Skip to main content

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி, பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து, அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய 'திருச்சி ஜெயில்' என்பதாகத்தான் இருக்கும். 1941-இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு, 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58-ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப்பேரவை உறுப்பினராக டி. எஸ். சொக்கலிங்கம் (தினமணி முன்னாள் ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்யத் தீர்மானித்தார் என்பதுதான்.

'1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான் கண்டதும் கேட்டதும், நான் அனுபவித்த சுகமும் கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது” - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு எழுதியிருக்கும் முன்னுரை.

அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப. சுப்பராயன்.

சிரிப்பும், சுவாரசியமுமாக சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாதகரையாளர் எழுதியிருப்பதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச் சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி. எஸ். சொக்கலிங்கம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே. சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும். சொல்லி விளக்கமுடியாது.

ஜாதி, மத பேதமின்றி, மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத கரையாளரின் ‘ஜெயில் டைரி’ படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!

- கலாரசிகன்

(நன்றி: தினமணி, 10-07-2022)

'திருச்சி ஜெயில்' நூல் வாங்க

Azhisi ((12% off + Free Delivery)

https://cutt.ly/TLj1rnt

CommonFolks (5% off)

https://cutt.ly/nLj1yRT

Panuval (5% off)

https://cutt.ly/6Lj1it7

BooksPage

https://cutt.ly/TLj1pel

DialForBooks

https://cutt.ly/TLj1aA0

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan தமிழ்நாட்டில் பாபாவின் யாத்திரை ஒன்றே முக்கால் மாதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ஊழியர்களுக்கு ஒருமுறை என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். ஏனெனில் உங்களுடைய ஒத்துழைப்பும் , உதவியுமில்லாமல் பூதான இயக்கப் பணி இங்கே நடைபெற முடியாது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் தமிழகத்தில் நடைபெறுகின்ற செயல் சமக்கிரகமாகவும் , பரிபூரணமாகவும் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். சமக்கிரக என்று சொன்னால் பூதான இயக்கத்தோடு எல்லா நிர்மாணப் பணிகளையும் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த அளவிற்குக் காரியம் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்யவேண்டும்.   தெலுங்கானாவில் பூதான உதயம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கம் தெலுங்கானாவில் தோன்றியது என்பதை அறிவீர்கள். இயக்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமோ , சங்கல்பமோ அதற்கு முன்னால் இதயத்தில் தோன்றவேயில்லை. தெலுங்கானாவில் காணப்பட்ட நிலையில் , அச்சூழ்நிலையில் பூமிதான இயக்கம் இயற்கையாகவே தோன்றியது. இரு கிராமத்திலுள்ள நிலமில்லாத மக்களுக்கு 80 ஏக்கரா வேண்டுமென்று கேட்டேன். ஒருவர் மு...