Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 8


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1928 (வயது 59)

சர் ஜான் சைமனின் தலைமையில் பம்பாயில் ஒரு கமிஷன் வந்து இறங்கியதும் அதைப் பகிஷ்கரிப்பதில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. அந்தத் தினத்தில் இந்தியா முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எங்கும் கறுப்புக் கொடிகள் காட்டி, ''சைமனே, திரும்பிப்போ!" என்று கோஷித்தனர். இந்தியர்கள் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் சைமன் கமிஷனின் விசாரணை நடைபெறவே செய்யும் என்று பிப்ரவரி 22-ஆம் தேதி லார்டு இர்வின் அறிவித்தார்.

பகிஷ்காரம் வெற்றிகரமாகவே நடந்தது. சர்க்கார் பலாத்காரத்தையும், பயங்கரமான அடக்குமுறையையும் பிரயோகித்தது. 64 வயதான லாலா லஜபதிராய், ஜவாஹர்லால் நேரு உட்பட ஏராளமானவர்கள் லத்திக்கம்பு அடி வாங்கினார்கள். அடிபட்டதன் காரணமாக நவம்பர் 17-இல் லஜபதிராய் காலமானார்.

பிப்ரவரி 12-இல் பர்டோலி சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. காந்திஜியின் ஆசீர்வாதத்துடன் வல்லபாய் பட்டேல் தலைமை தாங்கிச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார். வரிகொடா இயக்கத்தை நசுக்கப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சகல சக்திகளும் பிரயோகிக்கப்படும் என்று பம்பாய் சர்க்கார் அறிவித்தது. ஆனால், சீக்கிரத்தில் சமரசம் காணப்பெற்றது.

நேரு கமிட்டி அறிக்கையைப் பரிசீலனை செய்ய ஆகஸ்டு 28-இலிருந்து 30 வரை லட்சுமணபுரியில் சர்வ கட்சி மகாநாடு நடைபெற்றது.

டிசம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸின் வருடாந்தரக் கூட்டம் நடைபெற்றது. தலைமை தாங்கிய மோதிலால் நேரு, குடியேற்ற நாட்டு அந்தஸ்து வேண்டுமென்று கோரினார். 1929 முடிவுக்குள் குடியேற்ற நாட்டு அந்தஸ்துக் கொடுக்கப்படாவிட்டால், பூரண சுதந்திரமே வேண்டுமென்று கோரி, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவோடு தீர்மானத்தைச் சமர்ப்பித்தார். இதைக் காந்திஜி பிரேரேபித்தார். காங்கிரஸ் மைதானத்தில் தேசியக்கொடியின் கீழ் 50,000 ஊழியர்கள் அணிவகுப்பு நடத்தினர். சுதந்திரம் கோரும் தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றிக் கொடி வணக்கம் செய்தார்கள்.

. . கா. . காரியாலயத்தின் கிளையாகத் தொழிலாளர் ஆராய்ச்சி இலாகா திறக்கப்பட்டது.

1929 (வயது 60)

அழைப்பின் பேரில் 1929-இல் காந்திஜி ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்வதாக இருந்தது. ஆனால் பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் பின்வருமாறு கூறினார்:

''போகவேண்டுமென்று என் அந்தராத்மா கூறவில்லை. மேலும், காங்கிரஸின் முன் ஆக்ககரமான ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்து, அதற்கு அனைவருடைய ஆதரவையும் பெற்றுக்கொண்டபின், நான் இப்போது ஐரோப்பாவுக்குப் போனால் தீர்மானத்தைக் கைவிட்டு விட்ட குற்றத்துக்கு உள்ளாவேன் என்று தோன்றுகிறது. …... எல்லாவற்றையும்விட, அடுத்த வருடப் போராட்டத்துக்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். போராட்டம் எந்த உருவத்தை மேற்கொண்டாலும் சரி.''

மார்ச்சு 20-ஆம் தேதி சர்க்கார் திடீரென்று தொழிலாளர் ஸ்தாபனத்தைத் தாக்கியது. பிரபலமான தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீரத் விசாரணை ஆரம்பமாயிற்று. இது நாலரை வருடங்கள் நடைபெற்றது.

காந்திஜி பர்மாவுக்குச் சென்றார். ரங்கூன் நகர சபை அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தது. பர்மாவுக்குப் புறப்படுவதற்கு முன், அந்நியத் துணி தகனம் சம்பந்தமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அங்கிருந்து திரும்பி வந்தபின் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சைமன் கமிஷனின் வேலைகள் ஏப்ரலில் முடிவடைந்தன. மே மாதத்தில் இங்கிலாந்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் கன்ஸர்வேடிவ் கட்சி தோல்வியுற்றது. ராம்ஸே மெக்டானல்டைப் பிரதமராகக் கொண்ட தொழிற்கட்சி மந்திரி சபை பதவி ஏற்றது.

சுபாஷ் சந்திர போஸும், மற்றப் பிரபல காங்கிரஸ் தலைவர்களும் விசாரணையில் இருந்தார்கள். சிறைச்சாலைகளில் இந்தியர்களைப் பாரபட்சமாக நடத்துவதை ஆட்சேபித்து ஆகஸ்டில் உண்ணாவிரதம் தொடங்கிய ஜதீந்திர நாத் தாஸ் 61-ஆவது நாள், செப்டம்பர் 13-ஆம் தேதியன்று காலமானார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் பொறுப்பாட்சி வழங்குவதே இந்தியாவில் பிரிட்டிஷ் கொள்கை என்று அக்டோபர் 31-ஆம் தேதியன்று இர்வின் பிரகடனம் செய்தார். லண்டனில் வட்ட மேஜை மகாநாடு கூட்டும் உத்தேசத்தையும் வெளியிட்டார். இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து வழங்குவது அக்கிரமமான காரியம் என்று சர்ச்சில் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

டிசம்பரில் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் லாகூர் காங்கிரஸ் நடைபெற்றது. டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் காந்திஜியினுடைய யோசனையின் பேரில், குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்ற அபிப்பிராயம் காலாவதியாகிவிட்டதென்றும், காங்கிரஸ் கோட்பாட்டில் சுயராஜ்யம் என்பது பூரண சுதந்திரம் என்று பொருள்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...