Skip to main content

காந்தி யார்? - 2 | வெ. சாமிநாத சர்மா


இங்கிலாந்தில் மிஸ் மாட் ராய்டன் என்ற ஓர் அம்மையார். கிறிஸ்துவ ஞானிகளின் கூட்டத்திலே இவருக்கு அதிக மதிப்பு உண்டு. காந்தியடிகள், 1931-ஆம் வருஷம் வட்டமேஜை மகா நாட்டை முன்னிட்டு லண்டனுக்குச் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மண்டபத்திற்கு வெளியே வந்தார். பிறகு நடைபெற்றதை மேற்படி மாட் ராய்டனே வருணிக்கட்டும்:

''அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கே இருக்கிறதென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்து வந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அந்த ஒவ்வொரு மோட்டார் சொந்தக்காரருக்கும். அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடைகளையும் மகாத்மா தரித்துக்கொண்டிருக்கவில்லை. அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக்கூடாதென்று எண்ணினேன். ‘அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள்’ என்று அவரிடம் சொன்னேன். ‘இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஹா! அந்த வார்த்தைகள் எனக்கு மகுடாபிஷேகம் செய்தது போலிருந்தன. 'அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடையனவே' என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால், அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்!''
'ரகுபதி ராகவ ராஜாராம் - பதிதபாவன சீதா ராம்' என்ற நாமாவளியை எல்லோர் இதயத்திலும் ஊன்றிவிட்டுச் சென்றவரும், ‘புனா கந்தர்வ மஹா வித்யாலயம்' என்ற சங்கீத ஸ்தாபனத்தின் தந்தையும், ஏறக்குறைய ஒவ்வொரு காங்கிரஸ் மகா சபையின் போதும், தம் சிஷ்யர்களுடன் விஜயஞ் செய்து பாரதமாதாவின் மீது இசையமுதைப் பொழிந்து, அனைவருடைய இதயத்தையும் குளிர்வித்துக்கொண்டிருந்தவருமான காலஞ்சென்ற பண்டித விஷ்ணு திகம்பரர், தமது சங்கீதப் புலமை, தெய்வீகத்தன்மையடைய வேண்டுமென்பதற்காக, சங்கீதமே அறியாத, ஆனால் சங்கீதத்தின் இங்கிதத்திலே தம்மை இழந்துவிடும் ஆற்றல் வாய்ந்த காந்தியடிகளின் தலையசைவையும், அருட்பார்வையையும் எதிர்பார்த்தாரே தவிர, ஸ்வர, சுருதி, தாள பேதங்களைப் பற்றிச் சச்சரவிட்டு அந்தச் சச்சரவில் சங்கீதத்தையே இழக்கும் சாமர்த்தியமுடைய சங்கீத வித்துவான்களின் கரகோஷத்தை எதிர்பார்த்தாரில்லை.
காந்தியடிகள், லண்டனில் பாரிஸ்டர் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது மேனாட்டு நடனத்தைக் கற்றுக்கொண்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தோ என்னவோ, இப்பொழுது பால் ரோபெஸன் (Paul Robeson) என்ற நீக்ரோ நடிகர், அவர் முன்னிலையில், தமது நடிகத் திறமையைக் காட்ட விழைகிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற காமா என்கிற பயில்வான், தமது தேக வலிமைக்கு அவருடைய ஆசீர்வாத முத்திரை தேவை என்று விழைகிறார். காந்தியடிகள், சிறு பையனாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தேகப்பயிற்சி விஷயத்தில் சிறிதுகூடக் கவலை செலுத்தாமலிருந்ததும், ஒரு நாள் தேகப் பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலிருந்ததற்காக இரண்டணா அபராதம் செலுத்தியதும் காமாவுக்கு ஞாபகமில்லை போலும்!
‘கீளார் கோவண முடுக்கும்’ காந்தியடிகளிள் கையைப் பிடித்துக் குலுக்கிப் பெருமையடைய அரச குடும்பத்தினர் அநேகர் ஆவல் கொள்கிறார்கள். இங்கிலாந்திலும் இத்தலியிலும் அரச குடும்பத்தினர் அவருக்கு அளித்த உபசாரங்களை யார் மறக்க முடியும்?
காந்தியடிகள் சிறந்த ஓர் அரசியல்வாதியென்றோ, ராஜதந்திரியென்றோ சொல்லமுடியாது. தாம் அந்த மாதிரி அழைக்கப்பட்டால், அதை அவர் விரும்புவதுமில்லை. தம்மை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக்கொள்வதில்தான் அவர் பெருமையும் திருப்தியுமடைகிறார். ஆயினும், உலகத்தையே ஆட்டி வைக்கும் சாமர்த்தியமுள்ள அரசியல்வாதிகளும் ராஜதந்திரிகளும் அவரைக் காணவும் பின்வாங்குகிறார்கள். பிடிவாதமுள்ள ராஜதந்திரியான ஸ்ரீ வின்ஸ்டன் சர்ச்சிலும், தந்திர அரசியல்வாதியான லார்ட் வில்லிங்டனும் அவரைக் காணக்கூட மறுத்துவிட்டார்கள்!
இவைகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு பார்க்கிறபோது, காந்தியடிகள் ஒரு புதிர் என்ற முடிவுக்குத்தான் யாரும் வரக்கூடும். இந்தப் புதிரை விடுவிக்க, அநேக அறிஞர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் இந்தப் புதிரிலேயே சிக்கிக்கொண்டுவிட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒரு புதிரா? இதற்கு விடை. 'ஆம்' என்றும் சொல்லலாம், 'இல்லை' என்றும் சொல்லலாம். அரசியல் பீடத்தில் அவரை வைத்திருத்திப் பார்க்கிறபோது, அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அநேக முரண்பாடுகளிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மகான் தன்மை என்னும் பரிசுத்த ஆகாயத்தில், அதாவது மேலான நிலையில், அவர் எவ்விதக் களங்கமுமில்லாத ஒரு சந்திரனாகவே பிரகாசிக்கிறார். அவர் ஒரு மகான்; வீரன்; இவையிரண்டினைக் காட்டிலும் மேலாக அவர் ஒருமனிதன். இந்த அம்சங்களைப் பற்றிச் சிறிது விஸ்தரித்துக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.
காந்தியடிகளை, 'மகாத்மா'வென்று பட்டஞ்சூட்டியே நாம் போற்றுகிறோம். மகாத்மாவென்றால் என்ன அர்த்தம்? இதை ரவீந்திரநாத் தாகூர் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:
“தனி மனிதனிடத்திலுள்ள 'நான்' என்பது விடுதலை பெற்று, எல்லோரிடத்திலும் 'தான்' ஆகப் பரிணமிக்கிற போது, மகாத்மாவாகிறது. உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும், யாரோருவர், 'தாம்' ஆகப் பார்க்கிறாரோ அவர்தான் மகாத்மா.”
சாதாரண விவகார பாஷையில் இதைச் சொல்லப்போனால், யாரொருவர் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துகிறாரோ, எல்லோருடைய துன்பத்தைத் தமது துன்பமாகவும், எல்லோருடைய இன்பத்தைத் தமது இன்பமாகவும் ஏற்றுக்கொள்கிறாரோ அவரே மகாத்மா. இப்படிப்பட்டவர்களை மகான்களென்றும், மகா புருஷர்களென்றும், தீர்க்கதரிசிகளென்றும், பரம ஞானிகளென்றும், லட்சியத்திற்காக உயிரைத் துரும்பென மதிக்கும் மகா வீரர்களென்றும் பல பட அழைப்பது வழக்கம். இவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; பிறருக்காகவே வாழ்கிறார்கள். 'பணிசெய்து கிடப்பதுதான்' இவர்கள் கடன்.
இத்தகைய மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் சிறிது ஊன்றிப் பார்த்தோமானால், துன்பமும் துயரமுமே இவர்களுடைய வாழ்க்கையின் நியதிகளாயிருக்கின்றன. இவர்கள், அநேக சமயங்களில் தாங்களே வலிய, துன்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்; சில சமயங்களில் பிறரால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவற்றைப் பார்த்து இவர்கள் பரிகசிக்கிறார்கள்; புன்சிரிப்புச் சிரிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஹென்ரி தோரூ (Henry Thoreau) என்ற ஓர் அமெரிக்க ஞானி இருந்தான். அவன் சிறைவாசத்தை அநுபவித்தான். அப்பொழுது கூறுகிறான்:
"என்னைச் சுற்றி இருக்கும் இந்தச் சிறைச்சாலைச் சுவர்களைக் கட்டுவதற்காகச் செலவழிக்கப்பட்ட கல்லும் சுண்ணாம்பும் வீண்தான். சிறையதிகாரிகள், என் தேகத்தை எவ்வளவு பத்திரமாகப் பூட்டி வைக்கிறார்கள்! ஆனால், என்னுடைய மனம், எவ்விதத் தங்குதடையுமில்லாமல் அவர்களோடேயே உலவிக்கொண்டிருக்கிறதே! பாவம்! சிறு பிள்ளைகள், தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எதிர்ப்பட்டால், அவர்களை நேராக எதிர்க்கத் தைரியமில்லாமல், தங்களுடைய நாயைப் பிடித்துத் திட்டுவார்கள். அதைப்போலிருக்கிறது இந்தச் சிறையதிகாரிகள் என்னைப் பூட்டிவைத்திருப்பது!"
இதைப்போல் மகான்கள் சிறையையோ சங்கிலியையோ லட்சியஞ் செய்யமாட்டார்கள். 'மகான்களின் புனிதத் தன்மையானது, அதாவது தூய மனமானது, தூக்குமரத்தில்தான் இன்பம் நுகர்கிறது!' என்ற வாசகப்படி, இவர்கள் உலக வாழ்க்கையிலே எவ்வளவு துன்பங்களையநுபவித்தாலும், அவைகளைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதில்லை; சலிப்புக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, இவர்களுடைய மகான் தன்மையானது, மேற்படித் துன்பங்களை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடும்படி இவர்களைத் தூண்டுகிறது. இப்படிப் போராடிப் போராடி இவர்கள் உலகத்துக்குச் சாந்தியை வாங்கிக்கொடுக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தினால் உலகம் இன்புறுகிறது.
இவர்கள் ஏன் வலிய இப்படித் துன்புறுகிறார்கள்? எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவர்கள் கொண்டுள்ள அன்புதான் இதற்குக் காரணம். அன்பும் துன்பமும் இணைபிரியாத இரட்டைச் சகோதரர்கள் மாதிரி. ''இவையிரண்டும் மனிதனுடைய இரண்டு கண்கள் போலிருக்கின்றன'' என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். கண்களில்லாதவன் மனிதனாக மாட்டான். அதைப்போல் அன்பு செலுத்தாதவர்களும் துன்பமநுபவியாதவர்களும் மனிதர்களாகமாட்டார்கள். துன்பத்திற்குப் பயந்து அன்பு செலுத்த மறுக்கிறவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடவஸ்து; எதற்கும் உதவாத ஒரு பிண்டம். தாந்தே என்ற இத்தாலிய மகா கவிஞன் கூறிய மாதிரி 'உலகத்தினிடம் அன்பு செலுத்துகிற மகான்கள் எந்த யுகத்தில் அவதரித்தபோதிலும் அவர்கள் மகத்தான துயரமென்னும் மகுடத்தையே அணிந்துகொண்டிருக்கிறார்கள்.' எவனொருவன் உண்மையாகவே அன்பு செலுத்துகிறானோ அவன் துன்பமநுபவிப்பதினின்று தப்ப முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் மற்றவர்கள்மீது அதிகமாக அன்பு செலுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவன் துன்பத்தை அநுபவிக்கிறான். ஒரு தாய், தன் குழந்தையின் இன்பத்திற்காக எத்தனையோ விதமான துன்பங்களை அநுபவிக்கிறாள். அப்படி அநுபவிப்பதிலே ஒரு திருப்தி கொள்கிறாள். அந்தத் திருப்தியே அவள் அடைகிற இன்பம். அதைப் போலவே, மகான்களுடைய அன்பும் இருக்கிறது. தாய், தன் குழந்தையினிடத்தில் அன்பு செலுத்தாமல் எப்படி இருக்கமுடியாதோ, அப்படியே மகான் தன்மையுடையவர்களும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தாமலிருக்க முடியாது. தாய் எப்படி, அந்த அன்பின் மூலமாகத் துன்பத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறாளோ அப்படியே மகான்களும் துன்பத்தை வலிய ஏற்றுக்கொள்கிறார்கள்.
இங்ஙனம் இவர்கள் அன்பையும் துன்பத்தையும், ஒரு கண் கொண்டு பார்ப்பதினால்தான் இவர்களுடைய செயல்களில் அநேக முரண்பாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள், தங்களைப் பொறுத்தமட்டில் அன்பெனும் உயர்ந்த சிகரத்தில் இருக்கிறார்கள். ஆனால், கீழே அதாவது உலகத்திலே, அறியாமை, வறுமை முதலிய துன்பங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இவர்கள் இதயம் துடிதுடிக்கிறது. பரம கருணையினால், தங்கள் உச்ச நிலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். மேலான உண்மைகளை உபதேசிக்கிறார்கள். அவைகளை அறிந்துகொள்ளக்கூடிய தகுதி ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாவென்பதை இவர்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய துன்ப நிலையை இன்ப நிலையாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சிறந்த உண்மைகளை உபதேசிக்கிறபோது, அவை அவர்களுக்கு முரண்பாடாகவே தெரிகின்றன. இரண்டு கடல் நீர்கள் ஒன்று சேர்கிறபோது, இரண்டுக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறதுபோல், மேலான தன்மையும் கீழான தன்மையும் ஒன்று சேர்கிறபோது, சில மாறுபாடுகள் இருக்கவே செய்யும். அடிப்படையில் ஒன்றுதான். எல்லாம் நீர்தான். நீரின் நிறத்தில், கனத்தில், கலப்பில், வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.
ஆனால், இப்படிப்பட்ட முரண்பாடுடையவர்களாலேயே உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். இவர்கள்தான் உலகத்திற்கு நன்மை செய்திருக்கிறார்கள். பிரபஞ்ச இதிகாசம், இந்த உண்மையை நமக்குச் சதா அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகத்திலே தோன்றின எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள். தங்களுடைய சுற்றுச் சார்பைக் கண்டு அதிருப்தி கொண்டவர்கள்தான், புரட்சிகளுக்கெல்லாம் காரணர்களாயிருக்கிறார்கள். இவர்களுடைய சமகாலத்தவர் இவர்களைக் கிளர்ச்சிக்காரரென்றும், கலகக்காரரென்றும், புரட்சிக்காரரென்றும் சொல்லி, இவர்களைப் பலவிதமாக இம்சிக்கிறார்கள். ஆயினும், இவர்கள் புதிய கொள்கைகளை, புதிய இயக்கங்களை விதைத்துவிட்டு மறைந்து விடுகிறார்கள். வருங்கால சந்ததியார், இந்த விதையிலிருந்து கிடைத்த மகசூலை அநுபவிக்கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுடைய பெருமை தெரிகிறது. மகான்களென்று இவர்கள் போற்றப்படுகிறார்கள். புத்தர்பிரான், தமது காலத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்குகளையும் எதிர்த்துப் போராடினார். பல பேருடைய பரிகாசத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். யேசுநாதர், தம்மைச் சுற்றியிருந்த ரோம ஏகாதிபத்தியத்தின் போலித்தனத்தையும் ஆடம்பரத்தையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். ஆனால், ஜனங்கள் அவர் மீது கல்லெறிந்தார்கள்; சிலுவையிலே அறைந்தார்கள். பிற்காலத்திலே தோன்றின ஸாக்ரடீஸ் என்ன, மார்ட்டின் லூதர் என்ன, பிரெஞ்சு புரட்சிக்கு, விதையூன்றின ரூஸ்ஸோ என்ன, கார்ல் மார்க்ஸ் என்ன, லெனின் என்ன, இப்படிப்பட்டவர்கள் புரட்சிக்காரர்களென்று முத்திரையிடப்பெற்று அநேக அவதிகளுக்குட்படுத்தப்பட்டார்கள். ஆனால், இவர்களெல்லோரும் மகான்கள்.
இவர்கள் வெளிப்பார்வைக்கு அநாகரிகர்கள் போலவும் பித்தர்கள் போலவும் நடந்துகொள்ளலாம். ஆனால், உலகத்தை நாகரிகப்படுத்தவும், உலகத்தின் பித்தத்தைத் தெளிவிக்கவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள். நாம் இப்பொழுது நம்மை நாகரிகர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் நாம் நாகரிகத்தையடைந்திருக்கிறோமா? நாகரிக வாழ்க்கையின் அடிப்படையென்னவென்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குப் பதில் சொல்லுகிற முகத்தான் ஓர் அறிஞன் கூறுகிறான்:
''ஒரு சமுதாயத்தில், வலியார், எளியாருடைய சுமையை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயத்தின் வாழ்க்கையானது நாகரிகமடைகிறது.''
இந்த அளவு கொண்டுதான் மகான்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். உள்ள நிலையைக் கண்டு இரங்குகிறார்கள்; அதிருப்தி கொள்கிறார்கள். விளைவது என்ன? புரட்சி அல்லது சிறைவாசம் அல்லது தூக்குமேடை.
(அறிவோம்...)

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...