Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 12


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1934 (வயது 65)

வட பீகாரில் ஜனவரி 15-ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்குப் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டுக் க டுமையான சேதங்களை உண்டுபண்ணிவிட்டது. மூன்று நிமிஷ நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள். 15,000 சதுர மைல்களுக்கு மேற்பட்ட பூமி பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுப் பாழாயிற்று.

ராஜேந்திரப் பிரசாத்தின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு பீகாருக்குச் சென்ற காந்திஜி பல இடங்களுக்கும் போய்க் கூட்டங்களில் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இந்த நாசம் உங்களுக்கு என்ன கற்பித்திருக்கிறது? சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் இடையிலும், ஹிந்துவுக்கும் முஸ்லிமுக்கும் இடையிலும், தீண்டப்படுவோருக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையிலும் வேற்றுமை பாராட்டிக்கொண் டிருக்க இது நேரமல்ல. நிவாரண நிதியிலிருந்து நீங்கள் பணம் பெற்றுக்கொண்டால், அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வழி பாருங்கள்.”

பர்தா என்ற முகத்திரை அணிந்த பீகார்ப் பெண்களை நோக்கி, “இந்த நாசம் உங்களுக்கு எதையும் கற்பிக்கவில்லையா? ஏன் இந்த மடமை (பர்தா)?” என்று கேட்டார். மாதர்களிடமிருந்து, நகைளை வசூலித்தார். பேசிய இடங்களிலெல்லாம், “வேலை செய்யுங்கள்! வேலை செய்யுங்கள்! பிச்சை எடுக்காதீர்கள்! ஆனால், வேலை செய்யுங்கள். வேலை கேளுங்கள். கிடைத்த வேலையை விசுவாசமாகச் செய்யுங்கள்” என்று கூறினார். கிராமங்கள் தோறும் நடந்து சென்றார். பீகாரில் ஒரு மாதம் சுற்றுப் பிரயாணம் செய்தபின் திரும்பவும் ஹரிஜனப் பணியை ஆரம்பித்தார்.

ஏப்ரல் 7-ஆம் தேதி காந்திஜி சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைத்தார். அநேக அரசியல் கைதிகள் விடுதலை ஆயினர். சத்தியாக்கிரகத்தின் பூரணமான நோக்கம் என்ன என்பது இன்னும் பொதுஜனங்களை எட்டவில்லை என்று கூறினார்.

எதிர்காலத்தில் சட்ட சபைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் காந்திஜியின் ஆசீர்வாதத்துடன் போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் அன்ஸாரி ஓர் அறிக்கையில் தெளிவாகக் கூறினார். மே 18, 19 தேதிகளில் பாட்னாவில் அ. இ. கா. க. கூட்டம் நடைபெற்றது. சட்ட சபைகளுக்குள் இருந்து போராடுவதற்காக, டாக்டர் அன்ஸாரியின் தலைமையில் இருந்த சுயராஜ்யக் கட்சி, காங்கிரஸின் ஓர் உறுப்பாக ஆயிற்று.

மே 17-ஆம் தேதி பாட்னாவில் ஆச்சாரிய நரேந்திர தேவ் தலைமையில் காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சியின் முதல் மகாநாடு நடைபெற்றது.

ஹரிஜனப் பிரசார இயக்கம் எப்பொழுதுமே ஒரே மாதிரி சுமுகமாக நடந்துவிடவில்லை. ஜனவரி 25-ஆம் தேதியன்று புனாவில், அடையாளம் கண்டுபிடிக்கப்படாத ஒருவன் காந்திஜி மீது குண்டு எறிய முயன்றான். காந்திஜியின் மோட்டார் என்று நினைத்து வேறொரு மோட்டாரின் மீது குண்டை எறிந்துவிடவே அதன் பலனாக 7-பேர் காயம் அடைந்தனர். காந்திஜி வந்த மோட்டார் அப்புறம் வந்தது.

சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சீர்திருத்தக்காரர் ஒருவர், கோபத்தினால் ஹரிஜன இயக்க விரோதி ஒருவரைத் தடியால் அடித்துவிட்டார். கருத்து வேற்றுமையுள்ளவர்கள் இவ்வாறு பரஸ்பரம் சகிப்புத்தன்மையில்லாமல் நடந்துகொள்ளுவதற்குப் பிராயச்சித்தமாக காந்திஜி ஆகஸ்டு மாதத்தில் ஏழு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

அக்டோபர் 24- இல் பாபு ராஜேந்திரப் பிரசாத் தலைமையில் பம்பாய்க் காங்கிரஸ் நடைபெற்றது.

அக்டோபர் 26-இல் அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கம் அமைக்கப்பட்டது. கொஞ்சங்கூட அரசியல் சம்பந்தமில்லாமல், காந்திஜியின் நேர்ப் பார்வையின் கீழ் இது நடைபெற வேண்டும் என்பதற்காக இந்தச் சங்கத்தின் தலைமை நிலையம் வார்தாவுக்கு அருகில் உள்ள மகன்வாடியில் நிறுவப்பட்டது.

பம்பாய்க் காங்கிரஸில் நடைபெற்ற மிக முக்கியமான சம்பவம், 28-ஆம் தேதியன்று காந்திஜி காங்கிரஸிலிருந்து விலகியதே. உண்மைக்கும் அஹிம்சைக்கும் காங்கிரஸ் தயாராக இல்லாத நிலையைக் கண்ட காந்திஜி, நாலணா அங்கத்தினர் பதவியையுங்கூட விட்டுவிட்டார். ஆனாலும், காந்திஜியின் தலைமையில் தனக்குள்ள நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்து, காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிராமக் கைத்தொழில்கள், ஹரிஜன முன்னேற்றம், ஆதாரக் கல்வி ஆகிய விஷயங்களில் காந்திஜி தீவிரமாக ஈடுபட்டார். காரியக் கமிட்டி அங்கத்தினர்களை இனிமேல், அ. இ. கா. க. தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாகத் தலைவரே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் விதிகளில் திருத்தம் செய்யப்பெற்றது.

பம்பாய்க் காங்கிரஸுக்குப் பிறகு, நாடெங்கும் மத்திய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் பெரும் வெற்றியை அடைந்தது.

 1935 (வயது 66)

பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 4-ஆம் தேதி வரை வார்தாவில் நடைபெற்ற அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கக் கூட்டத்துக்குக் காந்திஜி சென்றார்.

பிப்ரவரி 15-ஆம் தேதி வெளிவந்த "ஹரிஜன்" பத்திரிகையின் முதல் பக்கம் முழுவதையும், "பச்சைக் கீரைகளும் அவற்றின் உணவுச் சத்தும்'' என்ற கட்டுரைக்கு ஒதுக்கியிருந்தார். "நான் சுமார் ஐந்து மாத காலமாகச் சமைக்காத உணவுகளையே சாப்பிட்டு வருகிறேன். கிராமவாசிகள் தங்கள் சாப்பாட்டுடன் பச்சைக் கீரைகளைச் சேர்த்துக்கொண்டால், இப்போது அவர்களைக் கஷ்டப்படுத்தும் பல வியாதிகளை அவர்கள் ஒழித்துவிட முடியும்'' என்று காந்திஜி எழுதினார். அரிசியைப்பற்றித் தலையங்கம் எழுதி, கைக்குத்தல் அரிசியைச் சாப்பிட வேண்டுமென்று கூறினார். பிப்ரவரி 22-ஆம் தேதி வெளிவந்த ஹரிஜனின் முதல் பக்கத்தில் "பசுவின் பாலும், எருமைப் பாலும்'' என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது.

மார்ச்சு 2-ஆவது வாரத்தில், வார்தாவுக்கு அருகிலுள்ள கிராமங்களில் காந்திஜியின் நெருங்கிய சகபாடிகள் சுகாதார வேலையைச் செய்யத் தொடங்கினார்கள். பாக்கியாகக் கிடந்த வேலைகளை முடிப்பதற்காக மார்ச்சு 23-ஆம் தேதியன்று காந்திஜி நான்கு வார மெளன விரதத்தை ஆரம்பித்தார்.

ஏப்ரல் மாதத்தில் இந்தூரில் நடைபெற்ற ஹிந்தி இலக்கிய மகாநாட்டுக்குக் காந்தி ஜி தலைமை தாங்கினார். ''இது (ஹிந்தி) நம் விவசாயிகளின் மொழி; நம் தொழிலாளிகளின் மொழி. அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழி. ஆகவே, அது பொதுப் பாஷையாகக் கூடிய மொழியாகும். மொழித்துறையில் இதுவே உண்மை ஜனநாயகமாகும்'' என்று காந்திஜி கூறினார். அ. இ. கி. கை. தொ. சங்கத்தின் முதலாவது கண்காட்சியைக் காந்திஜி திறந்து வைத்து, ''நம்மை நாகரிகம் அடைந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ளும் நாமே தான் நம் கிராமத் தொழில்கள் பாழானதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளிகள்'' என்று சொன்னார்.

ஆகஸ்டு 4-ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம், மன்னரின் சம்மதத்தைப் பெற்றது. அதைக் காங்கிரஸ் காரியக் கமிட்டி அடியோடு நிராகரித்துவிட்டது.

மகன்வாடியில் அக்டோபர் 11, 12, 13-ஆம் தேதிகளில் அகில இந்திய நூற்போர் சங்கக் கவுன்சில் கூட்டம் காந்திஜியின் தலைமையில் நடந்தது. நூற்பவர்களின் கூலிகள் கூட்டப்பட வேண்டுமென்றும், குறைந்தபட்ச வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர் 22-ஆம் தேதி வார்தாவுக்கு அருகிலுள்ள சேவா கிராமத்தில் (அப்பொழுது அதற்கு ஷேகான் என்று பெயர்) ஒரு சிறு குடிசைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. அக்டோபர் 16-இலேயே மீராபென் அதில் போய் வசிக்கத் தொடங்கினார்.


டிசம்பர் 28-இல் காங்கிரஸின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. பட்டாபி சீதாராமையா எழுதிய ''இந்திய தேசீயக் காங்கிரஸின் வரலாறு'' என்ற புத்தகம் அ. இ. கா. க. சார்பில் வெளியிடப்பட்டது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...