Skip to main content

திருக்கேத்தீச்சுரம் - மயிலை சீனி. வேங்கடசாமி


திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற இலங்கை நாட்டுத் திருப்பதிகளுள் திருக்கேதீச்சுரமும் ஒன்று. இலங்கைத் தீவின் மிகப்பழைய துறைமுகப்பட்டினமாகிய மகாதிட்டை என்னும் இடத்தில் இத்திருப்பதி இருக்கிறது. மகாதிட்டை என்பது மாதோட்டம் என்றும் பெயர்பெறும். சிங்கள அரசர் சாசனத்தில் இது மகாவுட்டு என்று கூறப்படுகிறது. இது மகாதிட்டை என்று பெயர் மருவியது போலும். மகாதிட்டை இலங்கையின் மேற்குக் கரையில் மன்னாருக்கு அருகில் இருக்கிறது.

இத்துறைமுகப் பட்டினம், தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகள் கரை இறங்கும் துறைமுகப் பட்டினமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இலங்கையின் முதல் அரசனான விஜயன் என்பவன் முதன் முதலாக இலங்கைக்கு வந்தபோது இந்தத் துறை முகத்திலேதான் இறங்கினான். இந்த விஜய அரசன் மணம் செய்து கொண்ட பாண்டிய மன்னன் மகள், இலங்கைக்குச் சென்றபோது இத்துறைமுகத்திலேதான் இறங்கினாள். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கும் சென்ற பிரயாணிகளுக்கு இது வசதியான துறைமுகமாக இருந்தது. இங்குத் தமிழர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையை கி.பி. 352 முதல் 379 வரையில் அரசாண்ட ஸ்ரீமேகவர்ணன் என்னும் அரசன் காலத்திலேயே இங்கு ஒரு இந்து தேவாலயம் இருந்ததென்று தாட்டாவம்சம் என்னும் நூலினால் தெரியவருகிறது. இந்தத் தேவாலயந்தான் திருக் கேத்தீச்சுரம் என்பதில் ஐயமில்லை . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருக்கேத்தீச்சுரம் கடற்கரையை அடுத்துள்ள மாதோட்டம் என்னும் இடத்தில் பாலாவி என்னும் ஆற்றின் கரைமேல் இருக்கிறதென்று அவர் பதிகத்தில் கூறியுள்ளார்.

இராஜராஜ சோழனுடைய உத்தியோகஸ்தனான தாழி குமாரன் என்பவன் இவ்விடத்தில் ராஜராஜேஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்றும் சாசனத்தில் தெரியவருகிறது. மாதோட்டம் பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும் (சிங்களவருக்கும் தமிழருக்கும்) புண்ணிய க்ஷேத்திரமாகப் பண்டைக் காலமுதல் இருந்து வருகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஐந்தாம் தப்புலன் என்னும் சிங்கள அரசன், ஏறத்தாழ கி.பி. 924-ல் எழுதியுள்ள சாசனம் ஒன்றில், ''மகாவோடி (மகாதிட்டையில் பசுவைக் கொன்றவர் செல்லும் நரகத்திற்குப் போவாராக'' என்று எழுதியுள்ளான். இதனால், இதனைப் பரிசுத்த ஸ்தலமாகப் போற்றி வந்தார்கள் என்பது தெரிகிறது.

லோகோபகாரி, பு 51, இ 36, 20-12-1947

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...