Skip to main content

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

ஹரிஜன பணி மிகவும் முக்கியம்’ - இப்படி எண்ணினார், காந்தி. 'ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும்; இதற்குப் பணம் வேண்டும்' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார்.
கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார்.
பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள், எழுதுவாள்.
கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள்.
பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள்.
அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா?"
நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார்
"ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையும் கொடுத்துவிடேன்" என்றார் காந்தி.
வளையலையும் நிருபமா கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். அவளுடைய கண்ணிலே நீர் துளும்பியது. அதைக் காந்தி பார்த்துவிட்டார். அவளை முதுகிலே தட்டிக் கொடுத்தார்.
"நீ அழுகிறாய். இப்படிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்" என்றார்.
வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அங்கே நிருபமாவின் பெற்றோர் இல்லை.
ஒரு வீட்டிலே காந்தி தங்கினார். காந்தியோடு கூடவே நிருபமாவும் போனாள். அங்கே நிருபமாவின் பெற்றோர் வந்தார்கள்.
இந்தச் செய்தியை நிருபமாவின் அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள்.
நிருபமாவிடம் அம்மா சொன்னாள்: அசடே காந்தி கேட்டால் அழலாமா? வளையலையும் கொடுத்துவிடு."
உடனே வளையலை நிருபமா மறுபடி கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். காதுத் தோட்டையும் கழற்ற முயன்றாள். காந்தி தடுத்தார்.
"வேண்டா, வேண்டா. அதை நீயே வைத்துக்கொள் இது போதும் எனக்கு" என்றார். நிருபமா, சரி என்று பேசாதிருந்தாள்.
மறுபடியும் காந்தி சொன்னார்: "நகைகளைக் கொடுத்தாய். இது எனக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால், ஒன்று; இனி நீ ஒருநாளும் நகையே அணியக்கூடாது. சரிதானா?"
"சரி, நான் இனிமேல் நகை அணிய மாட்டேன்" என்றாள் நிருபமா. நாற்பதாண்டு உருண்டோடியது. நிருபமா சொன்னபடி நடந்தாள். அவள் நகையே அணியவில்லை. டாக்டர் வேலைக்குப் படித்தாள்; பட்டமும் பெற்றாள்.
நிருபமாவுக்கு காந்தி கடிதம் எழுதுவார். அவளும் அவருக்கு எழுதுவாள். கடிதங்கள் இந்தியில்தான் இருக்கும்.
மேடையில் ஏறி நிருபமா பேசுவாள். அதில் அவளுக்கு ஆசை. அவளுக்கு அசாத்தியக் கூச்சம்; கூட்டத்தில் பேச வராது. கண்ணீர் சொரிவாள்.
காந்திக்கு அவள் இதை எழுதினால் அதற்குக் காந்தி பதில் எழுதினார்: "நீ இன்னும் சிறு பெண். அதனால்தான் உனக்கு அழுகை வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேடையில் ஏறாதே, பேசாதே. தனியே இருப்பாய் அல்லவா? அப்போதெல்லாம் உரத்துப் பேசிப் பழகு. ஆசையை இப்படி அடக்கு. அதனால் உன் திறமை பெருகும். மேடையில் பேசத் தானாக வந்துவிடும்."

அடுத்தக் கதை: பறக்கும் வித்தை

Comments