Skip to main content

அடிமனம் | லிபிடோ | பெ. தூரன்


பாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. அதற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கலவி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கியிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்துவிடுவதல்ல.
இவ்வகையான பரத்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சியிருக்கின்றது என்கிறபோதும் இப்பரந்த பொருளை மறந்துவிடக்கூடாது.
ஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்புகாண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறுமின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்துவிட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின.
மேலே கூறிய உதாரணத்திலே கலவி விருப்பம் என்கிற அம்சமே இல்லை. இருந்தாலும் அவளுடைய நோய்க்கு அடிப்படையான காரணம் பாலுணர்ச்சியென்றுதான் பிராய்டு கூறுவார். இதிலிருந்து அவர் பாலுணர்ச்சிக்குக் கொடுத்த விரிவான பொருளை நாம் யூகித்துக்கொள்ளலாம்.
குழந்தையிடமும் பாலுணர்ச்சியுண்டு என்பதையும் இவ்வாறே விரிவான முறையில் பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிலே கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டது. மனைவி கோபித்துக்கொண்டு, சொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விட்டாள். கணவனும் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்துவர உடனே முயற்சி செய்யவில்லை. அவனும் கொஞ்சம் பிகுவாகவே இருந்தான். வீட்டிலுள்ள வயதான குழந்தைகள் தாயின் பிரிவினால் அதிகமாகக் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்பங்களைக் காணப் பழகியிருந்தார்கள். வீதி விளையாட்டு, நண்பர்கள் சேர்க்கை என்றிப்படிப் பல வழிகளில் அவர்கள் சமாளித்துக்கொண்டார்கள். ஆனால் நான்கு வயது நிரம்பாத குழந்தைதான் தாயின் பிரிவால் பாதிக்கப்படலாயிற்று. தாய் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவள். அந்த அன்பை இழந்த கடைசிக் குழந்தையின் நடத்தை சிலநாட்களில் மாறத் தொடங்கியது. ஒழுங்காகக் குளிப்பதும், உண்பதும், மற்ற காரியங்களைச் செய்வதுமாக இருந்த அந்தக் குழந்தை பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. குளிக்கச் செய்வதும், உண்ணச் செய்வதும் பெரும் பிரச்சினையாக முடிந்தது. ஏன் அப்படிச் செய்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. உடம்புக்கு சரியில்லையோ என்று கூடச் சந்தேகித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள். உடம்பிலே எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. கடைசியில் தாய் பிணக்குத் தீர்ந்து திரும்பிய பிறகே குழந்தையின் பிடிவாதம் மறையலாயிற்று.
குழந்தையிடம் பாலுந்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிராய்டு தமது மனப்பகுப்பியல் என்ற புதிய மனத்தத்துவப் பகுதியில் பாலுந்தலைப் பிரதானமாக வற்புறுத்திக் கூறுவதைப் பலர் ஆட்சேபித்தார்கள் என்பதை முன்பே கண்டோம். அவ்வாறு ஆட்சேபித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அவரோடு பல காலம் ஒத்துழைத்த ஆட்லரும், யுங்குமாவர். வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் பிரதான சக்தி ‘உயர்வுத்தல்’ என்று ஆட்லர் கூறினார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் உளவியலில் “தனிநபர் உளவியல்” (Individual Psychology) என்ற ஒரு புதிய கிளையைத் தோற்றுவித்தார்.
லிபிடோ என்பது பாலுந்தல் மட்டுமல்ல; அது வாழ்க்கைக்கு வேகங்கொடுக்கும் வேறு சக்திகளையும் தன்னகத்தே கொண்டது என்று யுங் கூறலானர். மேலும் அவர் நனவிலி உளத்திலே ஒருவனுடைய அநுபவங்களும் இச்சைகளும் அழுந்திக் கிடப்பதோடு மனித இனத்தின் அநுபவங்களும் அழுந்திக் கிடக்கின்றன என்று வியாக்கியானம் செய்தார். இவற்றைப் பற்றி முன்பே குறிப்பிட்டேன். ஒருவன் காணும் கனவுகளை ஆராயும்போது அவனுடைய வாழ்க்கை அநுபவங்களையும் இச்சைகளையுமே அவற்றில் மறைந்துகிடக்கக் காண முயல்வது சரியல்ல என்பது அவருடைய கருத்து. கனவுகள் மனித இனத்தின் வாழ்க்கை அநுபவங்களையும் மறைமுகமாகக் காண்பிக்கும் என்று அவர் சொன்னர். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகுமுறை உளவியல்' (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.
இவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதியுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.
பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைங்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக்கொண்டே புதிய வகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...