Skip to main content

பழஞ் செய்திகள் - மயிலை சீனி. வேங்கடசாமி


நமது நாட்டுப் பழங்கால அரசியல் வரலாறு, நாகரிக வரலாறு, சமய வரலாறு முதலியவை வரன்முறையாக எழுதப்படவில்லை . இத்தகைய வரலாறுகள் நமது முன்னேற்றத்திற்கு இன்றியமையாதன. வரலாற்றுக் குறிப்புகள் சில சமய நூல்களிலும், இலக்கிய நூல்களிலும், உரை நூல் களிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. சிதறுண்டு கிடக்கும் சில குறிப்புகள் வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் என்னும் கருத்துடன் நான் கண்ட சில குறிப்புகளை எழுத முற்படுகிறேன். ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரப் பிரபந்தத்திற்கு எழுதப்பட்டுள்ள வியாக்கியானத்தில் (விரிவுரையில்) காணப்படும் சில குறிப்புகளை ஈண்டுக் கூறுகிறேன்.

1. செங்கட் சோழன் விளந்தை வேளை வென்றது

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் (து) உலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

என்பது திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி (6ஆம் பத்து, 6ஆம் செய்யுள்).

இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் "ஒளி வர்த்தியாநின்ற வேலைக் கையிலேயுடைய விளைந்த வேளாகிற குறும்பனை வீரஸ்வர்க்கத்தேற போம்படி ஏகப்ரயோகத்தாலே வேலை நடத்தி, ஜகத்தை யடையத் தானிட்ட வழக்காம்படி நிர்வகித்த ராஜாவானவன் கிட்டி ஆரம்பித்த திருநறையூர்.”

இதில் செங்கட் சோழன், விளைந்தவேள் என்பவனை வென்ற செய்தி கூறப்படுகிறது. மூலத்திலும் உரையிலும் 'விளைந்த வேள்' என்றிருப்பது தவறு. 'விளந்தை வேள்' என்று இருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது.

செங்கட் சோழன் விளந்தை வேளை வென்ற செய்தி வேறு நூல்களில் கூறப்படவில்லை.

2. செங்கட் சோழன் திருவழுந்தூரில் போர் வென்றது

பாராளர் இவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
படைமன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

(திருமங்கை, பெரிய திருமொழி, 6ஆம் பத்து)

"இன்னார் இன்னார் என்று ப்ரசித்தராயிருக்கிற ராஜாக்கள் ஸபரிகாரராய்க் கொண்டு திருவழுந்தூரிலே வந்து எதிரிட, அவர்களுடன் துணியும்படிக்கீடாக வென்ற செங்கட் சோழன்” என்பது வியாக்கியானம்.

அழுந்தை என்றும் (அகம்., 196; 11), அழுந்தூர் என்றும் (அகம்., 246; 14) கூறப்படும் திருவழுந்தூர் சோழநாட்டில் இருக்கிறது. செங்கட் சோழனைப் பகைவர் எதிர்த்துத் தோற்ற செய்தி இதில் கூறப்படுகிறது.

3. செங்கட் சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டியது

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்(து) உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

இதில், செங்கட் சோழன் 70 திருக்கோயில்களைக் கட்டிய செய்தி கூறப்படுகிறது.

4. சோழ அரசர் வெற்றிலை உண்டது

திருமங்கை மன்னன் அருளிய முதல் பத்து மூன்றாந் திருமொழியில், "முற்ற மூத்துக் கோல்துணையா” என்னும் பாசுரத்துக்கு விரிவுரை கூறும் வியாக்கியான ஆசிரியர், சோழர்கள் வெற்றிலை உண்ணும் முறையைக் கூறுகிறார்.

"சோழர்கள் வெற்றிலை சிலரிடலன்றிக்கே தாங்களே எடுத்தியே தின்பது; 'தலை கவிழ்ந்து வாங்கில் சிலரை வணங்கிற்று' என்னும் துர்மானத்தாலே.”

இதனால், சோழ அரசர் பிறர் கொடுக்க வெற்றிலையை வாங்கி உண்பதில்லை என்பதும், தாங்களாகவே எடுத்து உண்ணுவர் என்பதும், இவ்வழக்கத்தின் காரணம், பிறர் கொடுக்க வாங்கினால், தாம் தலைவணங்கியது போலாகும் என்னும் கருத்தே என்பதும் தெரிகின்றன.

5. சோழர் சாமந்த அரசர் தலைமேல் அடிவைத்து யானை ஏறியது

சோழ அரசர் உலாப் போக யானைமேல் ஏறும்போது, தமக்குக் கீழ்ப்பட்ட சாமந்த அரசரின் தலைமேல் கால் வைத்து யானைக் கழுத்தில் ஏறி அமர்வர் என்கிற செய்தி, குருபராம் பராப்ரபாவம் என்னும் நூலினால் தெரிகிறது.

''பின்னையுஞ் சில நாள் கழிந்தவாறே, ஒரு நாளளவில் (சோழ அரசன் வந்து மன்னனாரை (வீரநாராயணபுரத்துப் பெருமாளை) சேவித்து மீண்டு போகையில், தன்னுடைய சாமந்தன் தலைமேலடியிட்டு ஆனைக்கழுத்தின் மீதேற, அதை இவர் (நாதமுனிகள்) கண்டு, 'சர்வேஸ்வரன் பிரம்மாதி தேவர்கள் தலைமீது அடியிட்டுப் பெரிய திருவடி (கருடன்) மேற்கொள்ளும்படி இது வாகாதோ' வென்று மோகித்தா ரென்பதும் பிரசித்தம்" (ஸ்ரீ நாதமுனிகள் வைபவம்).

6. சாமந்த அரசர் (சிற்றரசர்) பேரரசர் அரண்மனையில் உழக்கரிசி பெறுதல்

''சாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்க வுண்டாகிலும், மாளிகைக்குள்ளே செப்பாலே நாழி யரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பார்களிறே.''

இது, திருவாய்மொழி முதல் பத்து, 3 ஆம் திருவாய் மொழி 9 ஆம் பாசுரத்தின் வியாக்கியானம்.

கப்பம் கட்டும் சிற்றரசர்களான சாமந்த அரசர்கள் தமக்கென்று நாடும் ஊரும் உடையவரேனும், தமது பேரரசனிடத்துச் சென்று, அவன் செம்பு நாழியாலே அளந்து கொடுக்கும் நாழி அரிசியைத் தமக்குரிய வரிசையாகப் பெற்று வந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது.

7. மொட்டையடிப்பது

காம்பறத் தலைசிரைத்(து) உன் கடைத்தலை யிருந்து வாழும்
சோம்பரை உகத்திபோலும் சூழ்புனல் அரங்கத் தானே

என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை 38 ஆம் பாசுரம். இதில் 'தலை சிரைத்து' என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமாறு:

''தலைமயிராகிறதுதான் அபிமான ஹேதுவிறே. கோமுற்றவர் (?) தண்டிக்குமிடத்தில் தலையைச் சிரைக்கிறது. அபிமானத்தைப் போக்குகிறதாய்த்து. ஏகாந்தியாயும் சந்நியா சியாயும் வபநம் பண்ணுகிறது தன் அபிமானத்தைத் தானே போக்கிறபடியிறே - தண்டமுகத்தாலே பிறரபிமானத்தைப் போக்குவதும் இம்முகத்தாலே; ஸ்வாபிமானத்தைப் போக்கு வதும் இம்முகத்தாலேயிறே. ஆக, அஹங்கார கர்ப்பமான உபாயந்தர பரித்யாகத்தைச் சொன்னபடி.''

இதனால், குடுமி வைப்பது அக்காலத்தில் அபிமான கரமாகக் கருதப்பட்டதென்பது விளங்குகிறது.

8. கொல்லிப் பாவை

பழைய சங்க நூல்களில் கொல்லிப்பாவையைப் பற்றிக் கூறப்படுகிறது. கொல்லி மலையில் இருந்த ஓர் அழகிய பெண் உருவமாகும் இது. சில உரையாசிரியர்கள், இக்கொல்லிப் பாவை ஒரு யக்ஷி தெய்வம் என்றும், அங்குச் செல்வோரை இது மயக்கி அழிக்கும் என்றும் கூறுவர். இந்த வியாக்கியானத் திலிருந்து, கொல்லிமலையில் எழுதப்பட்ட ஒரு சிற்ப உருவம் இது என்று தெரிகிறது. இக்கருத்துப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.

"குவளையங்கண்ணி கொல்லியம்பாவை'' என்றும், ''குலங்கெழு கொல்லி கோமள வல்லி" என்றும் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் கொல்லிப் பாவையைக் குறிக்கிறார். இவற்றிற்கு வியாக்கியானம் இவ்வாறு கூறப்படு கிறது :

"கொல்லிமலை மேலே ஒரு பாவை யுண்டு. எல்லாரும் உருவகுப்புக்குத் தமிழர் சொல்லுவதொன்று.''
"பாவை யுண்டு என்றது ஸ்திரி பிரதிமை எழுதி யிருக்குமென்றபடி " - குறிப்புரை.
"கொல்லி மலையிலே ஒரு பாவையுண்டு; வகுப்பழகி தாயிருப்பது, அதுபோலேயாயிற்று. இவளுக்குண்டான ஏற்றமும் பிறப்பும்."

9. பழமொழிகள்

நாலாயிரப் பிரபந்த வியாக்கியானத்தில் சில பழமொழிகளும் கூறப்படுகின்றன. அவை:

பூப்போலே வந்து புலியானி கோளோ. ('பூப்போலே' என்றிருப்பது பூனைபோலே என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது).

மறக்குடி அறஞ்செய்யக் கெடும்.

கரும்பு தின்னக் கூலி கொடுப்போரைப் போலே.

ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலே அநாதரித்திருந்தான். (ஆனைக்குப்பு ஆடுதல் - சதுரங்கம் ஆடுதல்)

சண்டாளன் ஒத்துப்போகாது.

அம்மியைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இழிவாரைப் போலே.

அம்புக்குச் செல்லாத விடத்தை ஆசனத்தாலே திருத்துவோம்.

மூலையிற் கிடந்ததை முற்றத்திலே யிட்டோம்.

எருது கொடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்.

ஊமை கண்ட கனாவாய் விடமாட்டாததுபோல.

மிடறு தின்றால் சொறிய ஒண்ணாததுபோலே.

கண்ணாலப் பெண்டாட்டிக்கு உள்ள அவகாலமில்லை.

துடுப்பிருக்கக் கை வேகவேணுமே.

கள்ளரச்சம் காடு கொள்ளாது.
.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

10. தமிழ் நாட்டின் வடவெல்லை

திருப்பாணாழ்வார் அருளிய "அமலன் ஆதிப்பிரான்'' என்னும் பாசுரத்தில் திருப்பதி மலையை ''வடவேங்கட மாமலை'' என்று கூறினார். இதற்கு வியாக்கியானம் கூறுவது வருமாறு:

''வடவேங்கிடம் - தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம்."
பெரியவாச்சான் பிள்ளை உரை.

"திருமலை என்னாதே வடவேங்கடம் என்றது. தமிழர் தமிழுக் கெல்லை நிலம் அதுவாகச் சொல்லுகையாலே"
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை.

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி முதற் பத்தின் 8 ஆம் திருமொழியில், "செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே " என்று அருளியதற்கு, மேற்கண்டவாறே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் அருளியிருக்கிறார்; அதாவது:

"தமிழ்ப் பாழை நடமாடுகிறதுக்கும் எல்லையான நிலமாயிருக்குமிறே" (பாழை - பாஷை).

இதனால், அக்காலத்தில் திருவேங்கட மலையும் அதனைச் சார்ந்த நாடும் தமிழ் நாடாக இருந்ததென்பது தெரிகின்றது. பிற்காலத்தில் முகம்மதிய அரசர் விஜயநகர அரசரை வென்றபிறகு திருவேங்கடத்தில் தெலுங்கர் வந்து குடியேறினர் என்பது சரித்திரம் கூறுகிற வரலாறு.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 7, 1948

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...