Skip to main content

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்


இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும்.

இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும்.

இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவல் இலக்கியத்தில் பரிச்சயம் பெற்ற வேதநாயகம் பிள்ளையும், தாங்களும் அறியாமலோ, நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நமக்குப் பிற மொழித்தொடர்பு ஏற்படுத்தித் தந்துவிடுகிறார்கள். இன்றைய நாவலாசிரியன் எர்னஸ்ட் ஹெமிங்வேயையோ, தாமஸ் ஹார்டியையோ. சார்லஸ் டிக்கன்ஸையோ தவிர வேறு எந்த நாவலாசிரியனையும் பார்த்ததில்லை என்றாலும்கூட, டிக்கன்ஸ், ஹார்டி அல்லது ஹெமிங்வே மூலம் அவர்களைச் சமைத்த இலக்கிய அறிவுக்கெல்லாம் மரபுக்கெல்லாம் வாரிசாகிவிடுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்.

மொழியோ இலக்கியமோ தனித்து ஒரு குறுகிய எல்லைக்குள் இயங்க வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலே எண்ணுவது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். உலக இலக்கியம் உலக மக்களின் பொதுச் சொத்து. அதை அறிந்து அநுபவிக்காதவனைத் துர்ப்பாக்கியசாலி என்றுதான் சொல்லவேண்டும்.

2


இலக்கிய வளர்ச்சியும், உருவ வளமும், அமைதியாக, ரகசியத்தில், ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படித்தான் அது நடைபெற முடியும். எதைப் பின்பற்றி எது நடக்கிறது என்றோ , எது முந்தி எது பிந்தி என்பதோகூட அவ்வளவாகத் தெளிவாகிவிடாத விஷயம்தான். ஆனாலும் பொதுவாக இலக்கிய உருவங்களின் சரித்திரங்களை மேலை நாட்டு ஆசிரியர்கள் மேலை நாட்டு அடிப்படைகளில் ஓரளவுக்குத் தெளிவு செய்யப் பார்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படைகளுக்கே முந்திய ஆதாரம் கூறமுடியுமா முடியாதா என்று உலக நோக்குடன் பார்த்துச் சொல்ல இன்னும் காலம் வரவில்லை. ஆனால் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பல, இடையில் ஒரு மேலை நாட்டு மோகத்தில் மூழ்கி, தங்களுக்குச் சுபாவமான இலக்கிய உருவங்களை மறந்துவிட்டிருந்தன. மேலை நாட்டு இலக்கியத்தின் தொடர்பினால் மீண்டும் பல இலக்கிய உருவங்களை, சிறப்பாக வசன இலக்கிய உருவங்களைப் பெற்றன.

இந்த வசன இலக்கிய உருவங்களை இந்திய மொழிகள் பலவற்றில் முதல் முதலில் உண்டாக்கித் தந்தவர்களே அந்நியர்கள்தான். அதுவும், முக்கியமாக இந்தியாவுக்குக் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்ய வந்த பல ஐரோப்பியப் பாதிரிமார்தான். அவர்கள் தந்த வேகத்தினால் ஒரு புது இலக்கியமே சிருஷ்டியாயிற்று என்று சொல்லவேண்டும். ஆனால் காலப்போக்கில், ஒரு நூற்றாண்டில் பல இந்திய மொழிகளிலும் விழிப்பேற்பட்டுத் தங்கள் பழமைகளை மீண்டும் காணும் ஒரு வாய்ப்பு - இந்தப் பாதிரிமார்களினாலேயே என்று மறுபடியும் சொல்லலாம் - சிருஷ்டித்துத்தரப்பட்டது. இந்த இலக்கிய விழிப்புடன் தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக விழிப்பும் ஏற்படவே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே வங்கத்திலே இந்திய இலக்கிய மறுமலர்ச்சி தொடங்கிற்று. அது நாடெங்கும் பரவி எல்லா மொழிகளையும் பாதித்தது. பழமை மரபும், இடைக்கால மரபும், அந்நிய மரபும் சேர்ந்து, இந்திய மொழிகளில் பலவிதமான இலக்கிய உருவங்களை நமக்குச் சிருஷ்டித்துக் கொடுத்தது. சிறுகதை, நாவல் போன்ற புது வசனத் துறைகளுக்குத் தமிழ்த் தொல்காப்பியத்தில் ஆதாரம் தேட முற்படுகிற காரியம் பழமை மோகத்தால் விளைவதே தவிர வேறு அல்ல. தொல்காப்பியத்தில் ஆதாரம் இருந்தால்தான் சிறுகதையும் நாவலும் தமிழ் இலக்கிய உருவங்களாகும் என்பதும் உண்மையல்ல. எந்த இலக்கியத்துக்குமே, எந்த இலக்கிய உருவத்துக்குமே தமிழ் ஆசிரியருக்குத் தொடர்பு உண்டு; இருக்கவேண்டும். அவன் எடுத்துக் கையாண்டு முடியுமானால் அதில் வெற்றி காண அவனுக்கு உரிமையுண்டு.

இலக்கிய பூர்வமாகத் தோற்றுவிட்டால், வாசகர்கள் அந்த ஆசிரியனை மறந்துவிடுவார்கள் - அவ்வளவுதான்.

3


எந்த மொழியிலுமே ஆரம்ப இலக்கிய உருவம் கவிதையாகத்தான் இருந்திருக்கிறது என்பது இலக்கிய சரித்திரத்திலே தெளிவாகிற விஷயம். கவிதை உருவில் வந்ததுதான் இலக்கியம் என்கிற நினைப்பு பல நூற்றாண்டுகள் எல்லா மொழி மக்களிடமுமே இருந்திருக்கிறது. தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் நீடித்து இன்றும்கூட அந்த எண்ணம் முழுவதும் மறைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

அகம் புறம் என்கிற துறைகளும், இயற்கையோடியைந்த வாழ்வை ஒட்டிய திணைப் பிரிவுகளும் தமிழ் இலக்கிய மரபுகள். செய்யுளில் அந்த நாட்களில் அகவல் புதுமை என்று சொல்லவேண்டும். சமஸ்கிருத மொழியில் இல்லாத ஒரு உருவம் என்று வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். இந்த அகவல் உருவம் தமிழில் தோன்றியது என்று வைத்துக்கொண்டாலும் சரி - அதற்கு முந்திய பண்டைய ஆங்கிலத்தில், பண்டைய கிரேக்கத்திலோ சீனத்திலோ தோன்றிவிட்டது என்று வைத்துக்கொண்டாலும்கூடத் தமிழில் அகவல் தமிழாக இருந்தது என்பது விசேஷம். அகம் புறம் என்கிற துறைகளை நவீன வசன இலக்கியத்துக்கும் உபயோகமாகிற வழியிலே நாம் திரும்பவும் உபயோகப்படுத்தலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலை நாட்டு விமரிசன வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு தமிழ் இலக்கியத்தையே ஒடித்துச் சேவை செய்யும் விமரிசகர்கள் அந்தப் பயனற்ற வேலையை விட்டுவிட்டு, அகம் புறம் என்கிற பாகுபாடுகள் தமிழில் இன்றையச் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய வரையில் எந்த அளவுக்கு விமரிசனச் சொல்லாகப் பயன்படும் என்று பார்க்கலாம். முயற்சி பலிக்காவிட்டாலும், பயனுள்ளதாக இருக்கும். ரெயில், ஏரோப்ளேன், கார் என்று வரும் இந்த அவசர யுகத்தில் இயற்கைப் பாகுபாடுகளான திணைகளை நாம் கைக்கொள்ள அவசியமில்லை.

தமிழில் பண்டைய கவிதைகளுக்கும் மற்ற பண்டைய மொழிக் கவிதைகளுக்கும் ஒரு அடிப்படை இலக்கிய வித்தியாசம் இருப்பது எனக்குத் தெரிகிறது. சாதாரணமாகப் பல சில்லறைக் கவிதைகளைப் படிக்கும்போதும்கூட மேலை நாட்டுக் கவிதை கவிதையாக எனக்குப் புரிகிறது. விரும்பிப் படித்தும் சங்க காலத் தமிழ்க் கவிதைகள் பலவற்றில், தேர்ச்சி பெற்ற பிறகும்கூடச் சுவை தோன்றுவதில்லை. மரபு, திணை, துறையென்பதெல்லாம் இலக்கிய கர்த்தாக்களுக்குப் பயன்பட்டிருக்கலாம்; பண்டிதர்களுக்கு இன்று பிழைப்புத் தரலாம். ஆனால் கவிதையின் சாரம், உயிர், ஆன்மா அவையல்லவே! கவிதையாக உணரக்கூடிய கவிதை தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இந்தப் பரப்பிலே இலக்கிய விமரிசனச் சல்லடை துரிதமாக வேலை செய்து கவிதையைக் கவிதையல்லாததிலிருந்து நமக்கு உடனடியாகப் பிரித்துத் தரவேண்டும்.

பக்தி இலக்கியத்திலே, பக்தி காரணமாக, கவிதையேயல்லாததெல்லாம் இடம்பெறுகின்றன என்பதை மதப் பற்றற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சங்க காலத்து இலக்கியத்தைப் பற்றி மட்டும் இலக்கிய விமரிசனச் சல்லடைக்கு வேலையில்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இது தவறான நிலைமை. பழசு என்பதனால், ஆதி கவிதை என்பதனால் மட்டுமே ஒரு நூல் உயர்ந்ததாகிவிடாது. இலக்கியத்தைத் தவிர வேறு எந்தக் கண்ணோட்டத்துக்கும் இடம் தராமல் சங்க காலத்து இலக்கியம் பூராவையும் (அதாவது சாமிநாதையர் போன்றவர்கள் தயவால் கிடைத்திருப்பவை எல்லாவற்றையும்) விமரிசித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்தத் தரம் பிரித்துப் பார்க்கும் காரியம் முடியும் வரையில் தமிழில் புதுமைக்கும் பழமைக்கும் இடையே ஒரு பெரிய அகழி, தாண்ட முடியாதது போலத் தோன்றும் ஒரு பிளவு, இருந்துகொண்டேதான் இருக்கும்.

குறுந்தொகையில் சில பாட்டுக்களையும், புறநானூறு, அகநானூறு மற்றும் தொகை நூல்கள் முதலியவற்றிலிருந்து கவிதையையும் இலக்கியத்தையும் பிரித்து உமியிலிருந்து அகற்றிக் காணவேண்டும்தான். நீதி நூல்களையும், வாழ்க்கை வழிகளை ஏதோ ஒரு கோணத்தில் நின்று வகுத்துத் தர முயன்ற நூல்களையும் நாம் இலக்கியம் என்று பாராட்டும் வழக்கமும் ஒழியவேண்டும். அவை நமது சமுதாய சரித்திரத்தை ஸ்தாபிக்க உதவும்; நாட்டின் நடப்பைச் சொல்ல உதவும்; இலக்கிய மரபை ஸ்தாபிக்க உதவாது. இதேபோல தேவாரம் திருவாசகம் என்று பரவசமடைவதிலும் அர்த்தமில்லை; சிவனடி சேர உதவினாலும் இவையெல்லாம் முக்கால்வாசிக்கும் மேல் இலக்கியமாக, கவிதையாகத் தேறாது என்பது வெளிப்படை. சத்துள்ளதைச் சத்தற்றதிலிருந்து பிரிக்க முயலவேண்டும். தமிழ்ப்பழமையைச் சவைப்பதை விட்டுவிட்டுச் சுவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

திருமூலரில் பகுதிகள், காரைக்கால் அம்மையார் பாடல்கள், ஆழ்வாராதிகளின் பாடல்களில் ஒரு கால்வாசி என்று தரம் தெரிந்து தமிழ்க் கவிதையைத் தேர்ந்து அநுபவிக்க நமக்குப் பழக்கம் ஏற்படவேண்டும்.

கம்பராமாயணத்தை எல்லாமுமாகக் காணச்செய்யும் முயற்சிகளை விட்டுவிட்டு, அதை ஒரு காவியமாக, தமிழில் சிறந்த காவியமாக அறிய முயற்சி செய்யவேண்டும். இந்த முயற்சியில் டி. கே. சி. அவர்களின் சேவை மிகவும் பயன் தரவல்லது என்பது என் அபிப்பிராயம். சங்க இலக்கியம் கம்பராமாயணமாகப் பரிமளித்ததற்குக் காரணமாக இடையிலே சிலப்பதிகாரம் என்று ஒரு காவியம் இருந்திருப்பதையும் உணர்ந்து - இலக்கிய பூர்வமாக உணர்ந்து - அதன் சுவையைக் காணவேண்டும்.

பழந்தமிழ்க் கவிதையைத் தமிழனுக்குத் தெரிவிக்கிற முயற்சி இந்த எண்பது வருஷங்களில் சரிவர நடந்திருப்பதாகச் சொல்ல முடியாது. இலக்கியக் கண்ணோட்டத்தைத் தவிர வேறு எந்தக் கண்ணோட்டத்துக்கும் இடம் தராமல் தமிழ்க் கவிதையை அறிந்து அதன் உருவங்கள் எப்படிப்பட்டவை என்பதை அறியவேண்டும். இப்போது பண்டைய, இடைக்காலத் தமிழ்க் கவிதையைப்பற்றி உள்ள இலக்கிய அறிவு போதாது. இதை வளர்க்கப் பண்டிதர்களை மட்டும் நம்பிப் பிரயோசனமில்லை. வளர்ப்பதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தும், அதை நழுவவிட்டுவிட்டார்கள். இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள்தான் வழிகாட்ட வேண்டும்; பழைய தமிழ் இலக்கியத்தையும் புதுசையும் பண்டிதர்களிடமிருந்து, புலவர்களிடமிருந்து, அறிஞர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

கம்பனுக்குப் பின் தோன்றிய தமிழ்க் கவிதை உருவங்கள் பலவும் இலக்கியத்தை மக்களுக்குச் சுலபமாக்கித் தரும் காரியத்திலே ஈடுபட்டிருந்தன என்று சொல்லலாம். கம்பனையே மக்கள் கவி என்று ஒரு கோணத்திலிருந்து ராமகாதையைச் சுலபமாக்கியவன் என்று நாம் காணலாம். பெயரற்ற பல புகழேந்திகளுக்கும், சித்தர்களுக்கும், திரிகூட ராஜப்பக் கவிராயருக்கும். முக்கூடற் பள்ளு ஆசிரியருக்கும், தாயுமானாருக்கும், அருணாசலக் கவிராயருக்கும், கோபால கிருஷ்ண பாரதியாருக்கும், அண்ணாமலை ரெட்டியாருக்கும் கடைசியாக சுப்பிரமணிய பாரதியாருக்கும் தமிழ்க் கவிதை மிகவும் கடன்பட்டிருக்கிறது. இவர்களுடைய இலக்கிய வளர்ச்சியையெல்லாம் நாம் இலக்கியக் கண்ணோட்டத்துடன் கணிக்கவே இன்னும் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. கணிக்கும் காலம் வராமற்போகாது. ஆனால் சீக்கிரம் வந்தால் வழி அதிக தூரம் பிசகாமல் இருக்கும் என்று சொல்லலாம்.

ஜோதி ராமலிங்கம் பழசைப் புதுசாக்கியவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ஸ்தல புராணங்களும் இன்னும் பல இடைக்காலச் செய்யுள் நூல்களும் பழசைப் பழசாகவே வைத்திருக்கப் பாடுபட்டன. ஷேக்ஸ்பியர் பாணியில் நாடகம் இயற்றப்பார்த்த வி. கே. சூரியநாராயண சாஸ்திரியாரும், பி. சுந்தரம் பிள்ளையவர்களும் தமிழுடன் ஒட்டாத ஒவ்வாத ஒரு காரியத்தைச் சாதிக்க முயன்று தோல்வியுற்றனர். இலக்கியத்துக்குப் புறம்பான வேறு பல காரணங்களினால் பண்டிதர்கள் அவர்களைப் போற்றிப் புகழ்பாட முயலுகிறார்கள். விந்தைதான்.


பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை பாரதிதாசன் கவிதையில் வேகம் காட்டியது; தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதையில் எளிமை காட்டியது; ச.து.சு.யோகியாரின் கவிதையில் அலங்காரம் காட்டியது; நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதையில் வசனமேயாகிவிட்டது என்று சொல்லலாம். சிறப்பாகச் சொல்லவேண்டிய வேறு செய்யுள் முயற்சிகள் கொத்தமங்கலம் சுப்புவினுடையதும், புதுமைப்பித்தனுடையதும் ஆகும். கொத்தமங்கம் சுப்புவை பெயருள்ள ஒரு புகழேந்தி என்றும் புதுமைப்பித்தனை வாழ்க்கை வரட்சியைப் பாடிய (ஓரளவுக்குத்தான்!) சித்தர் என்றும் சொல்லலாம்.

தமிழில் கவிதை நூல்களின் உருவ ஆராய்ச்சி இதுவரை பண்டிதர்களின் கையிலேயே இருந்து வந்திருக்கிறது. எந்த இலக்கியமும் பண்டிதர்களை மீறி எழவில்லையானால் செத்துத்தான் போகும் என்பதில் ஐயமில்லை. அதற்குத் தமிழ்க் கவிதை இலக்கியமும், அதன் போக்கும், அதன் தராதர நிர்ணயமின்மையுமே போதுமான சான்றுகள்.

4


இலக்கியத்தில் கவிதை ஒரு பெரும் பகுதி. அதேபோல முக்கியமும் சிறப்பும் வாய்ந்த பெரும்பகுதி என்று வசனத்தையும் சொல்லவேண்டும். ஐரோப்பிய இலக்கியங்களிலும்கூடச் சமீபகாலத்தில் தான் வசன இலக்கியம் பிரமாதமாக வளர்ந்து வளம் பெற்றிருப்பது தெரிகிறது. தமிழிலே வசனம் தோன்றி இரண்டு நூற்றாண்டுகளேயாயின. உரைநடையாக இருந்த வசனம், வசனம் என்று பேசுகிற அர்த்தத்தில் மட்டுமில்லாமல் இலக்கியமாகவும் சிறப்புப் பெற்றது பெஷி என்கிற இத்தாலியப் பாதிரியாரின் பரமார்த்த குரு கதையுடன்தான் என்று நாம் சொல்ல வேண்டும்.

பரமார்த்த குரு கதைகளை இன்றைய நோக்கிலிருந்து சிறுகதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவை கதைகள்தான். இன்றையத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு அடியெடுத்துத் தந்த ஆதார வசன உருவம் என்றும் சொல்ல வேண்டும். பஞ்சதந்திரக் கதைகள் மனிதருக்கு அறிவைப் புகட்ட முயன்ற ஒரு உருவம். பொழுதுபோக்காகக் கதைகள் சொல்லப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே ஒருசில ஆசிரியர்கள் முயன்றார்கள். விநோதரஸ மஞ்சரியின் ஆசிரியர் பல பழங்கதைகளைத் திரட்டித்தந்தார். அதேபோல மதனகாமராஜன் கதை ஆசிரியரும், விக்கிரமாதித்தன் கதை ஆசிரியரும் பல பழங்கதைகளுக்குப் புது உருவம் தந்தார்கள். பின்னது இரண்டிலும் ஒரு தனி உருவமும் ஆசிரியருடைய தனித்வமும் இருப்பது தெரிகிறது. பழங்கதைகள்தான் என்றாலும், நடைச் சிறப்பாலும் கதைச் சிறப்பாலும், விக்கிரமாதித்தன் கதைகளுக்குத் தமிழ்க் கதைகளிலே ஒரு பெரிய இலக்கிய ஸ்தானம் உண்டு. அவற்றைத் தொகுத்து எழுதிய இராமநாதபுரம் இப்ராஹிம்சா ராவுத்தர் என்பவர் பிற்காலத் தமிழ்க் கதை வசனத்துக்குத் தன் நடையில் ஒரு வளம் தேடித் தந்தவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் அறுபது வருஷங்களிலும் எத்தனை கதைகள் வழக்கிலிருந்தன! சிறப்பாக இவற்றில் சொல்லக்கூடியவை ஒன்றிரண்டுதான். பண்டித நடேச சாஸ்திரியின் பூர்வகாலத் தக்காணக் கதைகளும், மத்ய காலத் தக்காணக் கதைகளும் தொகுப்புக்கள்தான் என்றாலும் சிறப்பாக இலக்கியத்தில் இடம் பெறவேண்டியவை. அதேபோலத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் சென்னைக் கல்விச் சங்கத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட மெக்கன்ஸி நூல்களும் - அதிலும் சிறப்பாக, கர்ண பரம்பரையாக வந்த கருநாடக தேசத்து ராஜாக்கள் கதைகள் - பாராட்டப்படவேண்டியவை. ஆனால் அவை இலக்கியமாகப் பின்வரும் தலைமுறைகளைப் பாதிக்கவில்லை என்றும் சொல்ல வேண்டும். இலக்கியாசிரியர்களைக்கூட இந்தக் கதைகள் சமீபகாலத்தில்தான் எட்டியுள்ளன.

அ. மாதவையாவும் , வ.வே.ஸு. ஐயரும், சுப்பிரமணிய பாரதியாரும், சிறுகதையை இலக்கிய உருவமாக அறிந்து எழுதினார்கள். சுப்பிரமணிய பாரதியாரின் சிறுகதைகளிலே ஒரு அழகிய உருவம் அநாயாசமாக அமைந்தது. மாதவையாவும், வ.வே.ஸு. ஐயரும் தெரிந்து செய்த சிறுகதைகள் உருவச் சிறப்புப்பெற்றன எனினும், உருவ அமைதியும், இலக்கியச் சிறப்பும் அவ்வளவாகப் பெறவில்லை. பின்னர் 1935 வாக்கில் எழுதத் தொடங்கிய புதுமைப்பித்தன், மெளனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்பிரமண்யன், சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம் முதலியவர்கள் கையிலே சிறுகதை தமிழ் உருவமும் இலக்கிய அந்தஸ்தும் பெற்றது. தி. ஐ. ரங்கநாதன், த. நா. குமாரஸ்வாமி, எஸ். வி. வி., சங்கரராம் முதலியவர்கள் மணிக்கொடி கோஷ்டியைச் சேராத அந்த நாளைய நல்ல சிறுகதாசிரியர்கள். பின்னர் சிறுகதைகளை இலக்கிய அந்தஸ்து பெறச் செய்தவர்கள் என்று தி. ஜானகிராமன், லா. ச. ராமாமிருதம், கு. அழகிரிசாமி முதலியவர்களைச் சொல்லவேண்டும்.

டாக்டர் சாமிநாதையர் தன் நீண்ட காலத்து நினைவுகளைக் கதைகளாக எழுதினார். சிறுகதையாக அவற்றின் உருவம் அமையாவிட்டாலும் அவை தமிழுக்குச் சிறப்பு தரும் பகுதி.

1930-க்கு மேல் பத்திரிகை வளர்ச்சியால், தமிழ் வசனம் பல வகைகளிலும் வளம் பெற்றது. ஓரளவுக்கு இலக்கிய அந்தஸ்தை எட்டாத சிறுகதைகள் நூற்றுக்கணக்கில் தோன்றின. 1945-க்குப் பிறகு, தமிழ்நாட்டில் இச்சிறுகதை உற்பத்தி வேகம் பெருகியது. உருவம், ஆதி அந்தம் நடுவு, பாத்திர விசேஷம் இவற்றினால் சிறுகதைகள் மாதிரி இருந்த இந்த ஆயிரக்கணக்கான கதைகள் நன்றாகவே இருந்தன எனினும் இலக்கிய அந்தஸ்தை எட்டாதவை என்றுதான் சொல்லவேண்டும். சுவாரசியம், கதை என்கிற அம்சங்கள் நிறைந்த இந்தக் கதைகள் ஏராளமாகப் பெருகிய காரணத்தினால், புதுமைப்பித்தனோ, மெளனியோ பிச்சமூர்த்தியோ, நானோ செய்து பார்த்த மாதிரிச் சோதனைகள் செய்கிற மனப்பான்மை சிறுகதையாசிரியர்களிடையே மறைந்துவிட்டது. சிறுகதைகள் என்று இக்காலத்தியக் கதைகளைச் சொல்வதற்குப் பதில், பத்திரிகைக் கதைகள் என்று ஒரு பகுதியாக இவற்றைக் கருதலாம். இந்தக் கதைகளிலே பெரும்பாலானவை தடம் புரளாமல், பழகிய விஷயங்களை, பழக்கமான மாதிரியிலே எடுத்துச் சொல்பவை. சிறப்பாக இந்தப்பகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்று சரோஜா ராமமூர்த்தி, அகிலன், பூவாளூர் சுந்தரராமன் இவர்களைச் சொல்லலாம்.

சிறுகதையின் போக்கு இவ்வாறாக, நெடுங்கதை விஷயம் என்னவாயிற்று என்று பார்க்கலாம். வேதநாயகம் பிள்ளை 1879-ல் தமிழில் முதல் நாவலை எழுதினார் - அதை வசன காவியம் என்று சொல்லிக் கனமாகச் செய்ய முற்பட்டார். ராஜமையரும், மாதவையாவும் தங்கள் நாவல்களில் விஷய கனத்துடன், மேலை நாட்டு உத்திகளையும், குணச்சித்திர விசித்திர வர்ணனைகளையும் சேர்த்து இலக்கியத்தை வளம் செய்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் நாலைந்து வருஷங்களிலே நாவல் எழுதிய பண்டித நடேச சாஸ்திரியார் அதற்குள்ளாகவே நூற்றுக்கணக்கான நாவல்கள் தோன்றிவிட்டதாகக் குறை கூறுகிறார். இந்த நூற்றாண்டின் முதல் முப்பது வருஷங்களிலே பலவிதமான நாவல்கள் தோன்றின. நாவல் படிக்கக்கூடாது என்கிற அபிப்பிராயம் வலுவடையச் செய்யும் வகையிலே, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆர். ரங்கராஜூ, வடுவூர் துரைராமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள் முதலியவர்கள் நிறைய எழுதினார்கள். இந்த வரிசையில் சேர்ந்தவர்தான் கல்கியும்.

ஆனால் மணிக்கொடி காலத்தில் சிறுகதை இலக்கிய அந்தஸ்தை எட்டிய மாதிரி, மணிக்கொடி முடிந்த காலத்தில், சங்கரராமின் ‘மண்ணாசை’யுடன் தமிழ் நாவல் மீண்டும் ராஜம் ஐயர், மாதவையா இவர்கள் எழுதிய நாவல்களைப்போல இலக்கிய அந்தஸ்தும் கனமும் பெற்றது. எஸ். வி. வி.யின் நாவல்கள் ஒரு பிரமாதமான புரட்சியையே செய்தன. ஷண்முகசுந்தரத்தின் மூன்று கோவை ஜில்லா கிராம நாவல்களும் அற்புதமான இலக்கியமாக அமைந்தன. என்னுடைய நாவல்களில் 'பசி', 'பொய்த்தேவு', 'சர்மாவின் உயில்', 'ஏழுபேர்', 'ஒருநாள்' முதலியன வெளிவந்தன. தொடர்ந்து வந்த சிதம்பர சுப்பிரமணியத்தின் 'இதய நாதம்' இலக்கியமாகத் திகழ்ந்தது. சங்கரராம் பின்னர் பல நாவல்கள் எழுதினார் என்றாலும், அவை மண்ணாசையின் தரத்தை எட்டியும் தொடவில்லை. கே. எஸ். வேங்கடரமணி ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் தமிழில் மொழிபெயர்த்த முருகனும், கந்தனும் தமிழ் நாவலுக்கு வளம் தந்தன. ஏற்கனவே ஒரு நாவல் எழுதி அவ்வளவாக வெற்றி பெறாத தி. ஜானகிராமன், தன்னுடைய 'மோக முள்'ளில் அபாரமான இலக்கிய வெற்றி பெற்றார்.

பத்திரிகைக் கதைகள் தோன்றியது போலவே, பத்திரிகை நாவல்களும் ஏராளமாகத் தோன்றின. ஒவ்வொரு பத்திரிகையும் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று நான்கு என்று நாவல்கள் பிரசுரித்தன. இதுவரை எழுதப்பட்டுள்ள பத்திரிகை நாவல்களிலே இலக்கிய அந்தஸ்தை எட்டியவை என்று எஸ். வி. வி. யின் நாவல்கள் மட்டுமே பாராட்டுக்குரியன. கல்கி, துமிலன், தேவன், அகிலன், ஆர்.வி., லஷ்மி, எஸ். ஏ. பி. அண்ணாமலை, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்களின் நாவல்கள் பத்திரிகை அந்தஸ்தை மீறவில்லை. குடும்ப நாவல்களாக பி. எம். கண்ணனும், அநுத்தமாகவும் எழுதிய நாவல்களில் சிலவேனும், பொருள் கனத்தாலும், குணச்சித்திர பாத்திர வகுப்புச் சிறப்பாலும், இலக்கிய அந்தஸ்தை எட்ட முயலுகின்றன என்று சொல்ல வேண்டும்.

இன்று கணக்கெடுத்தால் ஆயிரக்கணக்கான நாவல்கள் இருக்கின்றன தமிழிலே என்றுதான் சொல்லவேண்டும். நாவல் வளத்தைச் சமைக்க இத்தனையும் அவசியம்தான் - இன்னும் வேண்டும் என்பதும் உண்மை. பொதுவாகச் சொல்லப்போனால் குறள் பண்பை வைத்து எழுதுகிற மு. வரதராஜனார், கம்யூனிஸ சிந்தனையை மையமாக வைத்து எழுதுகிற ரகுநாதன், விந்தன், ஜெயகாந்தன் முதலானோர், குடும்ப விஷயங்களை வைத்துப் புரட்சி நோக்கத்துடன் எழுதுகிற ஆர். வி., அகிலன் முதலானோர், குடும்ப விஷயங்களை வைத்துப் புரட்சி நோக்கமில்லாது எழுதுகிற அநுத்தமா, பி. எம். கண்ணன் முதலானோர் தமிழில் நாவல் கலையில் ஒரு சிறு அளவில் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்றே சொல்லவேண்டும். இத்தனையும் சேர்ந்து தமிழ் நாவல் இலக்கிய வளத்தை நமக்குத் தருகின்றன.

சிறுகதை, நெடுங்கதை, இது போனால் - வசனத்தில் இன்னும் பல உருவங்கள் இருக்கின்றன. கட்டுரைகள், விமரிசனம், பிரயாணக் கட்டுரை, ஜீவியம், சுய சரிதம் முதலியன. இவற்றிலெல்லாம் ஓரளவுக்கு ஆரம்ப முயற்சிகள்தான் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லவேண்டும். பத்திரிகைத் தமிழ். அன்றாடத் தேவைகளைத் திருப்தி செய்யும் தமிழ் வளம் ஏராளமாக இருக்கிறது; ஆனால் இருப்பது போதாது. அறிவுத் துறைகள் பலவற்றிலும்கூட இன்னும் வளம் போதாது என்றுதான் சொல்லவேண்டும். பழசைப் பற்றிய இலக்கியம் ஏராளமாக இருக்கிறது - பக்கக் கணக்கில் விமரிசனமோ திறனாய்வோ தக்கதாக தரமுள்ளதாக இல்லை. உள்ளதும் இலக்கிய அந்தஸ்து எட்டுவதாக இல்லை. இந்த உருவங்களையெல்லாம் விரும்பிப் போற்றி வளர்த்துத் தமிழ் வசன இலக்கியத்தை, வளமுள்ளதாக நாம் செய்யவேண்டும்.

5


இலக்கியத்தின் சிறப்பான உருவங்களிலே கவிதை, வசனம் போலவே, நாடகமும் ஒன்று - முக்கியமானது, சிறப்பானது. நாடக இலக்கியம் தமிழில் சிறப்பாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயல், இசை, நாடகம் என்றெல்லாம் முப்பிரிவுகளைச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில் லாபமில்லை. இலக்கியப் பரப்பிலே ஒரு கலை உருவமாக நாம் சொல்கிற நாடகம் பழந்தமிழில் இல்லை.

சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் நாடகமாக்கக்கூடிய பகுதிகள் உண்டு என்பதனால், அவை நாடக இலக்கியமாகிவிடாது. சில கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிற ராஜராஜ நாடகம் முதலியனவும் நாடக இலக்கியமாக எப்படியிருந்திருக்குமோ, இப்போது சொல்வதற்கில்லை .

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில், தெரு நாடகங்களும், பள்ளுகளும், குறவஞ்சிகளும் தோன்றின. இலக்கியமாக இவற்றிற்குத் தனி அந்தஸ்து உண்டு. முக்கூடற் பள்ளும், திருக்குற்றாலக் குறவஞ்சியும் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள். ஓரளவுக்கு நாடகமாக உருப்பெற்ற அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரமும் இவற்றுடன் சேர்க்கப்படவேண்டியவை.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வசன (ஆனால் சங்கீத) நாடகங்கள் நூற்றுக்கணக்கானவை தோன்றின. புராணக் கதைகள், நவீன முறைகளைக் கிண்டல் செய்யும் கதைகள் எல்லாம் நாடகங்களாக்கப்பட்டன. ஆனால் அவை இலக்கிய அந்தஸ்தை எட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நல்லதங்காள், ருக்மாங்கதா. டம்பாச்சாரி, இந்திர விலாசம் முதலிய நாடகங்கள் இலக்கிய அந்தஸ்தை எட்டாவிட்டாலும்கூட, நாடக மேடையிலும், மக்கள் மனத்திலும் நாடகத்துக்குத் தேவையான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தன.

ப. சம்பந்த முதலியார் உலகத்து நாடகங்கள் பலவற்றையும் தேடித் தமிழில் அளித்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவும் வந்தன. ஒன்றிரண்டு இப்ஸன் நாடகங்களும் தோன்றின. நாடக மேடையும் அவ்வளவாகச் சீர்திருந்தவில்லை; நாடகங்களும் இலக்கிய அந்தஸ்துப் பெறவில்லை.

பி. எஸ். ராமையாவின் சமீப காலத்திய முயற்சிகள் (மல்லியம் மங்களம், 'பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்', தேரோட்டி மகன் முதலியனவும்), தி. ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலமும்’ மேடையிலே வெற்றி கண்டன. என் 'நல்லவர்' ஒரு இலக்கிய முயற்சி. அதிலே எந்த அளவு நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை.

ந. சிதம்பர சுப்பிரமணியத்தின் ‘ஊர்வசி’. ஆர். ஜகந்நாதனின் 'சுயம்வரம்' முதலியன சிறு நாடகங்கள் இலக்கிய அந்தஸ்தை எட்டியவை.


இலக்கிய அந்தஸ்தை நாடகங்கள் எட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள ரேடியோ நாடகம் என்கிற ஒரு அவஸ்தையும் சமீபகாலத்தில் சேர்ந்துகொண்டது. ரேடியோ நாடகம் இலக்கிய உருவமா என்கிற பிரச்னை ஒருபுறமிருக்க, குப்பை கூளங்களை எல்லாம் நாடகம் என்கிற பெயரில் நமக்குத் தருவதற்கு அகில பாரத சர்க்கார் தங்கள் ரேடியோ இலாகா மூலம் முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். ரேடியோவுக்கு நாடகம் எழுதியவன், நானும் இலக்கியாசிரியன் என்று பத்திரிகை எழுத்தாளனைப் போலக் கூத்தடிக்க முயலுகிறான். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் இது ஒரு அம்சம்.

6


இலக்கியத்தில் எத்தனையோ உருவங்களுக்கு இடம் உண்டு. வசனம், கவிதை, நாடகம் என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொள்கிற தற்காலிகமான பாகுபாடுகள்தான். கவிதை வசனமாகவும், வசனம் கவிதையாகவும், நாடகம் சில சமயம் கவிதையாகவும், வசனமாகவும் இருக்கலாம்.

தமிழில் கவிதை உயர்வாக, இலக்கியமாக இருந்த காலம் ஒன்றுண்டு. அது காரைக்காலம்மையார், ஆண்டாள், இளங்கோ, கம்பன் இவர்களுடைய காலம். வசனம் தோன்றிய பின் சிறுகதை, நாவல் இரண்டு பகுதிகளிலும் இன்று சிறப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ளலாம். மற்றும் பல இலக்கிய உருவங்களில் எத்தனையோ செய்துபார்க்கவேண்டிய அவசியம் நமக்கு உண்டு. அவற்றையெல்லாம் செய்துபார்க்கவேண்டியதற்கான சூழ்நிலைதான் இன்று நமக்கில்லை என்று சொல்லவேண்டியதாக இருக்ககிறது.

தமிழ்க் கவிதை என்றால் அது தமிழருக்கே சிறப்பான ஒரு உருவம். அதேபோலத் தமிழ்ச் சிறுகதை என்றால் அது தமிழருக்கே சிறப்பான ஒரு இலக்கிய உருவம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறுகதை இன்று வளர்ந்துவிட்டது. தமிழ் நாவல் அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லை - ஆனால் வளர்ந்துவிடும் என்று சொல்வதற்கான அறிகுறிகள் உண்டு. இலக்கிய விமரிசனத்திலே தமிழ் நோக்கு என்று தனி நோக்குக்கூட இன்னும் உண்டாகவில்லை. மற்றும் பல இலக்கியத் துறைகளில், உருவங்களில், தமிழ் இலக்கிய அந்தஸ்தையே எட்டவில்லை.

பொதுவாகத் தமிழ் தமிழ் என்று கூறிக்கொள்பவர்கள் எல்லோரும், தமிழ் வளம் பெற்று வருவதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். தமிழ் வளம் எப்படியானாலும், இன்று பண்டிதர்களின் ஆர்ப்பாட்டத்தினாலும், பத்திரிகைக்காரர்களின் ஆர்ப்பாட்டத்தினாலும் தமிழ் இலக்கியம் வளம் பெறாமல் தேங்கி நிற்கிறது. பண்டிதர்கள் கடந்த காலத்தை விட்டுக் கண்ணைத் திருப்பமாட்டார்கள். பத்திரிகைக்காரர்கள் நிகழ்காலத்தை விட்டுக் கண்ணையோ கருத்தையோ திருப்பமாட்டார்கள். இலக்கிய வளம் எதிர் காலத்தை நோக்கி, அதை எட்டவழி வகுப்பதாகும். இலக்கிய வளம் மூன்று காலங்களையும் இணைக்கிறது.

7


இலக்கிய வளம் சாத்தியமாவதே சோதனை என்கிற ஒரு தீவிரமான காரியத்தினால்தான் என்று சொல்லவேண்டும்.

இலக்கிய வளர்ச்சியின் உயிர் நாடி என்பதே சோதனை தான்.

சோதனை என்பதை இலக்கியத்தில் உருவங்கள் என்கிற பகுதியில் கவனிப்பானேன் என்கிற சந்தேகம் பலருக்கு எழக்கூடும். அதற்கு ஆதாரமான காரணமுண்டு.

இலக்கியச் சோதனைகள் எல்லாமே இலக்கிய உருவங்களை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொண்டு எழுபவைதான். மரபை ஆதாரமாகவும் எதிர்ப்பாகவும் கொண்டு தோன்றுபவைதான்.

இலக்கிய மரபு இல்லாவிட்டால் சோதனை சாத்தியமில்லை - கடவுள் இல்லாவிட்டால், கடவுளை மறுக்கும் நாஸ்திகன் சாத்தியமில்லை என்கிற சிந்தனை அடிப்படையில். மரபை ஒட்டியும், மரபை எதிர்த்தும் புரட்சி செய்துச் சோதனைகள் பல நடத்தி வெற்றி கண்டவர் சுப்பிரமணிய பாரதியார். இந்தச் சோதனைதான் நமது புது இலக்கிய வளர்ச்சியின் உயிர்.

புதுமைப்பித்தனும், மெளனியும், கு.ப.ரா.வும் சிறுகதை இலக்கியத்தில் எத்தனையோ சோதனைகள் நடத்திப் பார்த்தார்கள்.

பிச்சமூர்த்தியும், அழகிரிசாமியும், செல்லப்பாவும், லா.ச.ரா.வும், நானும் சிறுகதையில் இன்னும் சில சோதனைகளை நடத்திப் பார்க்கிறோம்.

நாவல் என்கிற இலக்கிய உருவத்தில் நான் பலவிதமான சோதனைகள் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழில் நாவலைப் பற்றிய வரையில் சோதனைகள் குறைவாக இருக்கின்றன என்பது இன்று வெளிப்படை. ஒருவர் போன தடத்திலேயே ஒருவர் போய் நாவல்கள் எழுத முனைகிறார்கள். உதாரணமாகக் கல்கி போன தடத்திலேயே போய், சாண்டில்யனும், ஆர்.வி.யும், நா. பார்த்தசாரதியும் சரித்திர நாவல்கள் எழுதுகிறார்கள். லக்ஷ்மி போன தடத்திலேயே போய் எஸ். ஏ. பி. அண்ணாமலையும் வேறு பலரும் எழுதுகிறார்கள். பிறர் வழி போகாத சிலரும் கூடத் தங்கள் முதல் முயற்சியையே திரும்பத் திரும்ப் விரிவாக்கிச் செய்துபார்க்கிறார்கள். பி. எம். கண்ணனின் ‘பெண் தெய்வத்திலே’ அவருடைய மற்ற ஒன்பது நாவல்களும் அடங்கியுள்ளன என்று சொல்லலாம். அநுத்தமாவின் ‘ஒரே ஒரு வார்த்தை’யில் அவர் பின்னர் எழுதியுள்ள நாலு நாவல்களையாவது காணமுடியும். அகிலனின் ‘பாவை விளக்கி’ல் 'சிநேகிதி'யில் வந்த பெண்களில் இருவரையும், 'நெஞ்சின் அலைகளி’ல் வந்தவர் நால்வரையும், 'வாழ்வு எங்கே'யில் வந்தவர் பலரையும், வளராத ஒரு எழுத்தாளரையும் காணமுடியும் - அந்த எழுத்தாளர் ஒரு நித்திய யெளவன புருஷர்.

நாவல் இலக்கிய உருவம் வளம் பெறுவதற்குப் பல தைரியமான சோதனைகள் நடைபெற வேண்டும். வெறும் கதையை, சுவையுள்ள சம்பவக் கோர்வையாக மட்டும் சொல்லிவிட்டால் போதாது. பொருள், நடை, குணசித்திரம் சம்பவத்தை நோக்கும் விதம், கட்டுக்கோப்பு என்பதிலெல்லாம் புதுமை, புதுப்புது உத்திகள் கையாண்டு முயற்சி செய்துபார்க்கவேண்டும். ஒருதரம் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதித் திருப்திப்பட்டுக்கொண்டிருப்பதில் சாரமில்லை.

இதேபோல நாடக இலக்கியம் முதலியவற்றிலும் முயற்சிகள், சோதனைகள் ஏராளமாக வேண்டும். சிறுகதையில் சோதனைகள் நடந்திருக்கின்றன என்பதால் இனி வேண்டாம் என்று அர்த்தமில்லை; ஏராளமாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால்தான் தமிழ்ச் சிறுகதையேனும் வளம் பெறும்.

வசன கவிதை வேண்டாம் என்று ஒரு சாரார் பேசுகிறார்கள். மரபிலே நம்பிக்கையற்றவர்களுக்கும்கூடத் தமிழ்க் கவிதை பற்றிய மட்டில் மரபு வந்துவிடுகிறது. அதற்கு அவசியமில்லை. வசன கவிதை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.

எந்த இலக்கியாசிரியனும் தனக்குகந்த ஒரு இலக்கிய உருவத்தைக் கையாளுகிறான். விஷயத்தைத் தீர்மானித்ததும் அதற்கேற்ற இலக்கிய உருவத்தையும் தீர்மானித்துக்கொண்டு அதைச் சமைக்கிறான். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறான் என்பதைப் பொறுத்தது அது இலக்கியமாக அமைவதும் அமையாததும். எந்த இலக்கியாசிரியனுக்கும் எந்த இலக்கியச் சோதனையையும் செய்து பார்க்கவும் உரிமையுண்டு.

இலக்கிய சோதனை செய்ய கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு உரிமை மறுத்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மனம் மாறியதை டாக்டர் சாமிநாதையர் சுயசரித்திரத்தில் எழுதியிருக்கிறார்.

சமீபகாலத்தில் ‘சாப விமோசனம்’ எழுதிய புதுமைப்பித்தனுக்கு அந்த உரிமையை மறுத்துச் சொன்ன ராஜாஜியை நாம் சிறுகதாசிரியராக மறந்துவிடுவோம் - (மறந்துவிட்டோம்). புதுமைப்பித்தனை தமிழகம் மறக்காது - மறக்காது.

சுப்பிரமணிய பாரதியாரைப் பண்டிதர்கள் மறுத்துப் பிறகு ஏற்று இப்போது தங்கள் பிழைப்பாகவும் கொள்வது வெளிப்படைதானே!

இலக்கிய மரபை எதிர்த்து இலக்கியமாக்கும் காரியம் ஒவ்வொரு இலக்கியாசிரியன் கையிலும் இப்படித்தான் நடக்கிறது என்பதற்காக உதாரணங்கள் சொன்னேன் - அவ்வளவுதான். மறுக்கப்பட்டதுதான் இலக்கியமாக வேண்டும் என்பது அவசியமில்லை, மறுக்கப்படாததும் இலக்கியமாகலாம்.

மரபை ஒட்டி, அதே சமயம் மரபை எதிர்த்துப் புரட்சி செய்து இலக்கியமாகியவைதான் எல்லா இலக்கிய உருவங்களுமே. இலக்கிய உருவ ஆராய்ச்சியில், இலக்கியத்தின் ஆன்மாவை, உயிரை மறந்துவிடுவது வழக்கம். இலக்கிய உருவம் முக்கியமன்று. கம்பன் இன்றிருந்தால் நாவல் எழுதுவான் என்பதும், நான் பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் காவியமேதான் செய்திருப்பேன் என்பதும் அந்த அளவில் உண்மை.

இலக்கிய உருவம் முக்கியமல்ல. அழகிய ஓவியத்துக்கு நாமாகப் போட்டுக்கொள்ளுகிற மரச் சட்டம்தான் அது.

இலக்கிய அந்தஸ்து முக்கியம். இலக்கிய மரபு முக்கியம். அம்மரபை எதிர்த்த சோதனைப் புரட்சி முக்கியம். இலக்கிய அமைதி முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியத் தனித்வம் (அந்த ஆசிரியனின் personality) முக்கியம்.

இலக்கிய உருவங்களைப்பற்றிப் பேசும்போது இதை மனத்தில் வைத்துக்கொண்டு பேசவேண்டும். கவிதை என்பது சிறுகதைக்கு மட்டமானதுமல்ல, உயர்ந்ததுமல்ல. நாவல் என்பது காவியத்துக்குச் சிறிதும் மட்டமானதல்ல. நாடகம், வசனமானாலும் கவிதையானாலும், காவியம், கவிதை, நாவல் எல்லாவற்றிற்கும் சரிசமமானதுதான்; ஒன்றையொன்று ஒட்டித் தோன்றுவதுதான். முழுவதும் தனிப்பட்டது அல்ல.

இலக்கிய உருவ விமரிசனம் சில சமயம் ஒரு குருட்டுப் பாதையாகிவிடும். அதை அதிகமாகச் செய்து காண விரும்பவேண்டிய அவசியமேயில்லை.

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு