Skip to main content

சேலையும் வளையலும் | மனுபென் காந்தி

1947 டிசம்பர் மாதம், இரு கைகளிலும் வளையல்கள் அணிந்து சேலை உடுத்தியிருந்தேன். பாபூ சேலையைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் கையிலுள்ள வளையல்களுக்குப் பதிலாக நானே நூற்ற நூல் இழைகளை அணியச் சொன்னார். அதற்கு நான், "இந்த வளையல்கள் பெண்களின் அடிமைத்தனத்தின் அறிகுறி என்று நீங்கள் கருதுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தச் சேலை உடுத்தியிருக்கும்போது இந்த வளையல்களைப் பூணாது போனால் அழகாயிராதே. ஆனால் ஆசிரமத்திலுள்ள மற்றப் பெண்கள் அவ்வாறு நினையார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அவர்கள் உங்களைத் திருப்தி செய்யவே இவ்வாறு கூறுவரென்று நான் தைரியமாகச் சொல்லுவேன். உங்கள் யோசனைப்படி நான் நடந்தால் நீங்கள் திருப்தி கொள்வதைக் கண்டு மற்றப் பெண்களும் அது போலவே நடக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் இஷ்டம் போல் இருக்கவிட்டால், சமயம் வாய்க்கும்போது அடக்கிக்கொண்டுள்ள தம் விருப்பங்களை வெளிப்படுத்திச் சற்று அளவு கடந்தும் செல்வர். இது உங்களையும் உங்கள் வேலையையும் உங்களை அண்டினவரையும், ஏன், நாட்டையுமே பாதிக்கும். இயற்கையுடன் ஒட்டி அணி அலங்காரமின்றி இருக்குமாறு எனக்குப் போதித்திருக்கிறீர். நான் எதையும் உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ஏதோ காரணமாகத்தான் இதை இன்று அணிந்துள்ளேன். உள்ளத்தில் கொண்ட ஓர் உறுதியின் விளைவாகத் தோன்றும் ஓர் எளிமையை நான் போற்றுவேன். ஆனால், விருப்பத்திற்கு மாறாகவோ, புரிபடாமலோ இப்படி எளிமையுடன் விளங்குவதும் உங்களைத் திருப்தி செய்யும் பொருட்டே. இதன்படி ஒழுகுவதும் உள்ளக் கரவே அன்றி வேறில்லை. நீங்களும் சரி, உங்களுடன் பணி ஆற்றும் நண்பர்களும் சரி, நாங்கள் கேட்காமல் இருக்கும்போது வேண்டிய உபதேசங்களைத் திணிக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் எங்களை விடத் தவறு செய்தவராகிறீர்கள். எங்களுக்குள்ள பலவீனத்தையோ, வலிமையையோ நாங்கள் தானே உணர்ந்து அதன்படி ஒழுகவேண்டும். ஒரு கட்டிற்கு உட்பட்ட உபதேசங்களைப் புகட்டினால் நாங்கள் அவற்றின்படி நடக்க முயல்வோம். உங்களுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு உங்கள் பணியும் மேலும் மேலும் எங்கிலும் பயன் பெறுவதாக அமையும். இன்று உங்களுக்கு எதிலும் நம்பிக்கை குறைந்து வருகிறது. எல்லோரும் கை நழுவவிட்டதாக நினைக்கிறீர். இதற்குக் காரணம் இதுவே: உங்களுடன் இந்த 25 ஆண்டுகள் சேர்ந்து பணி புரிந்தவர்களை நோக்குவீர். இன்று அவர்களும், அவர்களது நற்பண்பும், சமூகமும், நீங்களுந்தான் தூஷணைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். இதுபோன்ற செய்திகள் வெளியிடத்திலிருந்து வருவதைக் கேட்டு நான் திகைப்புறுகிறேன். இதையெல்லாம் உங்களுக்கு யார் எடுத்துச் சொல்லுகிறார்கள்?'' என்றேன்.
நான் கூறுவதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார் பாபூ. வெகு நாட்களாகவே ஒரு வகை ஆத்திரம் என்னுள் குமுறிக்கொண்டே இருந்தது. பஞ்சாபி ஆடையை விட்டு நான் சேலையை அணியத் துணிந்ததற்குக் காரணமும் அதற்கான அத்தாட்சியும் பாபூவிடம் தெரிவிக்கவே உறுதி கொண்டேன். கடைசியில் அவர் சொன்னதாவது: "எனக்கு இதையெல்லாம் நீ விளக்கமாக எடுத்துச் சொன்னதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். வளையலுடன் நீ சேலையையும் அணிவது குறித்தும் மகிழ்ச்சியே. நீ சொல்வதே சரி. அவரவர் விருப்புக்கு ஏற்றவாறு நடப்பதே நல்லதென்பதை நான் வற்புறுத்திக் கூறுபவன். ஆனால் காந்திஜிக்குத் திருப்தி அளிக்குமே என்று எந்தக் காரியத்தையும் செய்யத் தேவையில்லை.'' மேலும் தொடர்ந்தார்: "இப்படி மனத்தில் உள்ளதை பயமின்றித் தெளிவாக வெளிப்படுத்தும் பெண்கள் ஐந்து பேர் என் பக்கத்தில் இருப்பின் நான் ஏற்றுள்ள பணி எவ்வளவோ எளிதாக நிறைவேறியிருக்குமே. ஒரு சந்தோஷம். நீயாவது ஒருத்தி இருக்கிறாயே."
இதற்குள் பெல்ஜியம் நாட்டு இளவரசி அங்கு வந்தாள். என்னை அறிமுகப்படுத்த பாபூ அவளிடம், "இந்தப் பெண் இப்போதுதான் அவள் பாட்டனாருக்கு ஒரு பெரிய சொற்பொழிவு நிகழ்த்தினாள்'' என்றார். அவளைச் சந்தித்த பிறகு உடனேயே நான் என் சேலையைக் கலைத்துப் பஞ்சாபி ஆடையைப் பூண்டேன். என்ன ஏதாவது உனக்குப் பைத்தியமா?'' என்று பாபூ சொன்னார். அவருக்கு எச்சரிக்கை செய்ய அந்த ஆடையை அணியவேண்டியதாயிற்றுஎன்றேன். பாபூ, நிகழ்ந்ததை அப்படியே அவ்விளவரசியிடம் மொழியவே, அவளும் மகிழ்ச்சியுற்றாள். "இந்தப் பெண் இன்று அணிந்த அந்தச் சேலை என்னை எவ்வளவோ சிந்திக்க வைத்துவிட்டது'' என்றார் பாபூ.
***
பாபூஜியின் நினைவுக் கோவை | குஜராத்தியில், மனுபென் காந்தி | தமிழில், த. நா. குமாரஸ்வாமி
https://amzn.to/35YS1ed

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்