Skip to main content

காந்தி யார்? - 3 | வெ. சாமிநாத சர்மா


ஆயிரம் பேரில் ஒருவர்தான் நன்றாகப் பேச முடியும். நன்றாகப் பேச முடிந்த ஆயிரம் பேரில் ஒருவர்தான், தெளிவாகச் சிந்திக்க முடியும். தெளிவாகச் சிந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவர்தான், வாழ்க்கையில் தங்களுடைய லட்சியம் இன்னதென்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தெரிந்துகொண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனை அடைய வேண்டாமா? தெரிந்துகொண்ட ஆயிரம் பேரிலே ஒருவர்தான், தங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டு, அதனை நோக்கிப் பிரயாணஞ் செய்ய முடியும். அப்படிச் செல்வோரில் எத்தனையோ பேர், வழியில் களைப்பினால் பின்தங்கிவிடலாம்; வேறு சிலர், வேறு ஆசைகளினால் தூண்டப்பட்டு வேறு பாதைகளுக்குச் சென்றுவிடலாம்; இன்னுஞ்சிலர் லட்சியப் பிரகாசத்தினால் கண் கூசிக் குருடர்களாய் மேல் நோக்கிச் செல்லாமலேயே பின் தங்கிவிடலாம். இங்ஙனம் லட்சியப் பாதையானது மகா கடினமான பாதையாயிருந்தபோதிலும், யாரொருவர் அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கிறார்களோ, அடியெடுத்து வைக்கக்கூடிய ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறார்களோ, அவர்களெல்லோரையுமே பொதுப்படையாக மகான்களென்று உலகம் அழைக்கிறது.

மகான் தன்மைக்குரிய இந்த மாதிரியான லட்சணங்களைக்கொண்டு காந்தியடிகளை நாம் நோக்குகிறபோது, அவர் ஒரு மகானென்பது நன்கு தெரியும். சிலருடைய வாழ்க்கையில், இளமையிலேயே இந்த மகான் தன்மை விகாசமடைகிறது. இன்னுஞ் சிலரிடத்தில், வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே விகாசமடைகிறது. எப்படி, எப்பொழுது விகாசமடைந்தாலும், சிறு பிராயத்திலேயே இதற்கு முளை தோன்றிவிடுகிறது. ஆனால், இந்த முளையை ஒரு சிலரால்தான் அறியமுடிகிறது. பெரும்பாலோரால் அறிய முடிவதில்லை. காந்தியடிகளின் சுய சரித்திரத்தை ஊன்றிப் படிப்போர்க்கு இந்த உண்மை புலனாகும். காந்தியடிகள் ஒரு மகானென்பதை இந்திய மகாஜனங்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததெல்லாம், அவர் இந்தியாவில் ரெளலட் சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய பிறகுதான். ரவீந்திரநாத் தாகூர் 1921-ஆம் வருஷம் சபர்மதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டஞ் சூட்டினார். அது முதற்கொண்டே அந்தப் பெயர் உலகத்தில் முழங்கிக்கொண்டு வருகிறது. ஆனால், இந்த மகாத்மா தன்மை, காந்தியடிகளிடத்தில் இருப்பதை அவருடைய 'அரசியல் குரு'வான கோபாலகிருஷ்ண கோகலே, 1912-ஆம் வருஷத்திலேயே தெரிந்துகொண்டுவிட்டார். அவர் கூறுகிறார்:

''வீரர்களும் மகான்களும் எந்தத் தன்மைகளைக்கொண்டு தயாரிக்கப்படுகிறார்களோ அந்தத் தன்மைகளெல்லாம் காந்தியடிகளிடத்தில் இருக்கின்றன. இதில் சந்தேகமில்லை. இது தவிர, தம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் மகான்களாகவும் ஆக்கிவிடக்கூடிய அபாரமான ஆத்ம சக்தியும் அவரிடத்தில் இருக்கிறது.''

இந்த மகான் தன்மை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை ஏன் ஜனங்கள் மகாத்மாவென்று போற்றுகிறார்கள்? அவரைக் காட்டிலும் அறிவு, அநுபவம், வயது முதலியவைகளில் சிறந்தவர்கள் பலரிருக்க, அவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனிமதிப்பு? இதைச் சிறிது விளக்குவோம். அல்டோஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) என்ற நமது சமகாலத்து மேனாட்டு அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:

“அரசியல் பரம்பரை இருக்கிறதே அது மகா அயோக்கியத்தனமான பரம்பரை. உலகத்தில் இரண்டு விதமான தர்மங்கள் இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கென்று ஒரு தர்மம்; ஜாதிக்கென்று அதாவது தேசத்திற்கென்று வேறு தர்மம். ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் யோக்கியனாகவும், கருணை நிறைந்தவனாகவும், மற்றவர்களுடைய குறை நிறைகளைப் பாராட்டுகிறவனாகவும் இருக்கிறான். ஆனால், அதே மனிதன், ஒரு ஜாதியின் பிரதிநிதியாகவோ, அல்லது ஏதோ ஒரு கட்சியினுடைய பிரதிநிதியாகவோ வருகிறபோது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தக் காரியங்களைச் செய்தால் இழிவு என்று கருதுகிறானோ அதே காரியங்களைக் கூச்சமின்றிச் செய்கிறான். அப்படிச் செய்வதுதான் நியாயமென்றும் சாதிக்கிறான்.

இதனால் என்ன ஏற்படுகிறதென்றால், ஒரு ஜாதிக்கு, சக்தியும் புகழும் இருக்கிறதென்றும், ஆனால் அதற்கு ஒழுக்கம் அல்லது தர்மம் என்பதே கிடையாதென்றும் நாம் கருதிக்கொள்வதாக ஏற்படுகிறதல்லவா? ஜாதி என்ற முறையில் நாம் கேவலமாக நடந்துகொள்வது சரியென்று நம்புகிறோம்.”

காந்தியடிகள், அரசியலை ஒரு பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தியிருக்கிறார் என்று சொல்வதின் தாத்பரியமெல்லாம் இதுதான். அதாவது, நாம் நமது சொந்த விவகாரங்களில் எந்த நியாயத்தை, எந்த தர்மத்தை அநுசரித்து நடக்கிறோமோ அதே நியாயத்துடனும் தர்மத்துடனும் பொது விவகாரங்களிலும் நடந்துகொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் நம் சகோதரர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எப்படி கண்ணியமாகவும் பொறுப்பறிந்தும் நடந்து, அதன் மூலமாக அவர்களுடைய அபிமானத்தையும் நன்மதிப்பையும் பெறவேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ அதைப்போல், தேசிய விவகாரங்களிலும் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் வேறே, தேசம் வேறே என்று பிரிக்கக்கூடாது. தேச வாழ்க்கையிலேதான் நமது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிக்கின்றி நமக்கென்று ஒரு வாழ்க்கையும் தேசத்திற்கென்று ஒரு வாழ்க்கையுமாக, வாழ்க்கையை இரண்டு கூறுபடுத்திக்கொண்டு நடப்போமானால் நாமும் அபிவிருத்தியடைவதில்லை; தேசமும் பாழடைகிறது. நம்முடைய அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையை, இங்ஙனம் இரண்டு கூறுபடுத்தியே பார்க்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயம், அவர்களுக்கு மதிப்புக்கொடுக்கவில்லையென்று சொன்னால், அஃது அதனுடைய குற்றமாகுமா? ஆனால், காந்தியடிகள், தமது வாழ்க்கையை ஒரு மொத்தத் தொகுப்பாகவே பார்க்கிறார். தாம் வேறே, தேசம் வேறே, என்று பார்ப்பதில்லை. தேசத்தின் க்ஷேமத்திலேதான் தம்முடைய க்ஷேமம் இருக்கிறதென்பதை அவர் பலமுறை தம் செயல்களால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தேசத்திற்காக அவர் இருக்கிறாரே தவிர, அவருக்காக தேசம் இல்லை. இந்த மாதிரியான விரிந்த மனப்பான்மையை, எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் நாம் காண்கிறோமா? இல்லையே. இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசியல்வாதிகளிடத்திலும் இந்த இரண்டுவித வாழ்க்கைத் தோற்றங்கள்தான் காணப்படுகின்றன. போரும் பகைமையும் உலகத்திலே இது போழ்து மலிந்திருப்பதற்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள் இங்ஙனம் இரண்டுபட்ட வாழ்க்கையை நடத்துவதுதான். மகாத்மா காந்தியினிடத்தில் இந்த இரண்டுபட்ட தன்மை இல்லாததினாலேயே அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார்.

ஸ்தூலமாகப் பார்க்கிறபோது, இன்றைய மனிதன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறான். அவனுடைய அறிவு, திறமையின் கோபுரத்தின் மீது கொலுவிருக்கிறது. நமக்கு விவசாய நிலங்களும், போக்குவரவு சாதனங்களும் அதிகப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் ரேடியோ இருக்கிறது. பிரதியொருவனும் சொந்தமாக, ஓர் ஆகாய விமானத்தை வைத்துக்கொண்டிருக்கக்கூடிய காலம் விரைவிலே வரக்கூடும். உலகத்தில் வியாதியே இல்லாதபடி செய்யப்பட்டுவிடலாம். தொழிலாளர்களுக்கு வயோதிகச் சம்பளம் கொடுத்து அவர்களைக் கவலைக் கடலினின்று கரையேற்றிவிடலாம். இவையெல்லாம் நடைபெற்றுவிட்டாலும், மனிதன் சாந்திபெறக் கூடுமா? அவன், தன் வாழ்க்கையில் ஆறுதல் காண்பானா? மாட்டான். வாழ்க்கையென்பது என்ன? வயிறு நிறைய ஆகாரம் உண்பதா? அல்லது அறிவுக்கடலில் மட்டும் மிதந்து கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. எவனொருவன் தன் அந்தரங்கத்தில் இன்பத்தையடைகிறானோ, அதாவது இதய சாந்தி பெறுகிறானோ அவன்தான் வாழ்க்கையை நடத்துகிறவன். இந்தத் தூய வாழ்க்கையைப் பொதுவாக உலக மக்களுக்கு, சிறப்பாக இந்திய மகா ஜனங்களுக்கு அளிக்க வேண்டும்மென்பதுதான் காந்தியடிகளின் ஆவல். இதற்காகவே அவரை எல்லோரும் போற்றுகிறார்கள். எல்லாத் தலைவர்களிடத்திலும் இந்த ஆவல் இருக்கிறதா? இல்லையே.

அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர், மனிதனுடைய புறத்தேவைகளை மட்டும் கவனித்துக்கொண்டு செல்கிறார்கள். ஆனால், காந்தியடிகள் மனிதனுடைய அகத்தேவையொன்று இருக்கிறதென்பதை உணர்ந்து அதனைப் பூர்த்திசெய்ய விழைகிறார். இதற்காக அவர், புறத்தேவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஒரு செடியானது செழிப்பாக வளர வேண்டுமானால் அதற்கு எப்படி நல்ல உரம் போட்டு, ஒழுங்காக நீர் பாய்ச்சிக்கொண்டு வரவேண்டுமோ, அதைப்போல், மனிதனுடைய அக வளர்ச்சியானது, அவனுடைய புற வளர்ச்சியை ஒட்டியிருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஒரு சில மகான்கள்தான், புறத்தைப் பொருட்படுத்தாமல் அக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள். ஆனால், சாதாரண ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய புறத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொடுத்தால்தான், அவர்களுடைய அக வளர்ச்சிக்கு நாம் வழி காட்ட முடியும். காந்தியடிகளின் உறுதியான நம்பிக்கை இதுதான். மனிதனுடைய வயிற்றுப் பசியைத் தீர்ப்பதைக் காட்டிலும் அவனுடைய ஆத்மப் பசியைத் தீர்ப்பதுதான் சிரேஷ்டமென்று ஒரு சமயம் ரவீந்திரநாத் தாகூர் கூறியதற்குக் காந்தியடிகள் என்ன விடையளிக்கிறார் பாருங்கள்!

"கவிஞர் தமது கவிதா உணர்ச்சிக்குப் பொருத்தமாக எதிர்காலத்தின் பொருட்டு வாழ்கிறார். நம்மையும் அந்த மாதிரி வாழுமாறு சொல்கிறார். காலை நேரத்திலே, பட்சிகள் ஆகாயத்தில் குதூகலமாகப் பறப்பதை அவர் நமக்கு வருணித்துக் காட்டுகிறார். வாஸ்தவம். இந்தப் பட்சிகளுக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்துவிட்டது. முந்திய நாள் இரவு ஓய்வு கொண்டதினிமித்தம் அவைகளின் தேகத்தில் நல்ல ரத்தம் ஓடிக்கொண்டிருக்க, ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கின்றன. ஆனால் நான் காண்கிற பட்சிகள் சிறகுகளை அசைக்கக்கூட முடியாத பலஹீனத் தோடிருக்கின்றன. என் ஆசை வார்த்தைகள், அந்தச் சிறகுகளுக்குப் பலத்தை அளிக்கவில்லை. இந்திய ஆகாயத்தின் கீழ் வாழும் மனிதப் பறவையானது, முன்னாளிரவு எவ்வளவு பலஹீனத்துடன் படுக்கச்சென்றதோ அதைவிட அதிக பலஹீனமாக மறுநாள் காலையில் எழுந்திருக்கிறது. லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு, எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கவேண்டியிருக்கிறது; அல்லது மெய்மறந்த நிலையில் இருக்கவேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த நிலையை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டுக் கதறும் நோயாளிகளை ஒரு பாட்டுப்பாடி என்னால் குணப்படுத்த முடியவில்லை. பசி நோயால் அவதியுறும் லட்சக்கணக்கான இந்திய மக்கள் ஒரே ஒரு பாட்டைத்தான் கேட்கிறார்கள். அஃதென்ன? பலத்தை அளிக்கக்கூடிய ஒரு கவளச் சோறு.''

பொதுவாக உலகத்திலுள்ள ஏழை மக்களும், சிறப்பாக இந்திய மக்களும் காந்தியடிகளை ஒரு தெய்வமாகக் கொண்டாடுவதின் ரகசியம் இதுதான். அவர் ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்துகொண்டு மட்டும் இருக்கவில்லை; உணர்ந்து, அந்த உணர்ச்சியைச் செயல் மூலமாக வெளிப்படுத்துகிறார். மற்றத் தலைவர்கள் ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்துகொண்டிருப்பதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள். சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலாகக் கையாண்டவர் காந்தியடிகளேயென்றும், இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அவரேயென்றும், இதற்காகவே உலகம் அவரைப் போற்றுகிறதென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. இதற்காக காந்தியடிகளை உலகம் போற்றுகிறதென்று சொன்னால், அது மலிவான போற்றுதல் என்றுதான் நாம் கொள்கிறோம். அதாவது அவருடைய உயர்நிலைக்கு இது தக்க மதிப்பல்ல. இதைச் சிறிது விஸ்தரித்துக் கூற விரும்புகிறோம்.

(அறிவோம்...)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்