Skip to main content

பூதான உதயம் - 2 | வினோபா பாவே

சுயநலத்திற்கு உயர்ந்த பயிற்சி
ஒரு நண்பர் பாபா அனைவரையும் பரமார்த்திகளாக்கதுறவிகளாக்க விரும்புகிறாரென்று எழுதியிருந்தார். மனிதனிடம் பரமார்த்த உணர்ச்சி குறைவாயும் சுயநல உணர்ச்சி அதிகமாயும் இருக்கிறதென்று சொல்லப்படுவதை நான் ஒப்பவில்லை. மனிதனைப் பற்றிய இந்தக் கருத்தே தவறென்பது என் அபிப்பிராயம். சமூகத்திற்காகத் தனது என்பதனைத்தையும் துறப்பதில்தான் மனிதனுடைய நலம் அமைந்திருக்கிறது. மனிதன் எந்த அளவுக்குப் பிறருக்காகத் துறக்கிறானோ, தியாகம் புரிகிறானோ அதே அளவுக்குப் பயன் பெறுகிறான் தாய்க்குத் தம் வீட்டில் கிட்டும் இன்பம் எந்த சுயநலமி அல்லது உலோபிக்குக் கிட்டும்? தாய்மாரிடம், “நீங்கள் சமையலானதும் சாப்பிட்டுவிட்டுப் பிறகு குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் உணவளித்தாலென்ன?” என்று கேட்டுப்பாருங்கள். தாய்மார் தம் குழந்தைகளிடம், “நீங்கள் அனைவரும் என்னை அண்டி, என்னை நம்பி இருப்பதால் என் உடல் வலுவாயிருக்கவேண்டும். எனவே நான் முதலில் பால் அருந்துகிறேன், பிறகு நீங்கள் அருந்துங்கள்என்று சொல்வார்களானால், தாய்மார் நவீன பொருளாதார விற்பன்னர்களிடம் சீடர்களாகிய இத்தகைய சுயநலப்பாடம் படித்து அனுஷ்டிப்பார்களானால், அவர்களுக்கு அதனால் என்ன இன்பம் ஏற்படும்? இவ்வாறு வீட்டுக்கு வீடு பரமார்த்தத்தின் உதாரணம் நிதரிசனமாய் இருந்து வருகையில், தியாகம் செய்வோருக்கே இன்பம் கிட்டுகிறது என்று நான் அனுபவத்தில் உணருகையில் நான் அதிகமாய் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. "உங்களுக்கு உங்கள் வீட்டிலேயே இன்பம் பெறுவதற்கான முறை போதிக்கப்படுகிறது. அதற்கான யுக்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதையே தம் தம் கிராமங்களில் உபயோகியுங்கள்" என்று மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வீட்டில் தம் குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படுவீர்களேயன்றி தம்மைப்பற்றி அவ்வளவு நினைப்பதில்லை, நீங்கள் தம் வீடுகளில் அனுஷ்டிக்கும் அதே நியாயத்தை கிராமத்திலும் அனுஷ்டித்தால் உங்கள் இன்பம் பெரிதும் பெருகும்.
இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளுதல் மிகவும் சுலபம். இதை எழுத்து வாசனை இல்லாதவர்களும் புரிந்துகொண்டுவிட்டமையால் கோராபுட் ஜில்லாவில் 350  கிராமத்தில் மக்கள் தம் கிராமங்களனைத்தையும் தானமளித்துவிட்டார்கள். சமூகத்திற்கு உண்மையான சுயநலப் பயிற்சி அளிப்பதாய் நான் உரிமையுடன் கூறுகிறேன். இந்தியன் ஒவ்வொருவனுடைய சுயநலமும் அவன் தனது தனி உடைமைஉரிமையைத் துறப்பதில்தான் அடங்கியிருக்கிறது.
கால்பந்து விளையாட்டு உதாரணம்
கால்பந்து விளையாட்டு எப்படி நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். என்னிடம் பந்து வந்ததும் நான் அதைப் பிடித்து என்னிடமே பத்திரமாய் வைத்துக்கொண்டிருந்தால் ஆட்டம்தான் நடக்குமா, அதனால் இன்பந்தான் ஏற்படுமா? என்னிடம் பந்து வந்தவுடனே நான் அதை இன்னொருவனிடம் உதைத்துத் தள்ளுகிறேன். அப்பொழுதுதான் ஆட்டம் நடக்கிறது, இன்பம் ஏற்படுகிறது. இதே வகையில் நம் கைக்கு வரும் பணத்தை நம்மிடமே கெட்டியாய் வைத்துக்கொண்டிருப்பதில் இன்பமில்லை; அதை சமூகத்திடம் திரும்பச் சேர்ப்பதில்தான் இன்பமிருக்கிறது. உங்களுக்கு ஒரு லாடு கிடைத்து உங்கள் கை, பொருளாதார சாஸ்திரம் பயின்ற வித்வானாகையால் லட்டுவை அது தன்னிடமே மூடி வைத்துக்கொண்டிருந்தால் உணவே இல்லாமற்போய்விடும். ஆனால் அது தன் நலம் அந்த லாடுவை வாயில் போடுவதில்தான் இருக்கிறது என்பதை உணருகிறது. வாய் சுயநலம் காரணமாய் லாடுவை தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தால் வாயே லாடுவைப் போல உப்பிப்போகுமேயல்லாது அதை உண்ட இன்பம் அதற்கு எவ்வாறு ஏற்படும்? ஆனால் வாய் பரமார்த்த நோக்குடன் லாடுவை வயிற்றினிடம் சேர்த்துவிடுகிறது. வயிறும் சுயநலமியாக லாடுவை கெட்டியாய்ப் பற்றிக்கொண்டிருந்துவிடுமாயின் வயிறு உப்பிப்போய் சஸ்திர சிகிச்சை செய்யவேண்டிவரும். ஆனால் வயிறோ அதை வைத்துக்கொண்டு பெரிதும் உழைத்து ரத்தமாக்கி உடலெங்கும் அனுப்பிவிடுகிறது.
இதே வகையில் பிறரைப்பற்றியே ஓயாது சிந்திப்போர் அடங்கியதே உயிருள்ள சமூகம். கையிடம் வந்த லாடுவை அது உடனே வாயில் போட்டுவிடுவதைப்போல தமக்குக் கிடைத்த செல்வத்தை, பொருளை பிறரிடம் அனுப்பிவிடுவோரைக் கொண்ட சமூகமே உயிருள்ள சமூகம். நிலத்தையும் மற்ற செல்வத்தையும் தம்மிடமே கெட்டியாய்ப் பிடித்துவைத்துக்கொண்டிருப்போர் உள்ள சமூகம் உயிரற்ற சமூகமே. ஒரு சமயம் ஒரு பையன் என்னிடம் வந்து காது நோகிறதென்று சொல்லி அழுதான். நான் குசும்புக்காரனாகையால் அவனிடம் "தம்பி காதல்லவோ நோகிறது? கண்ணில் நீர் வடிவானேன்? கண் அழுவானேன்?" என்று கேட்டேன். ஆனால் காதின் நோவு கண்ணையும் அடைகிறது. இதுவே உயிருள்ள உடலுக்கு அறிகுறி. ஒருவன் காதில் ஒரு முளையை வைத்து அடித்தாலும் கண்ணிலிருந்து துளி நீர் வரவில்லையென்றால் அந்த உடலில் உயிரில்லை, அது பிணமென்று அறியவேண்டும். இதே வகையில் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டாருக்கு நேர்ந்த துன்பம் அண்டை அயலாரைப் பாதிக்கவில்லையென்றால் அந்த கிராம சமூகத்திற்கு உயிரில்லையென்று உணரவேண்டியதே.
வினேபாவைக் காணவே பயம்!
இது மிகவும் சாதாரண விஷயமாகையால் இதை எல்லோரும் புரிந்துகொள்ளுகிறார்கள். சில பெரிய மனிதர்கள் பாபாவை அணுகவே அஞ்சுகிறார்கள். ஒரு சமயம் ஒரு பெரிய மிராசுதாரிடம், "நம் ஊருக்கு பாபா வந்திருக்கிறாரே, போய்ப் பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள்" என்று ஒருவர் சொன்னார். அதற்கு அந்த மிராசுதார் "எனக்கு பாபாவிடம் பெருமதிப்புண்டு. நான் அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுதைக்கு அவரைப் பார்க்க விருப்பமில்லை" என்று பதில் சொன்னாராம். "ஏன்?" என்று கேட்டதற்கு, "பார்க்கப் போனால் அவர் நிலம் கொண்டா என்பார். அவர் கேட்டுவிட்டால் என்னால் இல்லையென்று சொல்ல முடியாது'' என்று பதில் வந்தது. அதற்கு அழைத்தவர் "அவர் கேட்டால் கொடுத்துத்தான் தீரவேண்டுமா? உங்களுக்கு விருப்பமில்லையென்றால் கொடுக்க வேண்டாமே. அவர் சொல்லுவதை காதில் வாங்கிக்கொண்டு வந்துவிடுமே. நிர்ப்பந்தம் செய்து நம் நிலத்தைப் பெறுவதற்கு அவருக்கு அதிகாரமேது? அன்புடன் விரும்பிக் கொடுப்பதைத்தானே அவர் வாங்கிக்கொள்ளுகிறார்." என்று சொன்னார். அப்பொழுது மிராசுதார், "இதில்தானே ஆபத்திருக்கிறது. அவர் அன்பாய்க் கேட்கிறார். அவர் சொல்லுவதெல்லாம் உண்மையாயிருக்கிறது. அதனால்தான் என்னால் அதை மறுக்க முடியாதே என்று அஞ்சுகிறேன்" என்று சொன்னார். என்னிடம் இந்தச் செய்தி வந்தபொழுது நான், "எனக்கு அவருடைய நிலம் கிடைத்துவிட்டது. அவர் என் வார்த்தையை ஏற்றுக்கொண்டுவிட்டாரல்லவா? அதற்குமேல் எனக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்னேன். இந்தியாவின் மக்களனைவரும் பாபா சொல்லுவதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுவிட்டார்களெனின் அதன் பிறகு பாபாவுக்கு ஒரு ஏக்கர் நிலமும் வேண்டியதில்லை. அப்பொழுது நிலத்தை வாங்கிப் பிறகு அதை விநியோகிக்கும் சிரமம் எனக்கேது? என்னை ஆட்டி அலைக்கழிக்கும் கருத்து உங்கள் உள்ளங்களிலும் இடம்பெற்றுவிடுமாயின் அது உங்களை அமைதியாய் இருக்க விடாது; ஆட்டி அலைக்கழிக்கும்.
ஒரு முஸ்லீம் அன்பரின் தானம்
ஒருசமயம் ஒரு முஸ்லிம் மிராசுதார் என்னைக் காண வந்தார். நான் அவரிடம், “நீங்கள் ஐந்து பேர் சகோதரர்களென்றால் எனக்கு ஆறில் ஒரு பகுதி உங்கள் நிலத்தில் அளியுங்கள்என்று சொன்னேன். அதற்கு அவர், “ஆண்டவன் அருளால் நாங்கள் ஐவரே" என்றார். அதற்கு நான், "ஆண்டவன் ஏவலால் நான் உங்கள் ஆறாவது சகோதரனாகிவிட்டமையால் எனக்கு ஆறில் ஒரு பகுதி வேண்டும்என்றேன். அவர் கெட்டிக்காரர். முஸ்லிம்களாகிய எங்களிடையே சகோதரர்களைப் போலவே சகோதரிகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டே" என்றார். அவர் இதைச் சொன்னவுடனே அவர் என் உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டாராகையால் எனக்கு வெற்றி தானென்று உணர்ந்தேன். பிறகு, “உங்களுக்கு எத்தனை சகோதரிகள்?” என்று நான் கேட்கவே, "இருவர்'' என்றார் அவர். அப்பொழுது நான், "ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள் சேர்ந்து ஏழாயிற்று. நான் எட்டாமவன். எனக்கு அரைக்கால் பங்கு கொடுத்துவிடுங்கள்" என்றேன். அவர் உடனே அரைக்கால் பங்கு கொடுத்துவிட்டார். இம்மாதிரியான நிகழ்ச்சிகளையெல்லாம் நான் உங்களுக்கு சொல்வதென்றால் அது ஒரு பாரதமாகிவிடும். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை இந்த என் கண்கள் கண்டிருக்கின்றன. இதுவரை 41 லட்சம் பேர் தானமளித்திருக்கிறார்கள். தான மளித்தவர்களுள் கண்ணே தெரியாத குருடரும் உண்டு. ஒரு சகோதரி தானம் வழங்க இரவில் வெகுநேரம் தாழ்த்தி வந்து சேர்ந்தார். அதற்கு முன் நாங்கள் தூங்கப்போய்விடவே அவர் இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலையில் தானமளித்தபின் விடைபெற்றுச் சென்றார். சிறுபிள்ளைகளும் தம் தந்தையரை வற்புறுத்தி தானம் வழங்கச் செய்திருக்கிறார்கள்.
நாம் உலக சக்தியின் கருவி
சகோதரர்களே, இவற்றிலிருந்தெல்லாம் நாம் அறிவதென்ன? உலகின் சக்தி ஏதோ பெரிய காரியமொன்றை நிறைவேற்ற விரும்பியுள்ளது. நாம் அந்த உலக மகா சக்தியின் கருவிகளே. கிருஷ்ணபகவான் கீதையில் அர்ஜுனனிடம், ''இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே மடிந்துவிட்டார்கள். நீயொரு வியாஜமாயிருந்து என் ஏவலைச்செய்" என்று சொல்லுகிறார். இவ்வாறே நான் உங்களிடம், இந்தியாவில் நிலத்தில் மக்களின் உடைமை மரித்துப்போய்விட்டது. இப்பொழுது முன்வந்து தானம் வழங்குகிறவர்கள் தாராள மனமுள்ளவர்களென்று ஆகும். இவர்கள் உலக சக்தியின் கருவியாக ஆவார்கள், நன்மை பயக்கும் ஆயுதமாவார்கள். பகவான் கையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் சுதர்சனச் சக்கரம் போன்றவர்கள் இவர்கள். இல்லையேல் இந்தக் காங்கிரஸ்காரர்களெல்லாம் எதற்காக என்னை அணுகுகிறார்கள்? அவர்களுக்கு பாபாவிடமிருந்து நாலணா சந்தாவாவது கிடைத்திருக்குமென்று எண்ணுகிறீர்களா? மணலைப் பிழிந்து எண்ணை எடுத்தாலும் எடுக்கலாமே தவிர பாபாவிடமிருந்து நாலணா வாங்கிவிட முடியாது. ஆனால் பாபா சொல்லுவது உண்மையாகையால் அதை யாரும் மீறமுடியாதிருக்கிறது. பாபாவுக்கு உலக மகாசக்தியின் மீது, ஆத்ம சக்தியின் மீது, கடவுளின் சக்தியின் மீதுஅதை நீங்கள் எந்தப் பெயரால் வேண்டுமோ அழைத்துக்கொள்ளுங்கள்நம்பிக்கை இருக்கிறது.
- தொடரும்

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (