Skip to main content

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி, பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து, அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய 'திருச்சி ஜெயில்' என்பதாகத்தான் இருக்கும். 1941-இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு, 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58-ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப்பேரவை உறுப்பினராக டி. எஸ். சொக்கலிங்கம் (தினமணி முன்னாள் ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்யத் தீர்மானித்தார் என்பதுதான்.

'1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான் கண்டதும் கேட்டதும், நான் அனுபவித்த சுகமும் கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது” - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு எழுதியிருக்கும் முன்னுரை.

அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப. சுப்பராயன்.

சிரிப்பும், சுவாரசியமுமாக சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாதகரையாளர் எழுதியிருப்பதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச் சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி. எஸ். சொக்கலிங்கம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே. சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும். சொல்லி விளக்கமுடியாது.

ஜாதி, மத பேதமின்றி, மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத கரையாளரின் ‘ஜெயில் டைரி’ படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!

- கலாரசிகன்

(நன்றி: தினமணி, 10-07-2022)

'திருச்சி ஜெயில்' நூல் வாங்க

Azhisi ((12% off + Free Delivery)

https://cutt.ly/TLj1rnt

CommonFolks (5% off)

https://cutt.ly/nLj1yRT

Panuval (5% off)

https://cutt.ly/6Lj1it7

BooksPage

https://cutt.ly/TLj1pel

DialForBooks

https://cutt.ly/TLj1aA0

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...