Skip to main content

உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணி - மயிலை சீனி. வேங்கடசாமி


பரும் யானையொடு பாஞ்சால ராயனை
வெங்களத் தட்ட வென்றி யிவையென
நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப்
பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து.

என்பது பெருங்கதை (வத்தவ காண்டம். கொற்றங் கொண்டது. 10 - 13). நெய்த்தோர்ப் பட்டிகை என்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், நெய்த்தோர் - இரத்தம், பட்டிகை - பத்திரிகை' என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவுதான் எழுத முடியும். பண்டைக்காலத்து உரையா சிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டையுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை.

'நெய்த்தோர்ப் பட்டிகை' என்பது, பண்டைக்காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப்போன ஒரு செய்தியெனத் தெரிகிறது. பண்டைக் காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச்சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது.

உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகை யாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப் பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், இரத்தக்காணி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நெய்த்தோர்ப்பட்டி, உதிரப்பட்டி, இரத்தக்காணி என்னும் பெயர்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது விளங்குகிறது.

தன் அரசனுடைய வெற்றிக்காகப் போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தைச் சிந்திக் கொற்றத்தை நாட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை இனாமாக அளிப்பது வழக்கம். இவ்வாறு தானம் செய்யப்பட்ட நிலத்திற்கு இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்று பெயர் வழங்கப்பட்டன. சில சமயங்களில், போர் வீரன் உயிர் நீத்தலும் உண்டு. அப்போது அவனது ஆற்றலைப் பாராட்டி, இறந்துபட்ட வீரனுடைய உறவினருக்கு உதிரப்பட்டி வழங்கப்படும். தமிழ்நாட்டு மூவேந்தரும் குறுநில மன்னரும் மறைந்துபோன இக் காலத்திலே, பண்டைய பழக்க வழக்கங்களும் மறைந்து போயின. ஆயினும், பழைய நூல்களிலே அப்பழைய பழக்க வழக்கங்களைக் குறிக்கும் சொற்கள் நின்று நிலவுகின்றன. இக்காலத்து அச்சொற்களுக்குப் பொருள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. சாசனங்கள், சில சமயங்களில், இவ்விதச் சொற்களுக்குப் பொருள் காண உதவி செய்கின்றன. உதிரப்பட்டியைக் குறிக்கும் சில சாசனங்களைக் கீழே தருகிறேன்.

இராமநாதபுரம் சில்லா, திருப்புத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர்?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது (47 of 1928).

இராமநாதபுரம் சில்லா, சாத்தூர் தாலூகா, திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் எழுதப்பட்ட சாசனம் (577 of 1922). இதில், வரதுங்கராம தனிப்புலி, கலங்காத கண்ட நாயகரின் வழிவந்த வள்ளி பொம்மன், கலங்காத கண்ட நாயகர் என்பவருக்குத் திருத்தங்கல் கிராமத்தில் இரத்தக்காணி தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இந்தச் சாசனத்தின் பக்கத்தில், ஒரு வீரன் தரையில் நின்றவண்ணம் அருகில் இருக்கும் குதிரையின் தலையை வாளால் வெட்டுவது போன்றும், அக்குதிரையின் மீது ஒருவீரன் அமர்ந்து வாளேந்தியிருப்பது போன்றும், இக்குதிரை வீரனுக்கும் பக்கத்தில் மற்றொரு வீரன் குதிரைமீதமர்ந்து இருப்பது போன்றும் சிற்பம் கற்பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆர்க்காடு சில்லா, திருக்கோவலூர் தாலுகா, காடையார் கிராமத்துச் சாசனம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில், நாடியா கவுண்டர் மகன் கலிதீர்த்தான் என்பவன் போர்க்களத்தில் உயிர் நீத்தமைக்காக, ஏரம் நாயகர் என்பவர் நிலம் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது (237 of 1936).

போர்க்களத்தில் பிறருக்காக உயிர் கொடுத்தவருக்கு மட்டும் உதிரப்பட்டி தானம் அளிக்கப்பட்ட போதிலும், போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு பொறுக்க முடியாமலோ உயிர் விட்டவர்க்கும் உதிரப்பட்டி வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உதாரணம்:

தென் ஆர்க்காடு சில்லா, சிதம்பரம் தாலூகா, அரகண்டநல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் சாசனம். இது, பொன்னாண்டை என்னும் பெயருள்ள தேவராட்டியார் மகன் இளவெண்மதி சூடி ஆடினான் என்பவன், கோயில் மண்டபம் கட்டி முற்றுப்பெறும் பொருட்டுத் தன் தலையை அறுத்துக் கொண்டதற்காக 100 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது (197 of 1934-1935).

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா காரமங்கலம் அகத்தீசுவரர் கோயில் சாசனம், பாண்டியன் ஸ்ரீ குலசேகர தேவரின் 32 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. மேற்படி கோயில் மண்டபத்தைப் பழுது தீர்த்துக்கொண்டிருந்த கல்தச்சன், அறங்குளவன் என்பவன் பெரிய அடிபட்டுக் காயம் பட்டபடியால், மிழலைக் கூற்றத்து பாம்பாற்று நாட்டுத் தலைவனான தன்ம ஆட்கொண்ட தேவர் என்னும் தன்மராயர் அவனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்தார் என்று இச்சாசனம் கூறுகிறது.

ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவருடைய 13 ஆவது ஆண்டுச் சாசனம் (172 of 1935-36) சுந்தர பாண்டிய பட்டன் மனைவி பிறர் கொடுமை தாங்காது நஞ்சுண்டு இறந்தமைக்காக மேற்படி பட்டனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதேசுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது (406 of 1925). இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடி கொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்றுவிட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரரையனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்று களிலிருந்து இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்பது அறியக்கிடக்கிறது.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 10, 1948

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (