Skip to main content

பல ரூபங்களில் காந்தி: சலவைத் தொழிலாளி | அனு பந்தோபாத்யாயா


பாரிஸ்டர் காந்தி சீரான முறையில் ஐரோப்பிய உடைகளுடன் கோர்ட்டுக்குச் சென்று வந்தார். தினந்தோறும் அவரது சட்டைக்குப் பொருந்தும் விதத்தில் காலரும் தேவைப்பட்டது. சட்டையை ஒவ்வொரு மூன்றாவது நாளும் அவர் மாற்றி வந்தார். சலவைக்கு அவர் நிறையப் பணம் செலவழிக்க வேண்டி வந்தது. சலவைத் தொழிலாளி, துணிகளைத் தாமதமாகவே கொண்டுவந்துகொண்டிருந்தார். இதனால், காந்திஜிக்கு நிறைய உடைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முப்பத்தாறு சட்டைகளும் காலர்களும்கூட சலவைத் தொழிலாளியின் தாமதத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
காந்திஜி தனது செலவுகளைக் குறைக்க எண்ணினார். ஒரு நாள், அவர் சலவைக்குத் தேவையான உபகரணங்களுடன் வீட்டிற்குத் திரும்பினார். துணிகளைச் சலவை செய்வது பற்றி ஒரு புத்தகத்தையும் வாங்கிப் படித்தார். இவ்வாறு தன்னைத் தயார் செய்துகொண்ட பின், துணிகளை வெளுக்க முனைந்தார் காந்திஜி. கஸ்தூர்பா, காந்திஜி செய்யும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அனுமதிக்கப்படவில்லை. அவருக்கும் சலவைப் பயிற்சி அளிக்கப்பட்டது. காந்திஜியின் தினசரிப் பணிகளில் இன்னும் ஒரு வகை கூடியது. ஆனால், வேலைப் பளுவைப் பற்றி காந்திஜி எப்போதுமே மலைத்ததில்லை. சலவைத் தொழிலாளியின் "கொடுங்கோன்மையிலிருந்து'' விடுதலை பெறுவதுதான் அவருக்கு முக்கியமாகப் பட்டது. முதல் நாள், அவர் காலரைச் சலவை செய்து கஞ்சி போட்டு உலர்த்தினார். அனுபவமின்மை காரணமாக இஸ்திரிப் பெட்டி சூடேறுவதற்கு முன்பாகவே, போதிய அழுத்தமும் தராமல் இஸ்திரி தேய்த்துவிட்டார். அதிகச் சூடு அல்லது அழுத்தத்தில் துணி எரிந்துவிடும் என்று அவர் பயந்தார். அன்று நீதிமன்றத்திற்கு அந்தக் காலருடன்தான் அவர் சென்றார். கஞ்சி அதிகமாக இருந்ததால் காலர் அதிகமான விரைப்புடன் காணப்பட்டது. அவரது நண்பர்கள் அதைப் பார்த்து சிரித்தனர். காந்திஜி அதைப் பொருட்படுத்தவில்லை. ''துணி வெளுப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். அதனால்தான், கஞ்சி சற்று அதிகமாகிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்து சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அல்லவா, அதுவே போதும்,'' என்றார் காந்திஜி.
"லாண்டரிகள் இல்லாமலா போய்விட்டன?" என்று வினா எழுப்பினார் ஒரு நண்பர்.
"லாண்டரிகள் இருக்கின்றன. கட்டணம்தான் அதிகமாக உள்ளது. ஒரு காலரை வெளுப்பதற்கு அவர்கள் கேட்கும் கட்டணத்தில் இன்னொரு காலரே வாங்கிவிடலாம். மேலும் நாம் சலவைத் தொழிலாளியின் தயவில் இருக்க நேரிடுகிறது. எனது துணிகளை நானே சலவை செய்துகொள்வதையே நான் விரும்புகிறேன்," என்று காந்திஜி விடையளித்தார். சிறிது காலத்திற்குள் காந்திஜி ஒரு சிறந்த சலவைத் தொழிலாளியாகவும் உருவெடுத்துவிட்டார்.
காந்திஜியின் குருவான கோகலே, ஒரு தடவை அவருடன் தங்கி இருந்தார். கோகலே ஒரு விருந்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்தது. அவரது கழுத்துப் பட்டி கசங்கி இருந்தது. காந்திஜி அவரிடம், “நான் அதை இஸ்திரி போட்டுத் தரட்டுமா?”. என்று கேட்டார். கோகலேயோ "உனது வழக்காடும் திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சலவை-இஸ்திரி விஷயத்தில் நம்பிக்கை இல்லை. நீ அதைச் சரியாக செய்யாவிட்டால் என்ன ஆகும்?'' என்று பதில் கொடுத்தார். காந்திஜி பிடிவாதமாக அந்தக் கழுத்துப்பட்டியை இஸ்திரி செய்து கொடுத்தார். கோகலேக்கு காந்திஜியின் பணி திருப்தி அளித்தது. காந்திஜிக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. "இனிமேல் எனக்கு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை! கோகலேயே என் பணியில் திருப்தி அடைந்துவிட்டாரே!'' என்று கூறினார் காந்திஜி.
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி நிறுவிய ஆசிரமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. துணிகளை வெளுப்பதற்காகப் பெண்கள் நீரைத்தேடி வெகு தொலைவு நடக்க வேண்டி இருந்தது. அப்போது காந்திஜி அவர்களுக்கு உதவி வந்தார். கதர் உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் தயாராகிய புடவைகள் மிகவும் கனமாக இருக்கும். காந்திஜியின் விருப்பத்திற்கிணங்க பெண்கள் அவற்றை அணிந்தார்கள். ஆனால், அவற்றைத் துவைப்பதற்கு சிரமப்பட்டார்கள். காந்திஜி தாமே அவர்களது துணிகளைத் துவைத்துத்தர முன்வந்தார். பிறருடைய துணிகளை வெளுத்துத் தருவது பற்றி அவர் சிறிதும் வெட்கமோ தயக்கமோ காட்டவில்லை. ஒரு தடவை அவர் ஒரு தனவந்தரின் வீட்டில் விருந்தாளியாகத் தங்கி இருந்தார். குளியலறையில் நுழைந்தபோது வெள்ளை வேஷ்டி ஒன்று தரையில் கிடப்பதைப் பார்த்தார். தனது துணிகளுடன் சேர்த்து அதையும் அவர் துவைத்து உலர்த்திவிட்டார். ''வெள்ளைத் துணிகளை நல்ல சூரிய வெளிச்சத்தில் உலர்த்தினால்தான் அவை பளிச்சிடும், கிருமிகளும் அழிந்துபோகும்'' என்று காந்திஜி கூறிவந்தார். அந்த தனவந்தருக்கு சங்கடமாகப் போய்விட்டது. "பாபுஜி, ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்டார். "ஏன்? இதில் என்ன தவறு? குளியலறையில் கீழே கிடந்த அந்த வெள்ளைத் துணி அழுக்காகி இருக்கும். அதை நான் துவைத்து வைத்தேன். அழுக்குத் துணியை வெளுத்தது பற்றி நான் வெட்கம் அடைவதில்லை'' என்று காந்திஜி கூறினார். காந்திஜிக்கு வெட்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த தனவந்தருக்கு ஏற்பட்டது.
முதுமைப் பருவத்திலும்கூட சிறைவாசத்தின்போது, தனது அரையாடை, துண்டு, கைக்குட்டை ஆகியவற்றைத் தாமே சலவை செய்து, தனது சக ஊழியர்களுக்கு அந்த வாய்ப்பு அளிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆகாகான் அரண்மனையில் அன்னை கஸ்தூர்பாவின் இறுதி காலத்தில் அவரது கைக்குட்டைகளை அண்ணலே துவைத்து வைப்பார்.
தனது உடைகளில் எப்போதுமே அவர் கவனம் செலுத்தி வந்தார். சிறுவனாக இருந்தபோதே தனது வேஷ்டி மற்ற சிறுவர்களின் வேஷ்டியைக் காட்டிலும் வெண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணி நன்றாகத் துவைப்பார். கிணற்றில் தண்ணீர் இறைத்து துணிகளை அவர் வெளுப்பார். பிறரின் எளிமையை காந்திஜி பாராட்டுவார். ஆனால், அழுக்கான கசங்கிய உடைகளை அவர் வெறுத்தார். தனது அரையாடை, மேல்துணி, துண்டு ஆகியவற்றை அழுக்கு, கறை ஏதும் இன்றி மிகவும் சுத்தமாகவும், இஸ்திரி செய்தும் அவர் வைத்திருப்பார். தூய்மையின் மொத்த உருவமாக காந்திஜி விளங்கிவந்தார்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு