Skip to main content

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

ஹரிஜன பணி மிகவும் முக்கியம்’ - இப்படி எண்ணினார், காந்தி. 'ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும்; இதற்குப் பணம் வேண்டும்' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார்.
கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார்.
பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள், எழுதுவாள்.
கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள்.
பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள்.
அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா?"
நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார்
"ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையும் கொடுத்துவிடேன்" என்றார் காந்தி.
வளையலையும் நிருபமா கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். அவளுடைய கண்ணிலே நீர் துளும்பியது. அதைக் காந்தி பார்த்துவிட்டார். அவளை முதுகிலே தட்டிக் கொடுத்தார்.
"நீ அழுகிறாய். இப்படிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்" என்றார்.
வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அங்கே நிருபமாவின் பெற்றோர் இல்லை.
ஒரு வீட்டிலே காந்தி தங்கினார். காந்தியோடு கூடவே நிருபமாவும் போனாள். அங்கே நிருபமாவின் பெற்றோர் வந்தார்கள்.
இந்தச் செய்தியை நிருபமாவின் அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள்.
நிருபமாவிடம் அம்மா சொன்னாள்: அசடே காந்தி கேட்டால் அழலாமா? வளையலையும் கொடுத்துவிடு."
உடனே வளையலை நிருபமா மறுபடி கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். காதுத் தோட்டையும் கழற்ற முயன்றாள். காந்தி தடுத்தார்.
"வேண்டா, வேண்டா. அதை நீயே வைத்துக்கொள் இது போதும் எனக்கு" என்றார். நிருபமா, சரி என்று பேசாதிருந்தாள்.
மறுபடியும் காந்தி சொன்னார்: "நகைகளைக் கொடுத்தாய். இது எனக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால், ஒன்று; இனி நீ ஒருநாளும் நகையே அணியக்கூடாது. சரிதானா?"
"சரி, நான் இனிமேல் நகை அணிய மாட்டேன்" என்றாள் நிருபமா. நாற்பதாண்டு உருண்டோடியது. நிருபமா சொன்னபடி நடந்தாள். அவள் நகையே அணியவில்லை. டாக்டர் வேலைக்குப் படித்தாள்; பட்டமும் பெற்றாள்.
நிருபமாவுக்கு காந்தி கடிதம் எழுதுவார். அவளும் அவருக்கு எழுதுவாள். கடிதங்கள் இந்தியில்தான் இருக்கும்.
மேடையில் ஏறி நிருபமா பேசுவாள். அதில் அவளுக்கு ஆசை. அவளுக்கு அசாத்தியக் கூச்சம்; கூட்டத்தில் பேச வராது. கண்ணீர் சொரிவாள்.
காந்திக்கு அவள் இதை எழுதினால் அதற்குக் காந்தி பதில் எழுதினார்: "நீ இன்னும் சிறு பெண். அதனால்தான் உனக்கு அழுகை வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேடையில் ஏறாதே, பேசாதே. தனியே இருப்பாய் அல்லவா? அப்போதெல்லாம் உரத்துப் பேசிப் பழகு. ஆசையை இப்படி அடக்கு. அதனால் உன் திறமை பெருகும். மேடையில் பேசத் தானாக வந்துவிடும்."

அடுத்தக் கதை: பறக்கும் வித்தை

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...