Skip to main content

உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணி - மயிலை சீனி. வேங்கடசாமி


பரும் யானையொடு பாஞ்சால ராயனை
வெங்களத் தட்ட வென்றி யிவையென
நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப்
பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து.

என்பது பெருங்கதை (வத்தவ காண்டம். கொற்றங் கொண்டது. 10 - 13). நெய்த்தோர்ப் பட்டிகை என்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், நெய்த்தோர் - இரத்தம், பட்டிகை - பத்திரிகை' என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவுதான் எழுத முடியும். பண்டைக்காலத்து உரையா சிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டையுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை.

'நெய்த்தோர்ப் பட்டிகை' என்பது, பண்டைக்காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப்போன ஒரு செய்தியெனத் தெரிகிறது. பண்டைக் காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச்சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது.

உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகை யாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப் பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், இரத்தக்காணி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நெய்த்தோர்ப்பட்டி, உதிரப்பட்டி, இரத்தக்காணி என்னும் பெயர்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன என்பது விளங்குகிறது.

தன் அரசனுடைய வெற்றிக்காகப் போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தைச் சிந்திக் கொற்றத்தை நாட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை இனாமாக அளிப்பது வழக்கம். இவ்வாறு தானம் செய்யப்பட்ட நிலத்திற்கு இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்று பெயர் வழங்கப்பட்டன. சில சமயங்களில், போர் வீரன் உயிர் நீத்தலும் உண்டு. அப்போது அவனது ஆற்றலைப் பாராட்டி, இறந்துபட்ட வீரனுடைய உறவினருக்கு உதிரப்பட்டி வழங்கப்படும். தமிழ்நாட்டு மூவேந்தரும் குறுநில மன்னரும் மறைந்துபோன இக் காலத்திலே, பண்டைய பழக்க வழக்கங்களும் மறைந்து போயின. ஆயினும், பழைய நூல்களிலே அப்பழைய பழக்க வழக்கங்களைக் குறிக்கும் சொற்கள் நின்று நிலவுகின்றன. இக்காலத்து அச்சொற்களுக்குப் பொருள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. சாசனங்கள், சில சமயங்களில், இவ்விதச் சொற்களுக்குப் பொருள் காண உதவி செய்கின்றன. உதிரப்பட்டியைக் குறிக்கும் சில சாசனங்களைக் கீழே தருகிறேன்.

இராமநாதபுரம் சில்லா, திருப்புத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர்?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது (47 of 1928).

இராமநாதபுரம் சில்லா, சாத்தூர் தாலூகா, திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் எழுதப்பட்ட சாசனம் (577 of 1922). இதில், வரதுங்கராம தனிப்புலி, கலங்காத கண்ட நாயகரின் வழிவந்த வள்ளி பொம்மன், கலங்காத கண்ட நாயகர் என்பவருக்குத் திருத்தங்கல் கிராமத்தில் இரத்தக்காணி தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இந்தச் சாசனத்தின் பக்கத்தில், ஒரு வீரன் தரையில் நின்றவண்ணம் அருகில் இருக்கும் குதிரையின் தலையை வாளால் வெட்டுவது போன்றும், அக்குதிரையின் மீது ஒருவீரன் அமர்ந்து வாளேந்தியிருப்பது போன்றும், இக்குதிரை வீரனுக்கும் பக்கத்தில் மற்றொரு வீரன் குதிரைமீதமர்ந்து இருப்பது போன்றும் சிற்பம் கற்பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆர்க்காடு சில்லா, திருக்கோவலூர் தாலுகா, காடையார் கிராமத்துச் சாசனம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில், நாடியா கவுண்டர் மகன் கலிதீர்த்தான் என்பவன் போர்க்களத்தில் உயிர் நீத்தமைக்காக, ஏரம் நாயகர் என்பவர் நிலம் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது (237 of 1936).

போர்க்களத்தில் பிறருக்காக உயிர் கொடுத்தவருக்கு மட்டும் உதிரப்பட்டி தானம் அளிக்கப்பட்ட போதிலும், போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு பொறுக்க முடியாமலோ உயிர் விட்டவர்க்கும் உதிரப்பட்டி வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உதாரணம்:

தென் ஆர்க்காடு சில்லா, சிதம்பரம் தாலூகா, அரகண்டநல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் சாசனம். இது, பொன்னாண்டை என்னும் பெயருள்ள தேவராட்டியார் மகன் இளவெண்மதி சூடி ஆடினான் என்பவன், கோயில் மண்டபம் கட்டி முற்றுப்பெறும் பொருட்டுத் தன் தலையை அறுத்துக் கொண்டதற்காக 100 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது (197 of 1934-1935).

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா காரமங்கலம் அகத்தீசுவரர் கோயில் சாசனம், பாண்டியன் ஸ்ரீ குலசேகர தேவரின் 32 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. மேற்படி கோயில் மண்டபத்தைப் பழுது தீர்த்துக்கொண்டிருந்த கல்தச்சன், அறங்குளவன் என்பவன் பெரிய அடிபட்டுக் காயம் பட்டபடியால், மிழலைக் கூற்றத்து பாம்பாற்று நாட்டுத் தலைவனான தன்ம ஆட்கொண்ட தேவர் என்னும் தன்மராயர் அவனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்தார் என்று இச்சாசனம் கூறுகிறது.

ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவருடைய 13 ஆவது ஆண்டுச் சாசனம் (172 of 1935-36) சுந்தர பாண்டிய பட்டன் மனைவி பிறர் கொடுமை தாங்காது நஞ்சுண்டு இறந்தமைக்காக மேற்படி பட்டனுக்கு உதிரப் பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

தஞ்சை சில்லா நன்னிலம் தாலூகா அச்சுதமங்கலம் சோமநாதேசுவரர் கோயில் சாசனம், ராசராச தேவருடைய 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது (406 of 1925). இதில், சோமநாத மங்கலம், சோமநாத சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமங்களுக்கும் சீதக்க மங்கலம் என்னும் கிராமத்துக்கும், முடி கொண்ட சோழப் பேராறு என்னும் ஆற்றின் நீரை நிலங்களுக்குப் பாய்ச்சுவதில் சச்சரவு ஏற்பட்டு அதன் காரணமாக ராசராசப் பேரரையன் என்பவனைத் தவறாகக் கொன்றுவிட்ட குற்றத்திற்காக அவன் மகன் எதிரிலாப் பேரரையனுக்கு உதிரப்பட்டியாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

இதுகாறும் எடுத்துக் காட்டிய சாசனச் சான்று களிலிருந்து இரத்தக்காணி, உதிரப்பட்டி, நெய்த்தோர்ப்பட்டி என்பன இன்னதென்பது அறியக்கிடக்கிறது.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 10, 1948

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...