Skip to main content

அடிமை வாழ்வு - மயிலை சீனி. வேங்கடசாமி


அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது, மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப் படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால், ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீப காலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள் அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலை பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது, அரசியல் விடுதலை பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப் பற்றியும் அல்ல, பொருளாதார அடிமைத்தனத்தைப் பற்றியும், அல்ல. தனிமனிதன் தனிமனிதனுக்கு ஆட்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப் பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது.

எகிப்து, கிரேக்கம், உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக்காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப்பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ்நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரத தேசத்தில் ஆதிகாலம் முதல் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் இருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள்கூட, இந்தியாவில் பண்டைக் காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை.

பண்டைக் காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர், அடிமைகளை யுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடம் மிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்குப் புதுமையாக இருக்கும், சிலர் நம்பவும் மாட்டார் கள். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அடிமைகள் இருந்தார் களா? 'இது என்ன புதுமை!' என்று வாசகர்கள் வியப்படை வார்கள்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினார்கள். அடிமைகள் வேண்டாத போது அவர்களைக் காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத்தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலத்தில் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன. ஆனால் இந்தியச் சரித்திரத்திலும் தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்படவில்லை. இந்நாட்டில், மக்கள் சமூகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்தியச் சரித்திரத்திலும், தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஏன் இடம்பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாவடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது.

ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர் நாட்டு கலைச்செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோவிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன் பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது. இச்செய்தி மேலப் பெரம்பலூர் தக்ஷிணபுரீஸ்வரர் கோவில் சாசனத்தில் காணப்படுகிறது.

திருச்செங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன் - 2 உடைய 13 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது, நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப். பட்டனர் என்று கூறுகிறது.

திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக்கோவிலில் அடிமை ஊழியர்கள் பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவி யாராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து வாங்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் திருச்சி தாலுகா திருப்பலத்துறை தாருகவனேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1326இல் எழுதப்பட்டது. கி.பி. 1374இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடுமனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார். அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படு கின்றன. அப்பெயர்களாவன: தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளத்தான், இவன் தம்பி ஆண்டி . பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும், மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிட மிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவரிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர்.

புதுக்கோட்டை திருமய்யம் தாலுகா திருமய்யம் சத்திய மூர்த்தி கோவில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக் காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. "சீராள தேவன் முனையதரையன் மக்கள் நாயனாரேன், என் மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது" என்று இந்தச் சாசனம் துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது; அடிமைகளின் பெயர் களையும் கூறுகிறது. அப்பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீராளதேவன், இவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. "வளத்தி மகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப் பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம்.

"புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப்பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன.

நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதி காரத்திலும் தொல்காப்பியத்திலும்கூட அடிமைகளைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அடிமை முறை, தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஆராய்ச்சி செய்யலா மல்லவா?

-

நண்பன், மலர் 8, செப்டம்பர் 1958

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...