Skip to main content

அடிமை வாழ்வு - மயிலை சீனி. வேங்கடசாமி


அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது, மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப் படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால், ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீப காலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள் அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலை பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது, அரசியல் விடுதலை பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப் பற்றியும் அல்ல, பொருளாதார அடிமைத்தனத்தைப் பற்றியும், அல்ல. தனிமனிதன் தனிமனிதனுக்கு ஆட்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப் பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது.

எகிப்து, கிரேக்கம், உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக்காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப்பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ்நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரத தேசத்தில் ஆதிகாலம் முதல் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் இருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள்கூட, இந்தியாவில் பண்டைக் காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை.

பண்டைக் காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர், அடிமைகளை யுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடம் மிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்குப் புதுமையாக இருக்கும், சிலர் நம்பவும் மாட்டார் கள். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தார் களா? 'இது என்ன புதுமை!' என்று வாசகர்கள் வியப்படை வார்கள்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினார்கள். அடிமைகள் வேண்டாத போது அவர்களைக் காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத்தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலத்தில் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இந்தியச் சரித்திரத்திலும் தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்படவில்லை. இந்நாட்டில், மக்கள் சமூகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்தியச் சரித்திரத்திலும், தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஏன் இடம்பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாவடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது.

ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர் நாட்டு கலைச்செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோவிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன் பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது. இச்செய்தி மேலப் பெரம்பலூர் தக்ஷிணபுரீஸ்வரர் கோவில் சாசனத்தில் காணப்படுகிறது.

திருச்செங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன் - 2 உடைய 13 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப். பட்டனர் என்று கூறுகிறது.

திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக்கோவிலில் அடிமை ஊழியர்கள் பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவி யாராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் திருச்சி தாலுகா திருப்பலத்துறை தாருகவனேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1326இல் எழுதப்பட்டது. கி.பி. 1374இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடுமனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார். அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படு கின்றன. அப்பெயர்களாவன: தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி ஆண்டி . பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும், மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிட மிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவரிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர்.

புதுக்கோட்டை திருமய்யம் தாலுகா திருமய்யம் சத்திய மூர்த்தி கோவில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக் காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. "சீராள தேவன் முனையதரையன் மக்கள் நாயனாரேன், என் மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது" என்று இந்தச் சாசனம் துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது; அடிமைகளின் பெயர் களையும் கூறுகிறது. அப்பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீராளதேவன், இவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. "வளத்தி மகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப் பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம்.

"புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப்பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன.

நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதி காரத்திலும் தொல்காப்பியத்திலும்கூட அடிமைகளைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அடிமை முறை, தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஆராய்ச்சி செய்யலா மல்லவா?

-

நண்பன், மலர் 8, செப்டம்பர் 1958

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் | மயிலை சீனி. வேங்கடசாமி

பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும் அவ்வருணன் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். இலங்கைத் தீவில் , வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும் , உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும் , வடமொழியில் உத்பலவர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல , உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றிவிட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு.   ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன் , குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்தகுமரன் என்று கூறுவத