Skip to main content

உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணி - மயிலை சீனி. வேங்கடசாமி


பரும் யானையொடு பாஞ்சால ராயனை
வெங்களத் தட்ட வென்றி யிவையென
நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப்
பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து.

என்பது பெருங்கதை (வத்தவ காண்டம். கொற்றங் கொண்டது. 10 - 13). நெய்த்தோர்ப் பட்டிகை என்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், நெய்த்தோர் - இரத்தம், பட்டிகை - பத்திரிகை' என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவுதான் எழுத முடியும். பண்டைக்காலத்து உரையா சிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டையுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை.

'நெய்த்தோர்ப் பட்டிகை' என்பது, பண்டைக்காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப்போன ஒரு செய்தியெனத் தெரிகிறது. பண்டைக் காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச்சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது.

உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகை யாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப் பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், இரத்தக்காணி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நெய்த்தோர்ப்பட்டி, உதிரப்பட்டி, இரத்தக்காணி என்னும் பெயர்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது விளங்குகிறது.

தன் அரசனுடைய வெற்றிக்காகப் போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தைச் சிந்திக் கொற்றத்தை நாட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை இனாமாக அளிப்பது வழக்கம். இவ்வாறு தானம் செய்யப்பட்ட நிலத்திற்கு இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்று பெயர் வழங்கப்பட்டன. சில சமயங்களில், போர் வீரன் உயிர் நீத்தலும் உண்டு. அப்போது அவனது ஆற்றலைப் பாராட்டி, இறந்துபட்ட வீரனுடைய உறவினருக்கு உதிரப்பட்டி வழங்கப்படும். தமிழ்நாட்டு மூவேந்தரும் குறுநில மன்னரும் மறைந்துபோன இக் காலத்திலே, பண்டைய பழக்க வழக்கங்களும் மறைந்து போயின. ஆயினும், பழைய நூல்களிலே அப்பழைய பழக்க வழக்கங்களைக் குறிக்கும் சொற்கள் நின்று நிலவுகின்றன. இக்காலத்து அச்சொற்களுக்குப் பொருள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. சாசனங்கள், சில சமயங்களில், இவ்விதச் சொற்களுக்குப் பொருள் காண உதவி செய்கின்றன. உதிரப்பட்டியைக் குறிக்கும் சில சாசனங்களைக் கீழே தருகிறேன்.

இராமநாதபுரம் சில்லா, திருப்புத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர்?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது (47 of 1928).

இராமநாதபுரம் சில்லா, சாத்தூர் தாலூகா, திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் எழுதப்பட்ட சாசனம் (577 of 1922). இதில், வரதுங்கராம தனிப்புலி, கலங்காத கண்ட நாயகரின் வழிவந்த வள்ளி பொம்மன், கலங்காத கண்ட நாயகர் என்பவருக்குத் திருத்தங்கல் கிராமத்தில் இரத்தக்காணி தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இந்தச் சாசனத்தின் பக்கத்தில், ஒரு வீரன் தரையில் நின்றவண்ணம் அருகில் இருக்கும் குதிரையின் தலையை வாளால் வெட்டுவது போன்றும், அக்குதிரையின் மீது ஒருவீரன் அமர்ந்து வாளேந்தியிருப்பது போன்றும், இக்குதிரை வீரனுக்கும் பக்கத்தில் மற்றொரு வீரன் குதிரைமீதமர்ந்து இருப்பது போன்றும் சிற்பம் கற்பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆர்க்காடு சில்லா, திருக்கோவலூர் தாலுகா, காடையார் கிராமத்துச் சாசனம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில், நாடியா கவுண்டர் மகன் கலிதீர்த்தான் என்பவன் போர்க்களத்தில் உயிர் நீத்தமைக்காக, ஏரம் நாயகர் என்பவர் நிலம் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது (237 of 1936).

போர்க்களத்தில் பிறருக்காக உயிர் கொடுத்தவருக்கு மட்டும் உதிரப்பட்டி தானம் அளிக்கப்பட்ட போதிலும், போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு பொறுக்க முடியாமலோ உயிர் விட்டவர்க்கும் உதிரப்பட்டி வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உதாரணம்:

தென் ஆர்க்காடு சில்லா, சிதம்பரம் தாலூகா, அரகண்டநல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் சாசனம். இது, பொன்னாண்டை என்னும் பெயருள்ள தேவராட்டியார் மகன் இளவெண்மதி சூடி ஆடினான் என்பவன், கோயில் மண்டபம் கட்டி முற்றுப்பெறும் பொருட்டுத் தன் தலையை அறுத்துக் கொண்டதற்காக 100 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது (197 of 1934-1935).

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா காரமங்கலம் அகத்தீசுவரர் கோயில் சாசனம், பாண்டியன் ஸ்ரீ குலசேகர தேவரின் 32 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. மேற்படி கோயில் மண்டபத்தைப் பழுது தீர்த்துக்கொண்டிருந்த கல்தச்சன், அறங்குளவன் என்பவன் பெரிய அடிபட்டுக் காயம் பட்டபடியால், மிழலைக் கூற்றத்து பாம்பாற்று நாட்டுத் தலைவனான தன்ம ஆட்கொண்ட தேவர் என்னும் தன்மராயர் அவனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்தார் என்று இச்சாசனம் கூறுகிறது.

ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவருடைய 13 ஆவது ஆண்டுச் சாசனம் (172 of 1935-36) சுந்தர பாண்டிய பட்டன் மனைவி பிறர் கொடுமை தாங்காது நஞ்சுண்டு இறந்தமைக்காக மேற்படி பட்டனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதேசுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது (406 of 1925). இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடி கொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்றுவிட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரரையனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்று களிலிருந்து இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்பது அறியக்கிடக்கிறது.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 10, 1948

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்