைய 13 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப். பட்டனர் என்று கூறுகிறது.

திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக்கோவிலில் அடிமை ஊழியர்கள் பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவி யாராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் திருச்சி தாலுகா திருப்பலத்துறை தாருகவனேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1326இல் எழுதப்பட்டது. கி.பி. 1374இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடுமனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார். அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படு கின்றன. அப்பெயர்களாவன: தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி ஆண்டி . பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும், மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிட மிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவரிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர்.

புதுக்கோட்டை திருமய்யம் தாலுகா திருமய்யம் சத்திய மூர்த்தி கோவில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக் காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. "சீராள தேவன் முனையதரையன் மக்கள் நாயனாரேன், என் மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது" என்று இந்தச் சாசனம் துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது; அடிமைகளின் பெயர் களையும் கூறுகிறது. அப்பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீராளதேவன், இவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. "வளத்தி மகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப் பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம்.

"புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப்பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன.

நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதி காரத்திலும் தொல்காப்பியத்திலும்கூட அடிமைகளைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அடிமை முறை, தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஆராய்ச்சி செய்யலா மல்லவா?

-

நண்பன், மலர் 8, செப்டம்பர் 1958

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

பல ரூபங்களில் காந்தி: செருப்புத் தைப்பவர் | அனு பந்தோபாத்யாயா

தனது 63 வது வயதில் காந்திஜி வல்லபாய் பட்டேலுடன் எரவாடா சிறையில் இருந்தார். பட்டேலுக்கு ஒரு ஜோடி புதிய செருப்பு தேவைப்பட்டது. ஆனால் , அத்தருணத்தில் சிறையில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. காந்திஜி சொன்னார்: '' எனக்கு நல்ல தோல் கிடைத்தால் நானே உங்களுக்கு செருப்பு தைத்துக் கொடுத்துவிடுவேன். வெகு காலத்திற்கு முன் கற்றுக்கொண்ட அத்தொழில் எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நான் ஒரு நல்ல செருப்புத் தைப்பவனாக இருந்தேன். சோட்பூரில் உள்ள கதர் ஆசிரமத்தின் மியூசியத்தில் நான் தைத்த செருப்புகளைக் காணலாம். நான் அந்த ஜோடி செருப்புகளை யாருக்காகவோ அனுப்பினேன். அந்த நபர் தன்னால் அச்செருப்புகளை அணிய முடியாது என்றும் , ஒரு அழகுப் பொருளாகத்தான் வைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்லிவிட்டார். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது நான் நிறைய செருப்புகளைத் தைத்திருக்கிறேன். '' 1911 ம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் '' நான் இச்சமயம் எல்லா நேரங்களிலும் செருப்பு தைப்பதில் ஈடுபட்டுள்ளேன். நான் இவ்வேலையை முக்கியமானது என்று கருதுகிறேன். மேலும் எனக்கு இந...