Skip to main content

திருக்கேத்தீச்சுரம் - மயிலை சீனி. வேங்கடசாமி


திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற இலங்கை நாட்டுத் திருப்பதிகளுள் திருக்கேதீச்சுரமும் ஒன்று. இலங்கைத் தீவின் மிகப்பழைய துறைமுகப்பட்டினமாகிய மகாதிட்டை என்னும் இடத்தில் இத்திருப்பதி இருக்கிறது. மகாதிட்டை என்பது மாதோட்டம் என்றும் பெயர்பெறும். சிங்கள அரசர் சாசனத்தில் இது மகாவுட்டு என்று கூறப்படுகிறது. இது மகாதிட்டை என்று பெயர் மருவியது போலும். மகாதிட்டை இலங்கையின் மேற்குக் கரையில் மன்னாருக்கு அருகில் இருக்கிறது.

இத்துறைமுகப் பட்டினம், தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகள் கரை இறங்கும் துறைமுகப் பட்டினமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இலங்கையின் முதல் அரசனான விஜயன் என்பவன் முதன் முதலாக இலங்கைக்கு வந்தபோது இந்தத் துறை முகத்திலேதான் இறங்கினான். இந்த விஜய அரசன் மணம் செய்து கொண்ட பாண்டிய மன்னன் மகள், இலங்கைக்குச் சென்றபோது இத்துறைமுகத்திலேதான் இறங்கினாள். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கும் சென்ற பிரயாணிகளுக்கு இது வசதியான துறைமுகமாக இருந்தது. இங்குத் தமிழர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையை கி.பி. 352 முதல் 379 வரையில் அரசாண்ட ஸ்ரீமேகவர்ணன் என்னும் அரசன் காலத்திலேயே இங்கு ஒரு இந்து தேவாலயம் இருந்ததென்று தாட்டாவம்சம் என்னும் நூலினால் தெரியவருகிறது. இந்தத் தேவாலயந்தான் திருக் கேத்தீச்சுரம் என்பதில் ஐயமில்லை . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருக்கேத்தீச்சுரம் கடற்கரையை அடுத்துள்ள மாதோட்டம் என்னும் இடத்தில் பாலாவி என்னும் ஆற்றின் கரைமேல் இருக்கிறதென்று அவர் பதிகத்தில் கூறியுள்ளார்.

இராஜராஜ சோழனுடைய உத்தியோகஸ்தனான தாழி குமாரன் என்பவன் இவ்விடத்தில் ராஜராஜேஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்றும் சாசனத்தில் தெரியவருகிறது. மாதோட்டம் பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும் (சிங்களவருக்கும் தமிழருக்கும்) புண்ணிய க்ஷேத்திரமாகப் பண்டைக் காலமுதல் இருந்து வருகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஐந்தாம் தப்புலன் என்னும் சிங்கள அரசன், ஏறத்தாழ கி.பி. 924-ல் எழுதியுள்ள சாசனம் ஒன்றில், ''மகாவோடி (மகாதிட்டையில் பசுவைக் கொன்றவர் செல்லும் நரகத்திற்குப் போவாராக'' என்று எழுதியுள்ளான். இதனால், இதனைப் பரிசுத்த ஸ்தலமாகப் போற்றி வந்தார்கள் என்பது தெரிகிறது.

லோகோபகாரி, பு 51, இ 36, 20-12-1947

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

காந்திஜி குடும்ப மூதாதையர் வரலாறு

[மகாத்மா காந்தி தமது 'சுயசரிதை'யில் தம் குடும்ப வரலாற்றைச் சொல்லும்போது, தமது பாட்டனாரைப் பற்றி மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், காந்தி குடும்பத்தைப் பற்றிய முந்திய வரலாற்றையும் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக அக்குடும்ப வரலாற்றைக் குறித்து, ஸ்ரீ பிரபுதாஸ் காந்தி எழுதியிருக்கும் "காந்தியுடன் என் குழந்தைப் பருவம்'' என்ற நூலிலிருந்து....] நான் சேகரிக்க முடிந்த தகவல்களிலிருந்து, எங்கள் குடும்ப சரித்திரத்தில் லால்ஜி காந்தியின் பெயர்தான் முதல் முதல் தெரிகிறது. லால்ஜி காந்தி குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாகப் பிறந்தவரான உத்தம சந்திர காந்தியே, காந்தி குடும்பப் பெயருக்குக் கௌரவத்தையும் கீர்த்தியையும் தேடித் தந்தார். ஏழாவது தலைமுறையில் பிறந்தவரே, மகாத்மா காந்தி. லால்ஜி காந்தியின் குமாரர் ராம்ஜி காந்தி. இவர் தப்தாரியாக வேலை பார்த்தார். ஆகவே, போர்பந்தர் சமஸ்தான திவானுக்கு வலக்கரம்போல் இருந்தார். இப்பொழுது மந்திரி சபையில் உள்நாட்டு மந்திரிக்கு என்ன பொறுப்புக்கள் உண்டோ அவையே தப்தாரியின் பொறுப்புக்களாகும். ராம்ஜி காந்தியின் மகன் ர...